Saturday, December 24, 2011

Merry Christmas and Happy New Year!


We wish you a Merry Christmas!
We wish you a Merry Christmas!
We wish you a Merry Christmas!
And a Happy New Year!

From our little girl's keyboard and Malli family!



Thursday, December 22, 2011

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி - பெரியாழ்வார் திருமொழி 1.3

'நாலாயிரம் கற்போம்' பத்தித் தொடரில் நான்காவது பகுதி இது. பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் மூன்றாம் திருமொழி இந்த 'மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனை யசோதை தாலாட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.
 
பாசுரம் 1 (22 Dec 2011)

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்

பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே தாலேலோ!

வையம் அளந்தானே தாலேலோ!


மாணிக்கங்களை இருபுறமும் கட்டி இடையில் வயிரங்களைக் கட்டி மாற்றில்லாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறிய தொட்டிலை மிகவும் விருப்பமுடன் பிரமன் உனக்காகத் தந்தான்! உன்னுடைய உடைமைகளை இரந்து பெறுவதற்காக குள்ள மாணவனாக வந்த கண்ணனே தாலேலோ! உன்னுடைமைகளான மூவுலகங்களையும் பெற்ற மகிழ்ச்சியில் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகங்களை எல்லாம் அளந்தவனே தாலேலோ!


---

பாசுரம் 2 (23 Dec 2011)


உடையார் கனமணியோடு ஒண்மாதளம்பூ

இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கினோடு

விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்

உடையாய் அழேல் அழேல் தாலேலோ!

உலகம் அளந்தானே தாலேலோ!

உன் இடுப்பின் அழகிற்கு ஏற்ற அழகிய ஒலி எழுப்பும் பொன்மணிகளோடு அழகிய பொன் மாதுளம்பூ இடையிடையே விரவிக் கோத்த அரைஞானை, காளை வாகனம் ஏறும் மண்டையோடு ஏந்தியதால் காபாலி என்று பெயர் உடைய ஈசன் அனுப்பிவைத்தான். எம்மை உடைய தலைவனே அழாதே அழாதே தாலேலோ! உலகம் அளந்தவனே தாலேலோ!

கனகம் = பொன்; கனகமணி என்பது இங்கே கனமணியென்று வந்தது.

--- பாசுரம் 3 (23 Jan 2012)
என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துவனாய் நின்றான் தாலேலோ
தாமரைக்கண்ணனே தாலேலோ


என் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ! தாமரைக்கண்ணனே தாலேலோ!

அவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான்.