Friday, December 17, 2010

திருமால் பெருமைக்கு நிகர் ஏது?

முக்கோடி ஏகாதசியை முன்னிட்டு...

Thursday, December 16, 2010

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு!

Saturday, November 20, 2010

கார்த்திகையில் கார்த்திகை நாள்

முழு நிலவு நாளில் எந்த நட்சத்திரம் அமைகிறதோ அதன் அடிப்படையில் மாதங்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன. சித்திரை நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் (சித்திரா பௌர்ணமி) அமைந்தால் அந்த மாதம் [மதி (நிலவு) --> மாதம்] சித்திரை மாதம். விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் அமைந்தால் அந்த மாதம் வைகாசி (வைசாகி --> வைகாசி). அப்படியே ஒவ்வொரு மாதத்திற்கும் பார்த்துக் கொண்டு வந்தால் கார்த்திகை நட்சத்திரத்தில் முழு நிலவு அமையும் மாதம் கார்த்திகை மாதம். திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் தீபத்திருநாள் என்றும் கொண்டாடப்படும் இந்தத் திருநாள் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாள். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விளக்கீடு என்னும் இந்தத் தீபத்திருநாள் பெரும் கொண்டாட்டமாக இருந்தது என்பதற்கு நிறைய தரவுகள் இருக்கின்றன.

திருவண்ணாமலையிலும் திருப்பரங்குன்றத்திலும் இன்னும் பல திருத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா தற்காலத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் திருமுருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மிக உகந்த நட்சத்திரமாக அமைவதால் திருக்கார்த்திகைத் திருநாள் முருகப்பெருமானுக்கும் மிக உகந்த திருநாளாக அமைகிறது.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்னும் நாலாயிரம் பாசுரங்களின் தொகுப்பான வைணவ பக்தி இலக்கியத்தில் ஓர் ஆயிரத்தைப் பாடிய நம்மாழ்வாரும் இன்னோர் ஆயிரத்தைப் பாடிய திருமங்கையாழ்வாரும் திருமுருகனுக்கு உகந்த நாட்களில் பிறந்திருக்கிறார்கள். முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். முருகனுக்கு உகந்த கார்த்திகையில் கார்த்திகை நாளான இன்று பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.


பேதை நெஞ்சமே! இன்றைக்கு என்ன பெருமை என்று அறியமாட்டாயோ?

ஏது பெருமை? இன்றைக்கு என்ன?

சொல்கின்றேன் கேள். பெரும்புகழ் கொண்ட திருமங்கைமன்னன் இந்த மாபெரும் பூமியில் வந்து உதித்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் இந்த நாள்.



மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.


ஆகா! இன்று திருமங்கைமன்னன் திருவவதாரத் திருநாளா?! அருமை! அவருடைய பெருமைகளை இன்னும் சொல்லுங்கள்.

நான்கு வேதங்களுக்கு ஒப்பான நான்கு தமிழ்ப் பனுவல்களை செய்தார் நம்மாழ்வார். வேதங்களுக்கு ஆறு பகுதிகள் என்னும் ஆறங்கம் உண்டு. அதே போல் நம்மாழ்வார் செய்த தமிழ் மறைக்கு ஆறங்கம் செய்தார் திருமங்கையாழ்வார். அப்படி ஆறங்கம் பாட அவர் அவதரித்த மிக்க பெருமையுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று மனம் மகிழ்ந்து அதனைக் காதலிப்பவர்களின் திருவடி மலர்களை நமக்கு பாக்கியம் என்று சொல்லி வாழ்த்துவாய் நெஞ்சமே!

அப்படியே செய்கிறேன்! இதோ வாழ்த்துகிறேன்!



வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர் மான வேல்.



எதிரிகளுக்கு காலன் ஆகிய பரகாலன் வாழ்க! கலியின் கொடுமையைக் குறைக்கும் கலிகன்றி வாழ்க! திருக்குறையலூரில் வாழும் தலைவன் வாழ்க! மாயோனை தனது வாளால் மிரட்டி அவனிடமிருந்தே நேரடியாக நாராயண மந்திரத்தை உபதேசம் பெற்ற திருமங்கை மன்னனின் தூய்மையான சுடர் விடும் வேல் வாழ்க வாழ்க!

நெஞ்சுக்கு இருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமய
பஞ்சுக்கு அனலின் பொறி பரகாலன் பனுவல்களே


அது மட்டுமா?! பரகாலன் பாடிய செந்தமிழ்ப் பனுவல்கள் நெஞ்சில் இருக்கும் அறியாமை என்னும் இருளைக் கடிந்து நீக்கும் தீபம்! எது செய்தாலும் எளிதில் அடங்காத, என்றைக்குத் தொடங்கியது என்று அறியாத பிறப்பு இறப்புச் சுழல் என்னும் கொடிய நஞ்சினை நீக்கும் நல்லதொரு அமுதம்! பழந்தமிழ் இலக்கணம் பேசும் ஐந்து துறைகளுக்கு நல்ல விளக்கமாக அமைந்த இலக்கியம்! வேதங்களில் சாரம்! வேற்று சமயங்கள் என்னும் பஞ்சுக்குவியல்களை அழிக்கும் அனலின் பொறி!


எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்கும் மனம் நீ எனக்கு தா!


இவ்வளவு பெருமை வாய்ந்த திருமங்கையாழ்வாரின் பனுவல்கள் என் நெஞ்சத்தில் எப்படி தங்கும்? எங்கள் கதியான இராமானுசமுனியே! எங்களது ஐயங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆண்ட தவத்தோர் தலைவனே! புகழ் பொங்கும் திருமங்கைமன்னன் தந்த ஆயிரம் மறைகளும் தங்கும் மனத்தை நீயே எனக்குத் தரவேண்டும்!

**

திருமங்கை ஆழ்வாருக்கு இன்னும் சில சிறப்புகள் உண்டு. எந்த ஆழ்வாருக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த ஆழ்வாருக்கு உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்). முருகனுக்கும் இவருக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்).

Tuesday, November 09, 2010

முதல் மூவரைப் போற்றும் இனியவை நாற்பது


சங்க இலக்கியத்தின் பகுதியான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று 'இனியவை நாற்பது'. இது இனியவற்றைப் பட்டியல் இடும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல். இது ஒரு தொகுப்பு நூல் இல்லை. ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல். நூலில் இருக்கும் நாற்பது பாடல்களின் அமைப்பினிலேயே இதன் கடவுள் வாழ்த்தும் இருக்கிறது. இவ்விரு காரணங்களால் இந்த நூலை இயற்றிய ஆசிரியரே கடவுள் வாழ்த்தையும் இயற்றினார் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். சேந்தன் என்பது இவரது இயற்பெயர் என்பதும், பூதன் என்பது இவரது தந்தையார் பெயர் என்பதும், இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்பதும், இவரது தந்தையார் தமிழ் ஆசிரியர் என்பதும் இந்த பெயரில் இருந்து தெரிகிறது. இவர் தந்தையார் தமிழ் ஆசிரியர்களில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் 'மதுரைத் தமிழாசிரியர்' என்ற சிறப்புப் பெயர் அடைந்திருக்கிறார். பிற்காலத்தில் மகாமகோபாத்யாய, மகாவித்வான் என்று ஆசிரியர்களில் சிறந்தவர்களுக்குச் சிறப்புப் பெயர் தந்து பெருமைப்படுத்தியதை இங்கே ஒப்பு நோக்கலாம். 'மதுரைத் தமிழாசிரியர்' என்பது பெருமைக்குரியதாக இருந்ததால் தன் பெயருடன் அதனையும் இணைத்தே இந்த நூலின் ஆசிரியர் சொன்னார் என்று எண்ணுகிறேன். பாரதி என்று முன்னோர்களில் ஒருவருக்குத் தரப்பட்ட பட்டத்தை அந்த குடிவழியில் வந்த ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வதை இங்கே ஒப்பு நோக்கலாம்.

இந்த நூலின் கடவுள் வாழ்த்துப்பாடலில் சிவன், திருமால், பிரமன் என்ற முப்பெரும் தேவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். சிவனை முதலிலும், திருமாலை அடுத்தும், பிரமதேவனை பின்னரும் இந்தப் பாடலில் போற்றுகிறார்.

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய்மாலையானைத் தொழல் இனிதே
முந்துறப் பேணி முக நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.


இந்தப் பாடலின் முதல் அடியில் இனிதான ஒரு பொருளையும், இரண்டாம் அடியில் இனிதான இன்னொரு பொருளையும், அடுத்த இரு அடிகளில் இனிதான இன்னொரு பொருளையும் கூறுகிறார். இந்த நூலில் நான்கு பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் இப்படியே மூன்று இனியவைகளைக் கூறும் முறை தொடர்கிறது.

கண் மூன்றுடையான் சிவபெருமான். மூன்று கண்கள் கொற்றவை, நரசிம்மன், விநாயகன், முருகன் என்பாருக்கும் உண்டு. இங்கே அன் விகுதியுடன் சொன்னதால் கொற்றவை இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. திருமால் அடுத்த அடியில் கூறப்படுவதால் நரசிம்மனும் இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. மும்மூர்த்திகளில் விநாயகனும் முருகனும் வருவதில்லை ஆதலால் மும்மூர்த்திகளைச் சொல்லும் இந்தப் பாடலில் அவர்களும் குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. முக்கண் முதல்வன் என்று சிவபெருமானே போற்றப்படுவதால் அவனே இங்கே குறிக்கப்படுகிறான் என்பது தெளிவு.

தாள் சேர்தல் என்றால் தஞ்சமாக, சரணாக அடைதல் என்று பொருள். தாளினை இடையறாது சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்தலும் அவற்றைத் தஞ்சமாக அடைதலும் மிக இனிது என்று முதல் அடி கூறுகிறது. வைணவமே திருவடிகளின் பெருமைகளைப் பரக்கப் பேசும்; தஞ்சமடைதலை மீண்டும் மீண்டும் பேசும் என்பதே நாம் அறிந்தது. இங்கோ சைவத்திலும் திருவடிகளின் பெருமைகளைக் கூறுதல் உண்டு என்று காட்டுவது போல் இந்த வரி அமைந்திருக்கிறது.

மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பிற்காலத்தில் தேவாரப் பதிகத்தில் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இனிமையே விரித்துக் கூறப்பட்டது போலும்.

இனிமை என்று மட்டும் கூறாமல் மிகவும் இனிமை என்று அழுத்திக் கூறுவது போல் 'கடிது இனிதே' என்கிறார் ஆசிரியர்.

அடுத்த அடியில் துழாய் மாலை சூடும் திருமாலைப் போற்றுவதன் இனிமையைப் பேசுகிறார். தமிழ்க்கடவுள் முருகன் மட்டுமே என்றொரு வழக்கு இருக்க, முருகனும் திருமாலும் சிவனும் கொற்றவையும் தொன்மையான தமிழர் கடவுளரே என்று நானும் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து கூறி வருகிறோம். தொன்மையான தொல்காப்பியம் திருமாலைப் போற்றும் தரவுகள் நிறைய இருக்கின்றன. திருமாலின் அந்தத் தொன்மையை வலியுறுத்துவதைப் போல் 'தொன்மையும் மாட்சிமையும் கொண்ட துழாய்மாலையான்' என்று அடைமொழிகளுடன் கூறுகிறார் ஆசிரியர்.

தற்போது கிடைக்கும் பழந்தமிழ் நூல்களிலேயே முதல் நூலான தொல்காப்பியத்திலேயே குறிக்கப்படுபவன் திருமாலாகிய மாயோன் என்பதால் அவனது தொன்மை விளங்குகிறது. பெருமை மிக்கதை முதலில் சொல்வது என்ற தமிழ் மரபின் படி மாயோனை முதலில் சொன்னது தொல்காப்பியம் - அதனால் திருமாலின் மாட்சிமையும் விளங்குகிறது. இவ்விரண்டையும் இங்கே அடைமொழிகளாகச் சொல்கிறார் ஆசிரியர்.

துழாய் மாலையானைத் தொழுவது இனிது என்கிறார் ஆசிரியர். தொழுவது என்றால் என்ன? வணங்குவது மட்டுமா? தொண்டு செய்வதும் தானே தொழலில் அடங்கும். திருமாலுக்குத் தொண்டு என்னும் கைங்கரியம் செய்வதே வாழ்வின் பயன் என்றும் திருமாலுக்குத் தொண்டு செய்து அடியவனாய் இருப்பதே உயிரின் இயல்பு என்றும் வைணவ தத்துவம் கூறும். தொழல் என்னும் சொல்லைச் சொல்லி அந்தத் தத்துவங்களை அனைத்தையும் நினைவூட்டி விட்டார் ஆசிரியர்.

பிரமன், திருமால், சிவன் என்று வரிசைப்படுத்தி முதல் மூவரைச் சொல்வது மரபு. அந்த மரபிற்கு மாறாக சிவன், திருமால், பிரமன் என்று சொல்கிறாரே இங்கு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த மரபினை நானும் அறிவேன் என்று சொல்வதைப் போல் அடுத்த அடியினை எழுதுகிறார் சேந்தனார்.

முந்துறப் பேணி என்று சொன்னதன் மூலம் சிவன், திருமால் இவர்களுக்கு முன்னரே மக்களால் போற்றப்படுபவன் பிரமன் என்று சொல்லாமல் சொல்கிறார். பிரமனை நான்முகன் என்று குறிப்பதும் மரபே. அதனை ஒட்டி இங்கேயும் முகனான்கு உடையான் என்று சொல்கிறார் ஆசிரியர்.

சிவபெருமானின் தாள் சேர்தல் இனிது; திருமாலைத் தொழல் இனிது; ஆனால் பிரமதேவனையோ சென்று அமர்ந்து மறைகளால் ஏத்துதல் இனிது. வேதன் என்றும் வேதமுதல்வன் என்றும் நான்முகனை அல்லவோ சொல்வார்கள். அந்த மரபின் படி வேதங்களை ஓரிடத்திற்குச் சென்று அமர்ந்து விரிவாக ஓதி நான்முகனை வணங்குவது இனிது என்று இங்கே சொல்கிறார் ஆசிரியர்.

இந்தப் பாடலைப் படிக்கும் போதும் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday, November 02, 2010

இன்னுமா சீருடை கொடுக்கிறீர்கள்?

இந்த வருடம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பயணம் மேற்கொண்ட போது இயன்ற வரையில் ஏழை மாணவர்களுக்கு உதவிகளைச் செய்து வந்தோம். அந்த உதவிகளைப் பற்றி 'மதுரைக்குப் போகலாமா', 'பாட்டி படித்த பள்ளி', 'கண்ணிழந்தார்க்கு ஒரு கைவிளக்கு' என்ற தலைப்புகளில் எழுதியிருந்தேன்.

அந்த உதவிகள் செய்வதற்கு சீனா ஐயா பெரும் துணை புரிந்தார். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், நான் கேட்ட ஒரே மாதத்தில், உதவி பெறத் தகுதியான பள்ளிகளையும் மாணவர்களையும் கண்டறிந்து நாங்கள் மதுரை சென்று சேருவதற்கு முன்னரே ஒரு பட்டியல் தந்தார். மதுரையில் இருக்கும் போது சீனா ஐயா தந்த பட்டியலில் உள்ள பலருக்கும் நேரில் சென்று உதவிகள் செய்ய முடிந்தது. வேறு பயணத்திட்டங்கள் இருந்ததாலும் பெங்களூருவில் இரு வாரம் பணிக்காகச் செல்ல வேண்டி இருந்ததாலும் பட்டியலில் இருந்த அனைவருக்கும் நேரில் சென்று உதவ முடியவில்லை. அதனால் எங்கள் சார்பாக சீனா ஐயா நேரம் கிடைக்கும் போது பட்டியலில் மீதமிருந்த பள்ளிகளுக்குச் சென்று உதவி புரிய வேண்டுமென்று வேண்டிக் கொண்டு பணத்தை அவரிடம் தந்தேன். பிறருக்கு உதவி செய்வதில் முன் நிற்கும் ஐயாவும் அப்படியே செய்தார்.

சென்ற செப்டம்பர் மாதம் ஐயாவின் திருமண நாளன்று உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்பட்டி, நடுமுதலைக்குளம் ஊர்களில் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு சீருடைகளும், இன்னொரு பள்ளிக்கு ஒலிப்பெருக்கி மின்னணுக்கருவிகளும் எங்கள் சார்பில் வழங்கியிருக்கிறார். ஐயாவிடம் இருந்து இந்தத் தகவல் எனக்கு வந்து வெகு நாளாகிவிட்டது. பதிவில் இடாமல் காலம் தாழ்த்தியது நான் தான். ஐயா சரியான காலத்திற்குள்ளாகவே சீருடை வழங்கிவிட்டார் - அதனால் இந்த இடுகையின் தலைப்பு தவறு! :-)

பதிவர் நண்பர் ஜெரி ஈசானந்தன் ஐயாவையும் அம்மாவையும் அழைத்துச் சென்று இந்தப் பணியில் உறுதுணையாக இருந்திருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர் எடுத்த படங்களை இங்கே பார்க்கலாம். சில படங்கள் இங்கே இடுகையிலேயே உங்கள் பார்வைக்காக.









ஐயாவிற்கும் அம்மாவிற்கும் நண்பர் ஜெரிக்கும் மிக்க நன்றி.

Wednesday, October 27, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - 2





'நாணமும் இல்லை. ஆண்மையும் இல்லை. இரண்டுமே காதல் என்னும் கடும்புனலால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. என் காதல் நிறைவேற மடல் ஏறியே தீருவேன்' என்று சொல்லிக் கொண்டே வரும் காதலன் வாய்மொழியாக இன்னும் சில குறள்கள் இந்த அதிகாரத்தில் இருக்கின்றன.

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண்.


என் காதலியை நினைத்து நினைத்து எல்லோரும் உறங்கும் இரவிலும் என் கண் உறங்குவதே இல்லை. அதனால் மடல் ஊர்தலைப் பற்றி நடு இரவிலும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் - மடல் ஏறுவதைப் பற்றி நடு இரவிலும் நினைப்பேன்

மன்ற - உறுதியாக

படல் ஒல்லா பேதைக்கு என் கண் - பேதையான என் காதலியை எண்ணி என் கண்கள் மூடாது.

'மடல் ஏறுவேன் மடல் ஏறுவேன் என்கிறீர்களே. இதோ பொழுது கழிந்துவிட்டது. இனி மேல் எப்படி மடல் ஏறப் போகிறீர்?' என்று வினவிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'பொழுது சாய்ந்துவிட்டது; இரவு வந்துவிட்டது என்று ஊரார் வேண்டுமானால் உறங்கலாம். ஆனால் என் காதலியின் நினைவால் என் கண் உறங்குவதே இல்லை. அதனால் நள்ளிரவானாலும் மடல் ஏறுதல் பற்றி நான் நினைக்கிறேன். அதனை செயல்படுத்தவும் செய்வேன்' என்றான்.

இன்றைக்குப் போய் நாளை வாரும்; தலைவியைக் காணலாம் என்று தோழி சொல்லாமல் இப்போதே இருவரையும் கூட்டி வைக்க வேண்டும் என்பது காதலன் நோக்கம். அதனால் நடு இரவானாலும் நீ எங்களைச் சேர்த்து வைக்கவில்லை என்றால் மடலேறுவேன் என்கிறான்.

***

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல்.


கடல் போலக் கரையற்ற காதல் நோயால் வருந்தினாலும் அதை நீக்குவதற்காக மடல் ஏறத் துணியாத பெண்ணினத்தைப் போல் பெருமையுடையது எதுவுமே இல்லை.

கடல் அன்ன காமம் உழந்தும் - கடலைப் போல் கரையில்லாத காதல் நோய் உற்று வருந்தினாலும்

மடல் ஏறாப் - மடல் ஏறுவதைப் பற்றி எண்ணாத

பெண்ணில் பெருந்தக்கது இல் - பெண்ணைப் போல் பெருமையுடைய ஒன்று இல்லை.

'பேதை என்று எங்கள் தலைவியைச் சொன்னீரே. பேதையர் அன்றோ காம நோயால் வருந்தி மடல் ஏறத் துணிவார்கள். பேரறிவினராகிய நீர் அப்படி மடல் ஏறத் துணியலாமா? அது உம் அறிவுண்மைக்குப் பொருந்துமா?' என்று தோழி கேட்க, 'பெண்களைப் போல் பெருமையுடைய இனம் இல்லை. கடல் போல் காதல் நோய் இருந்தாலும் அதனை நீக்க பெண்கள் மடலேறுவதில்லை. நான் பெருமை மிக்க பெண்ணினத்தைச் சேர்ந்தவன் இல்லை. அதனாலே தான் என்னால் இத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை' என்றான் காதலன்.

***



தன் காதல் எப்படி எல்லாம் தன்னையும் தன் நாணத்தையும் மீறி வெளிப்படுகின்றது என்று தலைவி சொல்வதாக அமைகின்றன அடுத்து வரும் குறட்பாக்கள்.

நிறை அரியர் மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும்.


எனது காதல் பெருக்கு, நற்குணங்கள் உள்ளவள் இவள்; அதனால் இவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் நினைக்காது; எளியவள் இவள்; அதனால் இவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று நினைக்காது. என்னையும் என் நாணத்தையும் மீறி என் காதல் மறைவாக இருந்த நிலை நீங்கி ஊரறிய மன்றத்தில் ஏறும்.

நிறை அரியர் மன் - குணங்களால் சிறந்தவர் அதனால் அரியவர் (என்றோ)

அளியர் - எளியவர் (என்றோ)

என்னாது - என்று நினைக்காது

காமம் - என் காதல்

மறை இறந்து - மறைவிலிருந்து நீங்கி

மன்று படும் - எல்லோரும் அறிய வெளிப்படும்

நற்குணங்கள், நல்ல பண்புகள் உடையவரைக் காம நோய் 'இவர்கள் அரியவர்' என்று எண்ணி விட்டுவிடலாம். இல்லையேல் 'எளியவர்' என்று எண்ணி விட்டுவிடலாம். இவ்விரண்டும் இங்கே நடக்கவில்லை. இவளது நிறை எல்லாம் நீங்கும் படி ஊரார் அறிய இவள் காதல் தானே வெளிப்படுகிறது.

***

அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.


இப்படியே மறைந்து இருந்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணியோ என்னவோ என் காம நோய் இவ்வூரின் நடுவே வெளிப்பட்டு அம்பலும் அலரும் ஆயிற்று.

அறிகிலார் எல்லாரும் என்றே - எல்லோரும் அறியவில்லை என்று எண்ணிக் கொண்டு

என் காமம் - என் காதல்

மறுகின் மறுகும் மருண்டு - என்னையும் மீறி மிகவும் வேகவேகமாக வெளிப்பட்டுவிட்டது

காதல் நோய் எத்தனை தான் மீறினாலும் என் நாணத்தால் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தேன். இப்படியே மறைவாகவே இருந்தால் யாரும் என் காதலை அறியமாட்டார்கள் என்று நினைத்ததோ என்னவோ என் காதல். ஊரார் அறிய மன்றுபட்டது.

***


யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாதவாறு.


என் கண்ணெதிரேயே என் காதலைக் குறித்து நான் பட்ட பாடு தான் படாத அறிவில்லாதவர் நகைக்கின்றார்கள்.

யாம் கண்ணின் காண நகுப - நான் கண்ணால் காணும் படி நகைக்கிறார்கள்

அறிவில்லார் - அறிவில்லாதவர்கள்

யாம் பட்ட தாம் படாதவாறு - நான் படுவதை அவர்கள் படாததால்

'அலர் தூற்றுவது மட்டும் இல்லை. நான் காணவே என் கண் எதிரேயே சிலர் நகுகின்றார்கள். நான் பட்ட பாடு அவர்கள் பட்டிருந்தால் காதல் நோயின் கடுமை பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கும். அந்த அறிவு இல்லாததால் தான் இப்படி நகைக்கிறார்கள்' என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள் தலைவி.

'என் உணர்வுகளை நீ அறிய மாட்டாய். ஏனென்றால் நானல்ல நீ' என்று சொல்வது போல் ஏதோ ஒரு அண்மைக்கால பாட்டும் வருமே? பாடல் வரிகள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா?

Saturday, October 23, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - 1




வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாலோ ஊரார் பழிச்சொற்களை அஞ்சியோ தலைவியைக் காண முடியாமல் தவிக்கும் தலைவன், தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்று கூறுவது 'நாணுத்துறவுரைத்தல்' என்னும் இந்த அதிகாரம்.

***

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி.

காதல் மிகுந்ததால் வருந்தி காதலியைக் காண முயன்றும் இயலாதவருக்கு தமது உயிரைக் காக்கும் காப்பாக அமைகின்றவற்றில் மடல் ஏறுதலே மிகுந்த வலிமையுடையதாகும்.

காமம் உழந்து வருந்தினார்க்கு - காதல் மிகுந்து முயன்று வருந்தியவர்களுக்கு

ஏமம் - காப்பாக அமைவதில்

மடல் அல்லது இல்லை வலி - மடலை விட வலிமையானது இல்லை.

காதலன் கூற்றாக அமைகிறது முதல் குறள். காதலியைக் கண்டு இயற்கைப் புணர்ச்சியில் மகிழ்ந்து காலம் கழிக்க உதவியாக இருந்த தோழி இப்போது அந்த உதவியைச் செய்ய மறுத்த போது காதல் நோயால் மிகுந்த துன்பம் கொண்ட தலைவன் மடல் ஏறுவதை விட வேறு வழி தனக்கு இல்லை என்று கூறுகிறான்.

தலைவி காவலில் இருந்தாலும் தோழியின் உதவி இருந்தால் காவலைக் கடந்து தனது காதலியைக் காண்பான் தலைவன். பெற்றோரும் உற்றோரும் அறியாமல் தலைவனும் தலைவியும் சேர்ந்து வீட்டை விட்டுச் செல்வதற்கும் (உடன்போக்கு) தோழியின் உதவி வேண்டும். இப்படி காதல் மிகுந்து வாடுபவர்களுக்கு காப்பாக அமையும் சில வழிகள் உண்டு. இங்கே அவை பயன் தராமையால் மடல் ஏறுவதே சிறந்த காப்பு. அதனால் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்கிறான் காதலன்.

***

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.


காதலியின் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைப் பொறுக்காத உடம்பும் உயிரும் நாணத்தை நீக்கி வேறிடத்தே நிறுத்திவிட்டு மடல் ஏறும்.

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - பொறுக்க முடியாத உடம்பும் உயிரும் மடல் ஏறும்

நாணினை நீக்கி நிறுத்து - நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு.

'ஊராரின் மதிப்பில் உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர். அந்த மதிப்பை இழக்கும் படி உமது நாணத்தை விட்டுவிட்டு உம்மால் மடல் ஏற இயலாது' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'காதல் மிகுதியால் பிரிவுத்துன்பம் மேலிட்டு என் உடலுடன் உயிர் நிற்காது போலிருக்கிறது. அதனால் எனது நாணத்தை தனியே நீக்கி நிறுத்திவிட்டு உயிரும் தூண்ட உயிரும் உடலும் இரண்டுமே சேர்ந்து மடல் ஏறும். இது உறுதி' என்றான் காதலன்.

நாணம் உடலைக் கூனிக் குறுகச் செய்யும். ஆனால் உயிரும் இங்கே துன்பப்படுவதால் அந்த உயிரின் தூண்டுதலால் துன்பத்தைப் பொறுக்காத உடலும் உயிரும் ஒருங்கே மடல் ஏறத் துணிந்துவிட்டன என்கிறான் காதலன்.

***



நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

நாணமும் நல்ல ஆண்மைக்குணமும் முன்பு உடையவனாக இருந்தேன். ஆனால் இன்றோ காதலில் துன்பப்படுபவர்கள் ஏறும் மடல் என்பதை மட்டுமே உடையவனாக ஆனேன்.

நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணத்தொடு நல்லாண்மையும் முன்னர் உடையவனாக இருந்தேன்.

இன்று உடையேன் காமுற்றார் ஏறும் மடல் - இன்றோ காதல் கொண்டவர்கள் ஏறும் மடலை உடையவனாக இருக்கிறேன்.

'இழிவிற்கு அஞ்சும் நாணத்தை மட்டுமே உம்மால் விட இயலும். ஒன்றிற்கும் தளராத ஆண்மைக் குணம் உம்மிடம் இருக்கிறது. அதனால் காதல் துன்பத்தால் தளர மாட்டீர். மடலும் ஏற மாட்டீர்' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறும் மறுமொழி இது.

'நாணத்தையும் எதற்கும் தளராத ஆண்மையையும் உடையவனாக முன்னர் இருந்தேன். ஆனால் இப்போதோ காதலியின் பிரிவால் நாணத்தையும் ஆண்மைக் குணத்தையும் இழந்து காதலர்களின் ஒரே கதியான மடல் ஏறுதல் மட்டுமே உடையவனாக இருக்கிறேன்' என்று கூறுகிறான் காதலன்.

***



காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

நாண், நல்லாண்மை என்னும் படகுகளை காதல் என்னும் காட்டுவெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே.

காமக் கடும்புனல் - காதல் என்னும் கடுமையான வெள்ளம்

உய்க்குமே - அடித்துக் கொண்டு செல்லுமே

நாணொடு நல்லாண்மை என்னும் புணை - நாணத்தொடு ஆண்மை என்னும் மிதவைகளை.


'எல்லா துன்பங்களையும் உமது நாணம், எதற்கும் தளராத ஆண்மை என்னும் குணங்களால் தாண்டுவீர்களே' என்ற தோழியிடம் 'நாணம், நல்ல ஆண்மை என்னும் மிதவைகள் வேறு ஆறுகளைக் கடப்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். இந்த காதல் என்னும் காட்டு வெள்ளத்தைக் கடப்பதற்கு உதவவில்லை. இந்தக் கடும்புனல் அவற்றை அடித்துக் கொண்டு செல்கிறது' என்று கூறினான் காதலன்.

***

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையல்களை உடைய என் காதலி தான் மாலை நேரத்தில் என்னை நோகவைக்கும் துயரத்தையும் அந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல் ஏறும் மடலையும் தந்தாள்.

தொடலைக் குறுந்தொடி தந்தாள் - மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையல்களை உடைய தலைவி தந்தாள்

மடலொடு - மடல் ஏறுதலுடன்

மாலை உழக்கும் துயர் - மாலை நேரத்தில் என்னை நோகவைக்கும் துயர்.

'நாணத்தையும் ஆண்மையையும் விடும்படியான இந்த நிலைமையை நீர் எப்படி அடைந்தீர்?' என்று வியந்த தோழியிடம் 'இந்தத் துன்பத்தையும் மடலேறும் துணிவையும் தந்தவள் உன் தலைவி தான்' என்று சொல்கிறான் தலைவன்.

காதல் நோய் எல்லா நேரத்திலும் துன்பத்தைக் கொடுத்தாலும் மாலை நேரத்தில் மிகுதியான துன்பத்தைக் கொடுக்கும் என்பதால் அதனை 'மாலை உழக்கும் துயர்' என்றான் தலைவன்.

தலைவி மிகவும் மென்மையானவள் என்றும், அவள் தானே ஒன்றைச் செய்யும் வயதினள் இல்லை; தோழியின் காவலில் இருக்கும் இளவயதினள் என்றும் கூறுவதற்காக மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையலை அணிந்தவள் என்று தலைவியைக் குறித்தான். அவள் தந்த நோயை அவளே போக்க வேண்டும். அவள் தோழியின் காவலில் இருப்பதால் தோழியே அதற்கு உதவ வேண்டும் என்று குறிப்பால் வேண்டினான்.

(தொடரும்)

Friday, October 15, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - முன்னுரை

தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் அளவில்லாத காதல் கொண்டு, தாய் தந்தையர் உற்றார் உறவினர் ஊரார் என யாரும் அறியாமல், சில நேரங்களில் நெருங்கிய தோழியர்களும் அறியாமல், திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழ்வது சங்க காலத்தில் ஏற்கப்பட்ட இலக்கிய மரபாக இருந்தது. அதனைக் களவியல் என்றார்கள். அனைவரும் அறிய மணம் செய்து கொண்டு வாழ்ந்ததை கற்பியல் என்றார்கள்.

தமிழ்ப்பெருந்தெய்வங்களான கண்ணனும் முருகனும் இரு வகைகளிலும் திருமணம் செய்திருப்பதாகச் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தொழுனைக் கரையில் அண்டர் மகளிரை கண்ணன் களவு மணம் செய்ததையும் ஏறுகள் ஏழினைத் தழுவி நப்பின்னையைக் கற்பு மணம் செய்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதே போல் முருகன் வள்ளியை களவு மணம் புரிந்ததையும் கற்பின் வாணுதலான தேவசேனையை கற்பு மணம் புரிந்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ்க்கடவுளர்கள் இருவரும் இவ்விரு வகை மணங்களும் செய்திருக்கும் செய்தி இவ்விரு வகை மணங்களும் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தன என்பதை காட்டுகிறது.

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வகைகளில் பாக்களை உடைய வள்ளுவத்தை இயல்களாகவும் முன்னோர் பகுத்து வைத்திருக்கிறார்கள். இன்பத்துப்பாலில் அப்படி அமைந்த இயல்கள் இரண்டு - களவியல், கற்பியல்.

இது வரை இந்தத் தொடரில் களவியலில் அமைந்த 'காதற்சிறப்பு உரைத்தல்' என்ற அதிகாரம் வரை பொருள் கண்டோம். அந்த அதிகாரத்தில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே உள்ள அளவில்லாத அன்பைக் காதலை உரைக்கும் அவர்களின் வாய்சொற்களைக் கண்டோம்.

களவியலில் நாட்கள் மகிழ்வுடன் சென்றன அவ்விருவருக்கும். அரசல் புரசலாக ஊராருக்கு இவர்களின் களவொழுக்கம் தெரிய வந்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் அலர் பேசத் தொடங்கினர்; அதாவது சாடைமாடையாகக் கேலி பேசத் தொடங்கினர். அதுவரையில் இவ்விருவரும் இணைந்து இன்பம் துய்ப்பதற்கு உதவியாக இருந்த தோழியும் இவர்கள் சந்திப்பைத் தடுக்கத் தொடங்கினாள். பிரிவினால் காதலர்களின் காதல் பெருகியதே ஒழிய குறையவில்லை.

சங்க காலத்தில் இப்படி பிரிவினால் வருந்திய காதலன் தனது காதல் நோய் தீர மடலேறுதல் என்றொரு வழியைப் பின்பற்றியதாக இலக்கிய மரபு கூறுகிறது. ஊரார் கேலி பேசுவார்களே என்று எண்ணி நாணாமல் அந்த நாணத்தைத் துறந்து மடலேறுவேன் என்று கூறிய வாய்மொழிகளைக் கூறும் அதிகாரம் என்பதால் இந்த அதிகாரத்திற்கு 'நாணுத்துறவுரைத்தல்' என்ற பெயர் அமைந்தது.

மடல் என்றால் என்ன? அதில் ஏறுதல் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

பனை மரத்தின் மட்டையைத் தான் மடல் என்றார்கள். அது இரண்டு பக்கமும் கூராக இருக்கும். குதிரையின் உருவத்தை அந்த கூரான பனை மட்டைகளால் செய்து, கீழே உருளை வைத்து, அதனை உருட்டிக் கொண்டு ஒரு நாற்சந்தியில் நிறுத்தி, அதன் மேல் ஏறி அமர்ந்து கொள்வான் காதலன். அப்போது அவன் மானத்தை மறைக்கும் அளவிற்கு ஆன உடையை மட்டுமே அணிந்திருப்பான். உடல் முழுவதும் சாம்பலைப் பூசியிருப்பான். கையில் காதலியின் உருவத்தை வரைந்த ஓவியத்தை வைத்துக் கொண்டு அதனையே பார்த்துக் கொண்டிருப்பான். சில நேரம் காதலன் ஏறி அமர்ந்திருக்கும் அந்த மடற்குதிரையைச் சிறுவர்கள் தெருத் தெருவாக இழுத்துச் செல்வார்கள்.

இப்படி நாணத்தை விட்டு தன் காதலை ஊரறிய வெளிப்படுத்தி மடலேறிய காதலனைக் கண்ட ஊரார்கள் அவனது அடக்க இயலா காதலை உணர்ந்து காதலியின் வீட்டாருடன் பேசி இருவரையும் இணைத்து வைப்பார்கள்.

மடலேறுவேன் என்று காதலன் கூறுவதும் மடலேறாதே என்று தோழி மறுத்துரைப்பதும் என்றே தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலான இடங்களில் வந்துள்ளது. அதனால் சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் இந்த மரபு உண்மையில் இருந்திருக்கலாம்; ஆனால் சங்க காலத்தில் அதனைப் பேசுவது மட்டுமே மரபாக இருந்திருக்கும் என்று தேவநேயப் பாவாணர் எண்ணுகிறார்.

இருக்கலாம். ஆனால் 'காதலன் சும்மா பயமுறுத்துகிறான். உண்மையிலேயே மடல் ஏறும் மரபு இப்போது இல்லை' என்று தோழிக்குத் தெரிந்திருந்தால் அவள் மீண்டும் மீண்டும் காதலனிடம் மடலேறாதே என்று மறுத்துரைத்திருக்க மாட்டாள். இலக்கியங்களில் அப்படி மறுத்துக் கூறுதல் மீண்டும் மீண்டும் வருவதால் அப்படி ஏறிய காதலர்கள் சில பேராவது இருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். பேதையர் என்று பெண்களைச் சொன்னாலும் வெற்றுப் பயமுறுத்தலுக்கெல்லாம் பயப்படும் அளவிற்குச் சங்க கால மகளிர் பேதையர்களாக இருந்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.

நாணுத்துறவுரைத்தல் என்ற இந்த அதிகாரத்தில் சில குறட்பாக்கள் காதலன் கூறுவதாகவும் சில குறட்பாக்கள் காதலி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றன. அடுத்த பகுதிகளில் அந்த குறட்பாக்களையும் அவற்றின் பொருட்களையும் பார்ப்போம்.

அன்பன்,
குமரன்.

குறிப்பு: இந்த முன்னுரை பிடித்திருக்கிறதா? இது போல் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன் முன்னுரை வேண்டுமா? இன்பத்துப்பால் அதிகாரங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை பார்க்க இயலும் என்று நினைக்கிறேன். அந்த இடைவெளி சரியான இடைவெளி தானா? இடைவெளியைக் குறைக்க வேண்டுமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Friday, October 08, 2010

ஓர் உருவம் ஒரு பெயர் இல்லாததற்கு ஆயிரம் உருவங்கள் ஆயிரம் திருப்பெயர்கள்!


உங்கள் ஊர் திருக்கோவிலில் நீங்கள் கண்டு மகிழ்ந்த தெய்வ அலங்காரங்களை தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து வணங்க முடியாத நிலையா உங்களுக்கு?! அதனால் ஏங்குகின்றீர்களா?

திருவிழாக்கள் நடக்கும் போது நாம் அங்கில்லையே என்று எண்ணி வருந்தியதுண்டா?

இடுகை இடும் போது அலங்காரத்துடன் கூடிய தெய்வத் திருமேனிகளின் படம் வேண்டுமென்று கூகிளாரைக் கேட்டு அவர் நீங்கள் விரும்பும் படங்களைத் தரவில்லையா?

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நமது கைலாஷி ஐயாவின் பதிவுகளுக்கே!

கைலாய யாத்திரையை மேற்கொண்டவர் என்பதால் கைலாஷி! அஹோபில யாத்திரையும் மேற்கொண்டவர்! முருகான (அழகான) தெய்வத் திருமேனிகளை அழகாகப் படம் பிடித்துத் தன் பதிவில் இட்டு அனைவருக்கும் ஆனந்தம் தருகிறார் இந்த கைலாஷி முருகானந்தம்! எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது இவரது பணிவும் பண்பும். இவருடைய பணிவும் பண்பும் பதிவுகளில் இருக்கும் ஒவ்வொரு சொல்லிலும் துலங்கும்!

கொஞ்சமே கொஞ்சம் இலக்கியம் தெரிந்தவர்கள் எல்லாம் அனைத்தும் அறிந்தவர் போல் ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று யாராவது அழைத்தால் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் போது ஆழ்வார் அருளிச்செயல்களும் நாயன்மார் தேவாரமும் நன்கு அறிந்து தகுந்த இடத்தில் தகுந்த வகையில் தகுந்த பாடல்களை இட்டு இவர் எழுதுவதைப் பார்த்தால் இவரே ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று சொல்லத் தோன்றும். இவரும் மற்ற ஆன்மீக பதிவர்களும் மலையும் மடுவும் போன்று என்று சொன்னாலும் தகும்!

இறையுருவங்களில் எனக்கு பேதமில்லை பேதமில்லை என்று பறை சாற்றிக் கொண்டே முருகன், கண்ணன், சிவன், அம்மன் என்று நேரடியாகவும் மறைவாகவும் பிற ஆன்மிகப் பதிவர்கள் பிதற்றிக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் பேசாமல் கருமமே கண்ணாய் சேவையே தேவையாய் ஆலய தரிசனங்கள் செய்து, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எண்ணி தெய்வத் திருப்படங்களைத் தொடர்ந்து இட்டு வரும் கைலாஷி ஐயாவின் பதிவுகளை நீங்களும் தொடர்ந்து பார்த்துப் படித்துப் பாராட்டி வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

மேலே உள்ள படம் கைலாஷி ஐயாவின் பதிவில் இருந்து சுபவரம் என்ற இதழ் எடுத்து இட்ட படங்களின் தொகுப்பு. ஐயாவைப் பற்றிய சிறு குறிப்பும் அதில் இருக்கிறது.

கைலாஷி முருகானந்தம் ஐயாவின் பதிவுகள்:

அன்னையின் நவராத்திரி: அன்னையின் நவராத்திரி அலங்காரப் படங்கள்

ந்ருஸிம்ஹர்: விண்ணவனின் அலங்காரப் படங்கள்

கைலாய மானசரோவர் யாத்திரை: திருக்கயிலாய தரிசனப் படங்கள்

வைகுந்த ஏகாதசி: தமிழ்ப்பெருவிழாவான ஆழ்வார் அருளிச்செயல் விழா படங்கள்

கயிலையே மயிலை: திருமயிலை திருவிழா படங்கள்

கருடசேவை: புள்ளேறும் பெருமாளின் படங்கள்

அம்பலத்தரசே அருமருந்தே: சிவாலயங்களின் படங்கள்

திருப்பாவை: ஆண்டாளின் திருப்பாவையின் விளக்கங்கள்

திருவெம்பாவை: மாணிக்கவாசகரின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கங்கள்

அன்பன்,
குமரன்.

குறிப்பு: தொடர்ந்து இப்படி என்னைக் கவர்ந்த பதிவுகளை/பதிவர்களைப் பற்றி எழுதலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

Friday, September 10, 2010

பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய்!

நான்கு விதமான பாவகைகளில் பாடல்களை அந்தாதித் தொடையாக எழுதுவது 'நான்மணிமாலை' எனப்படும். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விநாயகர் மீது அப்படியொரு நான்மணிமாலை எழுதியிருக்கிறார். மணக்குள விநாயகரைப் பற்றி அடிக்கடி இந்த நான்மணிமாலையில் சொல்வதால் புதுச்சேரியில் இருக்கும் போது இதனை இயற்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த 'விநாயகர் நான்மணிமாலை'யில் இது வரை எட்டு பாடல்களுக்கு விளக்கம் பார்த்திருக்கிறோம். பிள்ளையார் சதுர்த்தியான இன்று (11 Sept 2010) அடுத்த பாடலுக்கு விளக்கம் காண்போம். இந்தப் பாடல் வெண்பா வகை. சென்ற பாடல் 'களித்தே' என்று நிறைவுற்றது. அந்தாதித் தொடை என்பதால் இந்தப் பாடல் 'களியுற்று' என்று தொடங்குகிறது.



களியுற்று நின்றுக் கடவுளே இங்குப்
பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக்
கல்வி பல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல் வினைக் கட்டெல்லாம் துறந்து!


இன்பமாக வாழ்வதே உயிர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. ஆனால் அப்படி இன்பமாக வாழும் போது உலகத்தோடு ஒட்ட ஒழுகி, பெரியோர் பழித்தவற்றை செய்யாமல் விட்டு, அவர்கள் புகழ்வனவற்றை தவறாமல் செய்து, பழியின்றி வாழ்தலும் மனிதர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் போலும் இவை இரண்டையும் சேர்த்துக் கடவுளிடம் வேண்டுகிறார் பாரதியார்.

களி உற்று நின்றுக் கடவுளே இங்குப் பழி அற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய்

இப்படி இன்பமாக இவ்வுலகில் வாழ்வதற்கு பழியற்று வாழ்வது மட்டும் போதாது போலும். அறிவு ஒளியும் பெற வேண்டியிருக்கிறது. அதற்கு பலவிதமான கல்விகளைக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டியிருக்கிறது. அதனால் அவ்விரண்டையும் அடுத்து வேண்டுகிறார் பாரதியார்.

ஒளி பெற்றுக் கல்வி பல தேர்ந்து

அதுவும் போதாது போலும். கடமைகள் என நான்குவிதமான கடமைகளைச் சென்ற பாடலில் சொன்னார். 'தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், உலகெங்கும் காக்கும் ஒருவனைப் போற்றுதல்' - இவை நான்கே இந்தப் பூமியில் எவருக்கும் கடமை என்று சொன்னார். இந்தக் கடமைகளை நன்காற்றும் திறன் வேண்டும் என்று வேண்டுகிறார் இந்தப் பாடலில்.

கடமையெலாம் நன்கு ஆற்றித்

மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாக வரும் தொன்மையான பலவிதமான செயல்கட்டுகளில் கட்டுண்டிருக்கிறான் என்பது தத்துவச் சிந்தனைகளின் முடிவு. அந்த கட்டுகளில் இருந்து விடுபடுதலே என்றென்றும் இன்பமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். அதனால் அடுத்து அதனைச் சொல்கிறார் பாரதியார்.

தொல்வினைக் கட்டெல்லாம் துறந்து

இந்த நான்மணிமாலையே நான்குவகைப் பாக்களால் தொடுக்கப்பட்ட மணிமாலையென்றால் இந்தப் பாடலோ தனக்குள்ளேயே தொடுக்கப்பட்ட மாலையாக இருக்கிறது. இன்பம், பழியற்று வாழ்தல், ஒளி பெறுதல், கல்வி பல தேர்தல், கடமை ஆற்றுதல், தொல்வினைக்கட்டெல்லாம் துறத்தல், இன்பம் என்று ஒரு சுழல் இந்தப் பாடலில் வருகிறது. எல்லாமே இங்கே சுழற்சியில் தானே இயங்குகின்றன!


P.S. இன்று பாரதியார் நினைவு நாளும்!

Wednesday, September 08, 2010

ஆடிக்காற்றா ஆவணியில்....

கூரையை ஏதோ உரசும் ஓசை கேட்டு எழுந்தேன். விட்டு விட்டு உரசும் ஓசை. யாரோ நடப்பது போன்ற ஓசை. மனைவியும் குழந்தைகளும் பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில். ஓசை வரும் காரணம் தெரியவில்லை. மனதில் கொஞ்சம் திக்.

கள்வன் நுழைகின்றான் என்று தெரிந்தால் உடனே காவலரைக் கூப்பிட கையில் தொலைபேசி எடுத்துக் கொண்டு எழுந்து வந்தேன். வந்து பார்த்தால் உய் உய் என்று வீசும் காற்று. அந்தக் காற்றில் அசையும் மரங்கள். அந்த மரங்களின் கிளைகள் சுவற்றிலும் கூரையிலும் உரசுவதால் வந்த ஓசை. அவ்வளவு தான்.

மனத்தின் கற்பனைகளை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டு படுக்கைக்கு வந்தேன். தூங்க முடியவில்லை. தூக்கம் போய்விட்டது. ஏதேதோ நினைவுகள். மரங்களை அலைக்கழிக்கும் சுழல் காற்றின் வீச்சே மனத்தில் நிறைந்திருந்தது. 'காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே' என்ற பாரதியாரின் பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன. இந்த ஓங்கி வீசும் காற்றையே உள்ளுறைப் பொருளாக வைத்து சங்க கால ஒளவையார் பாடிய குறுந்தொகைப் பாடலும் நினைவிற்கு வந்தது.

முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ! ஒல்! எனக் கூவுவேன் கொல்!
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அதுவும் ஒரு மழைக்காலம். பிரிவுத்துயரில் வாடும் ஓர் இளம்பெண். களவுக்காதலில் காலம் செலுத்திய காதலனிடம் 'விரைவில் இவளை மணந்து கொள்வாய்' என்று தோழி அறிவுறுத்தியதால் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட காதலன் காதலியைக் காணாமல் காலம் தாழ்த்துகிறான். இவளோ அந்த குறுகிய காலப் பிரிவினையும் தாங்க முடியாமல் புலம்புகிறாள்.

கடுமையாக வீசும் காற்று மரங்களை எல்லாம் அலைக்கழிப்பதைப் போல் என் பிரிவுத் துயர் என்னை அலைக்கழிக்கிறது! இதனை அறியாமல் அமைதியாகத் தூங்குகிறது இந்த ஊர்! முட்டுவேனா குத்துவேனா ஆஓ எனக் கூவுவேனா இந்த ஊரை என்ன செய்வது என்று தெரியவில்லை!

அந்தப் பெண் தன் காதலன் வரவை எதிர்நோக்கி விழித்திருந்தாள்! நான் யார் வரவை எதிர் நோக்கி விழித்திருக்கிறேன்?

Tuesday, August 31, 2010

இரவு! இரவில் இரவு! அந்த இரவில் இரவு! அதில் இருள் சூழ்ந்த சிறை!

இரவு! அந்த இரவில் இரவு! அந்த இரவில் இரவு! அந்த இரவில் இருள் சூழ்ந்த சிறைச்சாலை! அங்கே தோன்றியது ஒரு அணிவிளக்கு!

நமது ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள். அந்த நாளின் பகல் பொழுது பகலவனின் வடசெலவு எனப்படும் உத்தராயணம் - தை முதல் ஆனி வரை. அந்த நாளின் இரவுப் பொழுது பகலவனின் தென்செலவு எனப்படும் தட்சிணாயணம் - ஆடி முதல் மார்கழி வரை. இப்போது நடக்கும் திங்கள் ஆவணித் திங்கள் - தேவர்களின் இரவில் ஒரு பகுதி!

மதி ஒரு முறை தேய்ந்து வளரும் முப்பது நாட்கள் முன்னோர்கள் எனப்படும் பிதுர்களின் ஒரு நாள். மதியின் வளர்பிறை அவர்களின் பகல். மதியின் தேய்பிறை அவர்களின் இரவு. ஆவணி எனும் தேவர்களின் இரவில் வந்த தேய்பிறை காலம் இப்போது. இரவில் இரவு! தேய்பிறை காலத்தின் நடுவில் வருவது எட்டாம் நாளாகிய அஷ்டமி திதி. ஆக இது முன்னோர்களின் நடு இரவான நாள்!

இந்த தேய்பிறை எட்டாம் நாளின் இரவு - மனிதர்களின் இரவில் ஒரு கொடியவனின் சிறையில் - இருள் சூழ்ந்த சிறையில் தோன்றியது இந்த இருளையெல்லாம் நீக்கும் - புறம் போல் உள்ளும் கரியான் ஆன மாயோன் எனும் அணிவிளக்கு!










பெரியாழ்வார் திருமொழி 1.1:

பாசுரம் 1

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே


அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் வாழும் கண்ணன் கேசவன் நம்பி திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்த போது, அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால் ஆயர்கள் ஒருவர் மீது பூசிய நறுமண எண்ணெயாலும் ஒருவர் மீது ஒருவர் தூவிய வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளாலும் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது.

இந்தப் பாசுரத்தில் கண்ணனை அறிமுகம் செய்யும் போது கண்ணன், கேசவன், நம்பி என்ற மூன்று பெயர்களைச் சொல்கிறார். அழகிய கண்களை உடையவன், கண்ணைப் போன்றவன், கண்களுக்கு விருந்தானவன், அழகிய திருமுடிக்கற்றைகளை உடையவன், கேசியை அழித்தவன், நற்குணங்களால் நிறைந்தவன், அழகன் போன்ற எல்லா பொருளையும் ஒரே நேரத்தில் அழகுபடச் சொல்லிச் செல்கிறார். கண்ணன் அவதரித்ததால் நந்தகோபருடைய இல்லம் இனிய இல்லமானது. கண்ணன் பிறந்த பின்னர் நந்தகோபர் தன் இல்லத்தின் தலைவனாக கண்ணனைக் கொண்டான் என்பதால் நந்தகோபர் திருமாளிகையின் திருமுற்றத்தை கண்ணன் முற்றம் என்றார். செம்புலப்பெயல்நீர் என்பார் தமிழ்ப்புலவர். அதே போல் இங்கே எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறாகிக் கிடக்கிறது. ஆழ்வாருடைய காலத்திலும் கண்ணனுடைய காலத்திலும் மகிழ்ச்சியைத் தெரிவிக்க எண்ணையை ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டும் வண்ணச் சுண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவிக்கொண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப்பொடிகளைத் தூவியும் நீரில் கரைத்துத் தெளித்தும் மகிழ்கிறார்களே.


பாசுரம் 2.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே


திருவாய்ப்பாடியிலிருக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபருக்குத் திருக்குமரன் பிறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி.

இந்தப் பாசுரத்தில் கண்ணனின் திருவவதாரத்தை ஆய்ப்பாடியில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஆயர்கள் எப்படி குதூகலமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினார்கள் என்பதைச் சொல்கிறார் பட்டர்பிரான். கிருஷ்ண ஜனனத்தால் மகிழ்ச்சியுறாதவர்கள் எவருமில்லை திருவாய்ப்பாடியிலே. ஆலிப்பார் என்பதற்கு உரக்கக் கூவுதல், ஆலிங்கனம் (கட்டித் தழுவுதல்) என்று இரு பொருளைச் சொல்கின்றனர் பெரியோர்.


பாசுரம் 3.

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேரில்லை காண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே


எல்லா சீர்களையும் உடைய இந்த சிறு பிள்ளை கம்சனைப் போன்றவர்களிடம் இருந்து மறைந்து வளர்வதற்காக அந்தப் பெருமைகளை எல்லாம் பேணி/மறைத்து நந்தகோபர் இல்லத்தில் பிறந்தான். அப்போது அவனைக் காண்பதற்காக எல்லா ஆயர்களும் ஆய்ச்சியர்களும் திருமாளிகைக்குள் புகுவார்கள்களும் உள்ளே புகுந்து அவனைக் கண்டு வெளியே வருபவர்களுமாக இருக்கிறார்கள். புகுபவர்களும் புக்குப் போதுபவர்களும் ஒருவருக்கொருவர் கண்ணனின் பெருமைகளைப் பேசிக் கொள்கிறார்கள். 'இவனைப் போன்ற அழகுடைய ஆண்மகன் வேறு யாரும் இல்லை. இவன் திருவோணத்தானாகிய திருமாலால் அளக்கப்பட்ட மூவுலகங்களையும் ஆள்வான்' என்று சொல்கிறார்கள்.

இந்தப் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளை திருவாய்ப்பாடி வாழ் மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டதைச் சொல்கிறார். பேணிச் சீருடை என்ற சொற்றொடருக்கு 'பேணுவதற்கு உரிய சீர்களை உடைய' என்று பொருள் கொண்டாலும் பொருத்தமே. திருவோணத்தான் உலகாளும் என்ற சொற்றொடருக்கு 'திருவோணத்தானாகிய திருமாலின் உலகங்களை ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரி தான்; 'இவன் திருவோணத்தானாகிய திருமாலே. இவன் உலகங்களை எல்லாம் ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரியே.


பாசுரம் 4.

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே


பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய், பால், தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள்.

நெய், பால், தயிர் போன்றவற்றை மகிழ்ச்சியின் மிகுதியால் முற்றமெங்கும் தூவினார்கள் என்பதொரு பொருள். கண்ணனுக்கு நன்மை உண்டாகும் பொருட்டு (நன்று ஆக) எல்லாவற்றையும் எல்லோருக்கும் தானமாகக் கொடுத்தார்கள் என்று இன்னொரு பொருளைச் சொல்கிறார்கள் பெரியவர்கள்.

பாசுரம் 5.

கொண்ட தாள் உறி கோலக் கொடு மழு
தண்டினர் பறி ஓலைச் சயனத்தர்
விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்


இந்த இடையர்கள் தாங்கி வந்த உறிகள் அவர்கள் கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. அவர்களது ஆயுதங்களான அழகிய கூர்மையான மழுவையும் மாடு மேய்க்கும் கோல்களையும் ஏந்தி வந்திருக்கின்றனர். பனைமரத்திலிருந்து பறித்து எடுத்த ஓலையால் செய்த பாயை இரவில் படுக்கப் பயன்படுத்திவிட்டு அதனையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். பறித்தெடுத்த முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களைக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட இடையர்கள் நெருக்கமாகக் கூடி கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக நெய்யால் ஆடினார்கள்.

மாடு மேய்க்கப் போன இடத்தில் பால் கறக்க நேர்ந்ததால் அந்த பாலை இட்டு வைத்த உறியையும் தாங்கி வந்திருக்கின்றனர். அந்த உறிகளைக் காவடி போல் ஏந்தி வந்தார்கள் போலும். அப்படி ஏந்தி வந்த உறிக்காவடி அவர்களது தாள்களை/கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. இலை தழைகளைப் பறித்து மாடுகளுக்கு இடுவதற்காக சிறிய மழுவாயுதத்தைத் தாங்கி வருகிறார்கள். மாடுகளை மேய்க்கும் கோல்களையும் தாங்கி வருகின்றார்கள். எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாததால் அவர்களது பற்கள் வெண்மையான முல்லை அரும்புகளைப் போல் இருக்கின்றன. கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் எண்ணெய் தேய்த்து நீராடியதை நெய்யாடினார் என்று சொல்வதாகக் கூறினாலும் பொருத்தமே.

இராக்காவல் முடிந்து வந்தார்கள் என்பது பெரியோர்கள் சொன்ன பொருள். அதிகாலையில் மாடு மேய்க்கச் செல்பவர்கள் கண்ணன் பிறந்த செய்தியைக் கேட்டு வந்து மகிழ்ந்து நெய்யாடினார்கள் என்றாலும் பொருத்தமே.

இங்கே அண்டர் என்று சொன்னது அண்டத்தில் வாழும் தேவர்களை என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால் இங்கே விளக்கியிருக்கும் செயல்களைச் செய்பவர்கள் இடையர்களாக இருக்கவே வாய்ப்புள்ளதாலும் முன்பின் வரும் பாசுரங்கள் இடைச்சேரியைப் பற்றியே பேசுவதாலும் அண்டர் என்றது ஆயர்களையே எனலாம்.

பாசுரம் 6.

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பையவாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே


கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!

இன்றைக்கும் சிறு குழந்தையைக் குளிப்பாட்டும் போது தாய்மார்கள் கால்களை நீட்டி அமர்ந்து குழந்தையை முழந்தாள் மூட்டின் மேல் வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள். அப்போது குழந்தைக்கு சிறிதும் அதிர்ச்சி ஏற்படாத வண்ணம் சிறிதே வெம்மையான நீரை பையப் பைய ஊற்றி நீராட்டுகிறார்கள். அன்றைக்கும் அசோதைப் பிராட்டியார் தன் சிறு குழந்தையாம் இளஞ்சிங்கத்தை அப்படித் தான் நீராட்டியிருக்கிறாள். குழந்தையின் கையும் காலும் நன்கு செயல்படுவதற்காக அவற்றை நீட்டி நிமிர்த்துவதும் இன்றைக்கும் தாய்மார்கள் செய்வதே (சில இல்லங்களில் பாட்டிமார்கள் செய்கிறார்கள்). அப்படி கையும் காலும் நீட்டி நிமிர்த்திய பின் கடார நீரால் கண்ணக் குழந்தையை நீராட்டி அவனது நாக்கை வழிப்பதற்காக வாயை திறந்த போது அங்கே ஏழுலகையும் கண்டு வியந்து போனாள். ஐய என்ற சொல்லால் அந்த வியப்பைக் குறிக்கிறார் ஆழ்வார்.

மண்ணெடுத்து உண்டதால் அண்ணனால் தடுக்கப் பட்டு அன்னையால் ஆராயப்படும் போது வாயுள் ஏழுலகம் காட்டினான் என்றே இதுவரை படித்தும் கேட்டும் இருக்கிறோம். ஆழ்வார் அந்த நிகழ்வை இன்னும் விரைவாக்கி பிறந்த சில நாட்களிலேயே நடப்பதாகக் கூறுகிறார்.

பாசுரம் 7.

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே


கண்ணனின் திருவாயுனுள் எல்லா உலகங்களையும் கண்ட யசோதைப் பிராட்டியும் மற்ற ஆய்ச்சியர்களும் மிகவும் வியந்து 'ஆயர்களின் பிள்ளை இல்லை இவன். பெறுதற்கரிய தெய்வமே இவன். பரந்த புகழையும் சிறந்த பண்புகளையும் உடைய இந்த பாலகன் எல்லா உலகங்களையும் மயக்கும் அந்த மாயனே' என்று ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.

கண்ணனுடைய திருவருளால் தெய்வீகக் கண் பெற்ற யசோதைப் பிராட்டியார் கண்ணனின் திருவாயுனுள் ஏழுகலங்களையும் கண்டு வியந்து மற்ற ஆய்ச்சியர்களையும் அழைத்துக் காண்பித்தாள். கண்ணன் அவர்களுக்கும் திருவருள் செய்து தெய்வீகக் கண்களைக் கொடுக்க அவர்களும் அவன் திருவாயுனுள் உலகங்களைக் கண்டு வியந்தனர். வியந்து 'இவன் இடைப்பிள்ளை இல்லை; ஏழுலகங்களையும் மயக்கும் மாயனே' என்று சொல்லி மகிழ்ந்தனர்.

பாசுரம் 8.

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்தமாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே


கண்ணன் பிறந்து பன்னிரண்டாம் நாள் அந்தக் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்தத் திருவிழாவிற்காக எல்லா திசைகளிலும் கொடிகளும் தோரணங்களும் தாங்கிய வெற்றித் தூண்கள் நடப்பட்டிருக்கின்றன. அந்தத் திருவிழாவில் யானைகள் நிறைந்த கோவர்ந்தன மலையைத் தாங்கிய மைந்தனாம் கோபாலனை கைத்தலங்களில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர் ஆயர்கள்.

குழந்தை பிறந்து பத்தாம் நாளிலோ பன்னிரண்டாம் நாளிலோ ஏதோ ஒரு நல்ல நாளில் பெயர் சூட வேண்டும் என்று சொல்கின்றன சாத்திரங்கள். அதனை ஒட்டி பன்னிரண்டாம் நாள் அன்று எல்லாத் திசைகளிலும் தோரணங்களையும் கொடிகளையும் நாட்டிக் கொண்டாடுகின்றனர் ஆயர்கள்.

இங்கே ஆயர்கள் என்றது ஆண் பெண் இருபாலரையும்.

தங்கள் கைகளில் வைத்துக் கொண்டாடினர் என்று சொன்னாலும் தகும். உத்தானம் என்று சொன்னதால் தலை மேல் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினர் என்றாலும் சரியே.

கோவர்த்தன மலையைத் தூக்கிய நிகழ்ச்சி பிற்காலத்தில் நடந்திருந்தாலும் அந்த நிகழ்ச்சி நடந்ததற்கு பின்னர் வாழ்ந்தவர் ஆழ்வார் என்பதால் அதனை இங்கே நினைத்துக் கொண்டார் என்பதில் குறையில்லை. திருவாய்ப்பாடியில் நடந்ததை திருக்கோட்டியூருக்குக் கொண்டு வந்ததைப் போல் பின்னர் நடந்ததை முன்னரே நினைத்துக் கொண்டார் போலும்.

பாசுரம் 9.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்


'கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ இடுப்பை முறிக்கும் அளவிற்கு ஆடுகிறான். இறுக்கி அணைத்துக் கொண்டால் வயிற்றின் மேல் பாய்கிறான். தேவையான வலிமை இல்லாததால் நான் மிகவும் மெலிந்தேன் பெண்ணே' என்று யசோதைப் பிராட்டியார் தோழியிடம் முறையிடுகிறார்.

இங்கே மிடுக்கிலாமையால் என்றது யசோதையாகிய தன்னை என்றும் கிருஷ்ணக் குழந்தையை என்றும் இருவிதமாகப் பெரியோர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பிறந்து பன்னிரண்டே நாட்கள் பிஞ்சினைப் பற்றி கூறுவதால் குழந்தையின் மென்மையை மிடுக்கிலாமை என்றார். சிறிதே வளர்ந்த குழந்தையைப் பற்றி யசோதையார் கூறினார் என்றால் அது தன்னைக் கூறினார் என்னிலும் தகும். இன்றைக்கும் தமது குழவியரைப் பற்றி தாயர் இந்தக் குறையைக் கூறி மெச்சிக் கொள்வதைக் கேட்கிறோமே.

பாசுரம் 10.

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்தயிப்
பன்னுபாடவல்லார்க்கு இல்லை பாவமே


செந்நெல் ஆர்க்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் நிலைத்து வாழும் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பிய நாரணன் திருவாய்ப்பாடியில் பிறந்த சரிதத்தை திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடுபவர்களுக்கு இறைவனைச் சிந்திக்கவும் அடையவும் தடையாக நிற்கும் பாவங்கள் நீங்கும்.

செந்நெல் ஆர்க்கும் என்றதனால் இம்மைப்பயன்கள் குறைவின்றி விளங்குவதைக் காட்டினார். மன்னு என்று என்றும் நிலைத்து வாழ்வதைக் கூறியதால் அர்ச்சாவதாரத்தின் குறைவில்லாப் பெருங்குணத்தைக் காட்டினார். நாரணன் என்று சொன்னதால் எவ்விடத்தும் எவ்வுயிரிலும் வாழ்பவன் என்பதையும் எவ்விடமும் எவ்வுயிரும் தன்னுள் கொண்டவன் என்பதையும் கூறினார். நம்பி என்றதால் அர்ச்சாவதாரத்தில் மிக வெளிப்படையாக நிற்கும் பெருங்குணமான சௌலப்யத்தை / நீர்மையைக் காட்டினார். இல்லை பாவமே என்றதனால் கைங்கர்ய விரோதிகளான பாவங்கள் நீங்கினபடியைக் கூறினார்.

Wednesday, August 11, 2010

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே



திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


திருவாடிப்பூரம் ஆகிய இன்றையத் திருநாளில் உலகத்தில் அவதரித்தவள் வாழ்க!
திருப்பாவை முப்பதும் சொன்னவள் வாழ்க!
பெரியாழ்வார் பெருமையுடன் வளர்த்தப் பெண் பிள்ளை வாழ்க!
திருப்பெரும்புதூரில் அவதரித்த இராமானுஜமுனிக்குத் தங்கையானவள் வாழ்க!
ஒரு நூற்று நாற்பத்தி மூன்று பாசுரங்களைப் பாடியவள் வாழ்க!
உயர்வற உயர்நலம் உடைய அரங்கனுக்கு மலர்மாலையை மகிழ்ந்து தான் சூடிக் கொடுத்தவள் வாழ்க!
மணம் கமழும் திருமல்லிநாட்டைச் சேர்ந்தவள் வாழ்க!
புதுவை நகரெனும் வில்லிபுத்தூர் நகர்க் கோதையின் மலர்ப்பதங்கள் வாழ்க வாழ்க!

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

கோதை பிறந்த ஊர்
கோவிந்தன் நிலைத்து வாழும் ஊர்
ஒளிவீசும் மணி மாடங்கள் விளங்கும் ஊர்
நீதியில் சிறந்த நல்ல பக்தர்கள் வாழும் ஊர்
நான்மறைகள் என்றும் ஒலிக்கும் ஊர்
அப்படிப்பட்ட வில்லிபுத்தூர் வேதங்களின் தலைவனின் ஊர்

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பதும் வம்பு.

பஞ்சமா பாதகங்களைத் தீர்க்கும்
பரமனின் அடிகளைக் காட்டும்
வேதங்கள் அனைத்திற்கும் வித்து ஆகும்
அப்படிப்பட்டக் கோதையின் தமிழ்ப் பாசுரங்கள்
ஐயைந்தும் ஐந்தும் (முப்பதும் - திருப்பாவை)
அறியாத மானுடரை
வையம் சுமப்பது வீண்

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னங்கள் சூழ, அன்னம் விளையும் வயல்கள் கொண்ட புதுவை என்னும் திருவில்லிபுத்தூர்.
ஆங்கு அவதரித்த ஆண்டாள், ஆரா அமுதன் அழகிய திரு அரங்கன் மீது பாடிக் கொடுத்தாள் நல்ல பாமாலை...வாய்க்கு மணம்!
போதாது என்று பூமாலையும் சூடிக்கொடுத்தாள்...மேனிக்கே மணம்!
அந்த மாலைகளை அனைவரும் சொல்லுவோம்.


சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

மலர்மாலையை மாலவனுக்குச்
சூடிக் கொடுத்த சுடர்கொடியே!
தொன்மையான பாவை நோன்பிற்காக
திருப்பாவை பாடி அருளிய பலவிதமான வளையல்களை அணிந்தவளே!
'மன்மதனே. நீ மனம் இரங்கி திருவேங்கடவனுக்கே என்னை மணாட்டியாக விதி' என்று நீ கூறிய வார்த்தைகளை நாங்களும் ஏற்று
என்றும் புறந்தொழாமல்
என்றும் படிதாண்டா பத்தினிகளாக
எம்பெருமானையே பற்றி வாழ அருள்வாய்.

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

இன்றல்லவோ திருவாடிப்பூரம்! (இந்தத் திருநாளில்)எம் பொருட்டு அன்றோ ஆண்டாள் அவதரித்தாள்!(எம் மேல் அவள் கருணை எப்படிப்பட்டதெனில்) என்றும் அழியாத பெரும்பேறான வைகுந்த வான்போகத்தை (அடியாரைக் காத்தருளுவதை விட கீழானதென்று) இகழ்ந்து பெரியாழ்வர் திருமகளாராய்!

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள் நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்!

Sunday, August 08, 2010

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! அந்தக் கண்ணனுக்கு மட்டும் இல்லை இந்தக் கண்ணபிரானுக்கும் இது பொருந்தும்! ஏறக்குறைய இவர் நண்பர்கள் அனைவருக்குமே இவரிடம் கொஞ்சம் குறைந்த பட்சம் லேசான மனத்தாங்கல் இருக்கிறது! ஆனால் இவரை விரும்பாதவரே இல்லை! எல்லாருமே நண்பர்கள் தான்! இந்த இனிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு இன்று பிறந்தநாள் (ஆகஸ்ட் 9)! எல்லா நலமும் பெற்று, விட்டுப் போனவை எல்லாம் மீண்டும் கிடைத்து, இறைத்தொண்டிலேயே கவனம் எல்லாம் நிலைத்து, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இரவிசங்கர் வாழ நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி அருள் புரிய வேண்டும்!

***

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே!


பெரியபிராட்டியாருடன் என்றும் நீங்காது இருக்கும் திருமாலே! உமது திருமுகத்தின் ஒளியே மேலே கிளம்பி உம் தலையில் நீர் தரித்திருக்கும் திருவபிஷேகமாக (கிரீடமாக/திருமுடியாக) ஒளிவீசித் திகழ்கிறதோ? நீர் தேவ தேவன் என்பதையும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்பதையும் பரமபுருஷன் என்பதையும் உமது திருமுடியின் பேரழகும் பேரொளியும் காட்டுகின்றதே! நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்! ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவீசிக் காட்டுகின்றதே என்று திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின் அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக பரந்து அலர்ந்துவிட்டதோ! திருமுடியின் பேரொளியைக் காண தீராமல் திருவடிக்கு வந்தால் திருவடியின் பேரொளி மேலே பிடித்துத் தள்ளுகிறதே! அடடா! உமது திருமேனியின் ஒளியே உமது பட்டுப் பீதாம்பரமாகவும் உமது திருமேனியில் ஒளிவீசும் திருவாபரணங்களாகவும் அனைத்தும் பொன்னிறம் என்னும் படி கலந்து ஒளிவீசுகிறதே! கடலிலே அகப்பட்ட துரும்பை ஒரு அலை இன்னொரு அலையிலே தள்ளி அது இன்னொரு அலையிலே தள்ளி அலைப்பதைப் போலே உமது திருமுடியின் ஒளி திருவடிகளிலே தள்ள அது திருமேனியின் ஒளியிலே தள்ளுகிறதே! காலம் என்னும் தத்துவம் இருக்கும் வரையில் கண்டுகொண்டே இருந்தாலும் திருப்தி வராது என்னும் படியான பேரழகும் பேரொளியும் வாய்த்தது தான் என்னே! நீரே சொல்லியருள வேண்டும்!



கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி!


உண்மையைச் சொன்னால் தாமரை உமது திருக்கண்கள், திருப்பாதங்கள், திருக்கைகள் இவற்றிற்கு ஒப்பாகாது! காய்ச்சிய நன்பொன்னின் பேரொளியும் உமது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகாது! ஏதேதோ ஒப்பு வைத்து இந்த உலகத்தார் உம்மைப் புகழ்வனவெல்லாம் பெரும்பாலும் வெற்றுரையாய்ப் பயனின்றிப் போகும்படி செய்யும் பேரொளி உடையவர் நீர்!

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையில் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே!


எளிமையின் எல்லை நிலமான கோவிந்தனே! பரஞ்சோதியாக பேரழகுடனும் பேரொளியுடனும் நீர் திகழ, ஏகம் அத்விதீயம் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்றும் பேசும் படியாக உம்மை விட மற்றோர் பரஞ்சோதி இல்லாத வண்ணம் இந்த பிரம்மாண்டத்தை நடத்திக் கொண்டு உமது திருமேனியாகவே இந்த பிரபஞ்சத்தையெல்லாம் உம் எண்ணத்தாலேயே படைத்த எமது பரஞ்சோதியே! உலகத்தார் போற்றுவனவெல்லாம் வெற்றுரையாய் ஆக்கும் பரஞ்சோதியாகவும் நீர்மைக்கு எல்லைநிலமாகவும் ஒரே நேரத்தில் இருக்கும் உமது அளவில்லாத தெய்வீக குணங்களை எல்லாம் அடியேனாலும் பேச முடியாது!

மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலைமாஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மாஞாலம் வருத்தாதே?


மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த பேருலகத்தில் வாழ்பவர்கள் எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும் படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்! அவர்களைக் கடைத்தேற்றும் வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர்! இப்படி இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா?

வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?


அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வீசும் கதிருடன் கூடிய சுடர்கின்ற திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்! வரும் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களும் ஆகி உலகத்தையும் உலக மக்களையும் ஒருங்கே காத்தருள்கிறிர்! உமது சீரை சொல்லி முடிப்பது அடியேனால் முடியுமோ?



ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொல்லி யான் வாழ்த்துவனே?


ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும், மற்றும் எந்த உலகத்திலும் எப்படிப்பட்ட சாத்திரங்களும், உமது புகழைத் தான் ஓதுகின்றன! பிறிதொன்றுமில்லை! மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும் திருமுடியினாய்! அலர் மேல் மங்கை வாழும் மார்பினாய்! உம்மை வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்!

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகெல்லாம் படையென்று முதல் படைத்தாய்!
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதோ?


பெருகி இருக்கும் பிரம்மாண்ட நீரில் இருந்து உலகங்களையும் உலகமக்களையும் படைப்பாய் என்று உமக்குள்ளிருந்து தோன்றிய தாமரையில் நான்முகனைப் படைத்தீர்! பலர் உம்மை வாழ்த்துவார்களாக இருக்கிறார்கள்! மிகச் சிறந்த ஞானம் முதலிய குணங்களை உடைய அரன் முதலாகச் சொல்லப்படும் தெய்வங்கள் எல்லாம் உமது குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள்! அப்படித் அவர்கள் துதித்தால் உமது தொன்மையான புகழ் அவ்வளவு தான் என்று ஆகிவிடாதோ? உம்மால் படைக்கப்பட்ட பிரமதேவனால் படைக்கப்பட்டவர்கள் எப்படி உமது தொன்மையான புகழைப் பாட முடியும்? அப்படி அவர்கள் பாடினால் உமது தொல் புகழ் மாசு பெற்றுவிடுமே!

மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான்கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உனபாத மலர்ச்சோதி மழுங்காதே?


குற்றமே அடையாத ஒளிவீசும் திருமேனியுடன், கூடாது குறையாது குற்றமே அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களும் ஆகி, அனைத்திற்கும் அடிப்படையானீர்! அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே!

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?


தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த மடுக்கரையில் தோன்றினீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா?



மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இது வியப்பே!


மறையான நான்கு வேதங்களுக்கும் உட்பொருளாக நின்ற விரிந்த பேரொளியே! முறைப்படி இவ்வுலகங்களையெல்லாம் படைத்தீர்! வராகப் பெருமானாகி அவற்றை இடந்தீர்! பிரளய காலத்தில் அவற்றை உண்டீர்! பின்னர் உலகத் தோற்றக்காலத்தில் அவற்றையெல்லாம் உமிழ்ந்தீர்! வாமன திரிவிக்கிரமனாகி அவற்றை அளந்தீர்! பிறைதாங்கிய சடையை உடைய சிவபெருமானும் நான்முகனும் இந்திரனும் நீர் எல்லாவற்றையும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த சர்வஸ்வாமியாக இருப்பதை அறிந்து உம்மைப் போற்ற நீர் வீற்றிருப்பது என்ன வியப்போ? வியப்பில்லையே!

வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே


மற்றவர்களுக்கு வியப்பாக இருப்பவை எல்லாம் தன்னிடம் வியப்பில்லாமல் போகும் படியான பெருமையையுடைய, மெய்ஞானத்தை அருளும் வேதங்களாக இருப்பவனை, வெற்றியும் புகழும் உடையவர்கள் பலர் வாழ்கின்ற பெரிய ஊரான திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபனாகிய நம்மாழ்வார் குற்றங்கள் ஏதும் இன்றி தொழுது உரைத்த ஆயிரம் பாடல்களுள் இந்தப் பத்துப் பாடல்கள் தம்மைப் பாடுபவர்களை ஒலி நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்தில் முன்னேற்றி மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கும்.

Thursday, August 05, 2010

கமுக்கமா வந்த கள்ளழகர்!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி கதையா துளசியக்கா எழுதுற மாதிரி நாமளும் ஊர் சுத்துற கதையெல்லாம் எழுதிறனும்ன்னு நினைச்சா முடியுதா என்ன? பாருங்க நடுவுல கொஞ்சம் தொய்வு வந்திருச்சு.

அழகர் கோவில் போனதுல இருந்து எழுதுறதுக்கு நிறைய சேர்ந்திருச்சு. வான்கோழி தான்னு புரிஞ்சதால ரொம்ப விரிவா எழுதாம கொஞ்சமே கொஞ்சமா எல்லாத்தையும் இரண்டு இடுகையிலேயே சொல்லிட்டுப் போயிரலாம்ன்னு நினைக்கிறேன். துளசியக்கா எழுதுனா சுவையா இருக்கும். அப்படி எழுத வராதவன் சும்மா விரிவா எழுதுறேன்னு சொல்லி உங்களை போரடிக்கக்கூடாதுல்ல. :-)

போன இடுகையில சொன்ன மாதிரி பார்வையற்றோர் பள்ளிக்குப் போறப்ப அது அழகர் கோவில் போற வழியில இருக்குறதால அப்படியே குடும்பத்தோட அழகர் கோவிலுக்கும் போயிட்டு வந்தோம்.



அழகர் கோவில் போற வழியில காதக்கிணறுங்கற ஊருல தான் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளோட பிருந்தாவனக்/ஜீவசமாதிக் கோவில் இருக்கு. மார்கழி மிருகசீருஷ நட்சத்திரத்துல பிறந்த சுவாமிகள் இன்னொரு மார்கழியில முக்கோடி ஏகாதசிங்கற வைகுண்ட ஏகாதசியன்னைக்கு ஜீவசமாதி அடைஞ்சார். யானைமலை நரசிம்மசுவாமியைப் பார்த்தபடி, பரி மேல் வரும் அழகன் வைகையில் இறங்க வரும் வழியில் ஜீவசமாதி அடைஞ்சார்.



முதல்ல காதக்கிணறுல அந்தக் கோவிலுக்குப் போய் சுவாமிகளின் பிருந்தாவனத்தைத் தரிசனம் செஞ்சுட்டு, அப்படியே அதே கோவில்ல இருக்கிற ருக்மினி சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமியையும் தரிசனம் செஞ்சோம். சின்னக் கோவில். அழகான கோவில். முன்பு (நான் சின்ன பையனாக இருந்த போது) சுவாமிகளோட பிருந்தாவனம் மட்டுமே இருந்தது. பிருந்தாவனத்து மேல வேணுகோபால சுவாமி மட்டும் இருந்தார். இப்ப சுவாமிகளின் பிருந்தாவனத்து மேல சுவாமிகளோட திருவுருவமும் தனிச்சன்னிதியில ருக்மினி சத்யபாமா உடனுறை வேணுகோபாலனும் இருக்காங்க.

அங்கே இருந்து நேரா அழகர் கோவில் தான். ஆடித் திருவிழா நடந்துக்கிட்டு இருந்துச்சு. கூட்டமோ கூட்டம். ஆனா தள்ளு முள்ளு இல்லை. வண்டி கட்டிக்கிட்டு வந்து இறங்கி அங்கே அங்கே சமையல் செஞ்சு கிராமத்து மக்கள் எல்லாம் சாப்புட்டுக்கிட்டு இருந்தாங்க. மக்கள் கூட்டம் அதிகமா இருந்ததால குரங்குகளை அவ்வளவா பாக்க முடியலை. ஓரமா ஒளிஞ்சிக்கிட்டு மக்களை உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருந்த குரங்குகளைக் கண்டுபிடிச்சுக் குழந்தைகளுக்குக் காட்டுனோம்.



பதினெட்டாம்படி கருப்பணசாமி முன்னாடி நல்ல கூட்டம். ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு சந்தனம் பூச ஆயத்தமாகிகிட்டு இருந்தாங்க. பதினெட்டாம்படி கருப்பரைக் கும்பிட்டுட்டு அங்கே குடுத்த துன்னூறைப் பூசிக்கிட்டு இருக்கிறப்ப பக்கத்துல ஒரு சலசலப்பு. என்னடான்னு பாத்தா ஒருத்தர் மேல கருப்பணசாமியோட ஆவேசம் வந்து ஆடிக்கிட்டு இருக்கார். அவர் உறுமுறதைப் பாத்து சில பொண்ணுங்க பயந்து பின்வாங்கிக்கிட்டு இருந்தாங்க. குழந்தைங்க அவங்க சித்தப்பாவோட சேர்ந்து குரங்குகளைப் பாக்கப் போயிட்டதால அவங்க இந்த சாமியாட்டத்தைப் பாக்கலை.



கோவில்லயும் நல்ல கூட்டம். ஆனா தள்ளுமுள்ளு இல்லை. அமைதியா வரிசையா போயி சாமி பாத்தாங்க. கொடிமரத்துக்கிட்ட கும்புட்டுட்டு மேலே மண்டபத்துல ஏறி அங்கே இருக்குற இசைத்தூண்கள்ல கொஞ்சம் தட்டித் தட்டிக் குழந்தைகளுக்குக் காட்டினேன். அப்புறம் நேரா போயி அழகர்கோவில் மூலவர் பரமசாமியைத் தரிசிச்சோம். அப்புறம் தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், சூடிக்கொடுத்த நாச்சியார் எல்லாரையும் பாத்துட்டு கொடிமரத்துக்கிட்ட வந்து ஒரு தோசை வாங்கினோம். அழகர் கோவில் தோசை ஒரு நொடியில தீர்ந்திருச்சு. இன்னும் எனக்கு ஆசை தீராததால இன்னொன்னும் வாங்கினேன். அதுவும் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா பிச்சுப் பிச்சுத் தின்னதுல ஒரு நொடியில காணாமப் போயிருச்சு. இன்னொன்னும் வாங்கி பாதியை மட்டும் பிச்சு மனைவிக்கிட்ட குடுத்துட்டு மீதியை எடுத்துக்கிட்டு அந்தப் பக்கமா தனியா போயி ஆசை தீரச் சாப்புட்டேன். அப்ப என் மனைவி சாபம் குடுத்துட்டாங்க போல. வீட்டுக்கு வந்த பின்னாடி வயித்து வலி வந்திருச்சு. (அப்புறமா சாப்புட்ட பிரியாணி தான் காரணம்ன்னு நான் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனால் அவங்க விடாப்பிடியா தனியா போயி சாப்புட்டீங்களே அந்த அழகர் கோவில் தோசை தான்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க). :-)

கோவிலுக்கு முன்னாடி கொய்யாப்பழம் வாங்கிக்கிட்டு அங்கே இருந்த திடீர் கடைகள்ல பொண்ணு வளையல், சங்கிலின்னு வாங்கிக்கிட்டு இருக்கிறப்ப கமுக்கமா பல்லாக்குல ஆடி அசைஞ்சு கள்ளழகர் வந்தாரு. அப்பத் தான் அவரை கோவிலுக்குள்ள பாக்கலைங்கறதே உறைச்சுச்சு. ஆடித்திருவிழாவுக்கு வந்தவங்களை எல்லாம் சுத்தி பாத்துட்டு வந்தாரு போல. வேக வேகமா ஓடி ஒளிஞ்சுக்கப் போன அவரை படமா புடிச்சு வச்சிக்கிட்டேன்.





அப்பா இறந்து இன்னும் ஒரு வருடம் முடியலைங்கறதால மலை மேல போயி பழமுதிர்சோலையானைப் பாக்க முடியலை. திருமாலிருஞ்சோலையானை மட்டும் பாத்துட்டு அங்கே இருந்து கிளம்பி சுந்தரராஜன்பட்டியில இருக்குற பார்வையற்றோர் பள்ளிக்கு வந்தோம்.

Saturday, July 24, 2010

கண்ணிழந்தார்க்கு ஒரு கைவிளக்கு...

சீனா ஐயாவின் வழிகாட்டுதலுடன் இன்னொரு நற்செயலை நேற்று (ஜுலை 24) செய்தோம். இரண்டு கண்களும் இருந்தாலே நாமெல்லாம் பல முறை குருடர்களாக இருக்கிறோம். முன்பொரு முறை ஆழிப்பேரலையால் விளைந்த பேரழிவின் போது ஒரு கட்டுரை எழுதினேன். நம்மைச் சுற்றி அவலங்கள் எப்போதும் இருக்கின்றன. ஆனால் அவை நம் கண்களில் படுவதில்லை. எப்போதாவது ஒரு பேரழிவு ஏற்படும் போது மட்டுமே நம் கண்களில் அவை தென்படுகின்றது. அதுவும் நமக்கு எந்த விதத்திலோ தொடர்புடையவர் அவதிப்பட்டால் மட்டுமே நமக்கு அது உறுத்துகிறது. இப்படி கண்ணிருந்தும் குருடாய் நாம் வாழப் பழகிக் கொண்டோம்.

காண்பதற்கு உலகில் எத்தனையோ நல்லவைகள் இருக்கின்றன. ஐந்து புலன்களாலும் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிய இந்த உலகத்தில் எத்தனையோ அற்புதங்கள் உண்டு. நாமோ அவற்றை விடுத்து தீயவைகளில் மனத்தைச் செலுத்துவதிலேயே பெரும் காலத்தைப் போக்குகின்றோம்.

இரு கண்களும் நன்றாக அமைந்து நாம் விரும்பியபடி இவ்வுலக இன்பங்களை எல்லாம் கண்டு களிக்க நமக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கும் போது நாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை; ஆனால் கண்களில் ஏதேனும் குறை இருப்பதால் நம்மைப் போல் இயல்பான வாழ்க்கை வாழ இயலாதவர்கள் பலர் நுட்பியலின் (டெக்னாலஜி) துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற ஒரு வழிவகை செய்கிறது மதுரைக்கு அருகில் அழகர் கோவில் செல்லும் வழியில் இருக்கும் சுந்தரராஜன்பட்டி என்ற ஊரில் இருக்கும் ஒரு நிறுவனம்.



'Indian Association for the blind' என்ற இந்த நிறுவனத்தை நிறுவியவர் திரு. எஸ்.எம்.ஏ. ஜின்னா. நேற்று இந்த நிறுவனத்திற்குச் செல்வதற்கு முன் இவரும் ஒரு கண்பார்வையற்றவர் என்பது தெரியாது. அதனால் அங்கே சென்று இவரை முதலில் பார்க்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. கண்பார்வையில்லாமலேயே இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறாரே என்ற வியப்பு ஏற்பட்டது. கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்திருந்தோம்.

அழகர் கோவில் போகும் வழியில் இருப்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் (நாங்கள் நால்வர், என் மாமியார் மாமனார், என் தம்பி அவர் மனைவி) அழகர் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் இங்கே சென்றோம். நாங்கள் சென்று அடையும் சிறிது நேரத்திற்கு முன்னர் சீனா ஐயா, அவர் துணைவியார், திருஞானம் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் மூவரும் அங்கே வந்து காத்திருந்தனர்.

இந்த நிறுவனம் இருபத்தைந்து வருடங்களாக நடந்து வருகின்றது. பலருடைய நன்கொடைகளின் பயனாகச் சிறிது சிறிதாக வளர்ந்து இன்று நல்ல கட்டிடங்களுடன் பார்வைக்குறைவுடையோர் தங்கிப் படித்து முன்னேறும் வகையில் அமைந்திருக்கிறது. நாங்கள் சென்று இறங்கிய போது சில பார்வையற்ற சிறுவர்கள் பார்வையுள்ள சிறுவர்களுடன் பந்து எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வையற்ற சிறுவர்கள் எப்படி பந்து தங்களிடம் வருவதை அறிந்து அதனைப் பிடித்துப் பின் எறிந்து விளையாடுகிறார்கள் என்று புரியாமல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனை வாய் விட்டுச் சொல்லவும் செய்தேன். என் அருகில் இருந்த மகள் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துவிட்டு, அந்தச் சிறு பந்து ஒலியெழுப்பும் வகையில் அதில் சிறு கற்களை இட்டிருக்கிறார்கள்; அந்த ஒலியின் மூலம் பந்து வரும் திக்கை உணர்ந்து பார்வையற்ற சிறுவர்கள் விளையாடுகிறார்கள் என்று சொன்னாள். கண்ணில்லாததால் இவர்களுக்குக் காது நன்கு செயல்படுகிறது என்றும் சொன்னாள். உண்மை தானே. கண்ணால் நாம் செய்யும் பல செயல்களைக் காதுகளால் கேட்டும், கைகளால் உணர்ந்தும் தான் இவர்கள் செய்கிறார்கள் என்பதைப் பின்னர் இவர்களைப் பற்றி மேலும் கேட்டு அறிந்ததில் உணர்ந்தேன்.



பள்ளியின் நிறுவனருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அப்பள்ளியில் படித்து நுட்பவியலாகராக இருக்கும் பார்வைக்குறைவுள்ள (பார்வை உண்டு; ஆனால் அது முழு அளவில் இல்லை) ஒரு இளம்பெண் நாங்கள் பள்ளிக்கு வாங்கித் தந்த இரு கைக்கணினிகளுடன் வந்தார். அவற்றை இயக்கி அவை எப்படி பார்வையற்றவர்களுக்குப் பயனாக இருக்கிறது என்று செய்து காண்பித்தார். விசைப்பலகையின் மேல் ப்ரெய்ல் குறிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு மென்பொருள் திரையில் இருப்பதைப் படித்துக் காட்டுகிறது. இவ்விரண்டின் துணை கொண்டு நாம் என்ன என்ன கணினியில் செய்வோமோ அத்தனையும் பார்வையற்றோரும் பார்வைக்குறையுள்ளோரும் செய்யமுடியும் என்பதைச் செய்து காட்டினார்.

அந்த செயல்முறை விளக்கத்திற்குப் பின்னர் அக்கணினிகளை நாங்கள் வழங்குவது போல் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று நிறுவனர் சொன்னதை ஒட்டி அப்படியே செய்தோம்.




மாணவ மாணவியர் மதிய உணவு உண்ண ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உடனே உணவுண்ணும் அறைக்கு எல்லோரும் சென்றோம். மதுரை அன்பகத்தில் சொல்லி ஆயத்தப்படுத்தியிருந்த ஆட்டுக்கறி பிரியாணி, காய்கறி பிரியாணி, தயிர்சாதம், அவித்த முட்டை, தயிர் வெங்காயம், இருவகை குழம்புகள், உருளைக்கிழங்கு வறுவல் அங்கே காத்திருந்தன.









முன்னூறு மாணவ மாணவியர் அங்கே தங்கிப் படிப்பதாக சீனா ஐயா சொல்லியிருந்ததால் அவர்களுக்கும் அங்கே பணிபுரியும் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் என்று பதினைந்து படி மட்டன் பிரியாணியும் இரண்டு படி வெஜிடபிள் பிரியாணியும் ஒரு படி தயிர்சாதமும் செய்திருந்தோம். அந்த உணவறையில் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ண இயலாது என்பதால் வயதில் சிறியவர்கள் ஒரு நூறு பேர் மட்டும் வந்து அமர்ந்தார்கள். இறைவணக்கத்தின் பிறகு நான், சரவணன், சேந்தன், தேஜஸ்வினி, சீனா ஐயா ஐவரும் உணவு பரிமாறினோம். அவர்கள் விருப்பப்படி உணவு கிடைத்ததால் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்கள் உண்டார்கள் என்று உணர்ந்தோம். சிலருக்கு இரண்டாம் முறை கேட்டுப் பரிமாறினோம்.









பின்னர் நாங்கள் அனைவரும் அவர்களுடன் அமர்ந்து உண்டோம். நேரம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அனைவரையும் அந்த அறையில் அமர வைத்துப் பரிமாறினால் வெகு நேரம் ஆகிவிடும்; அதனால் மாணவர்கள் வரிசையில் வர அவர்களுக்கு உணவை அவர்கள் தட்டில் தரலாம்; அவர்கள் அதனை வாங்கிக் கொண்டு வளாகத்தில் அவர்களுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து உண்டு கொள்ளலாம் என்று உணவைப் பரிமாற எங்களுக்கு உதவிய அப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் சொன்னதால், சரி அப்படியே செய்யுங்கள் என்று சொன்னோம்.

நாங்கள் உணவுண்டு வரும் போது கீழே வரிசையாக மாணவர்களும் முதல் மாடியில் வரிசையாக மாணவியர்களும் வந்து உணவைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் மிக இயல்பாக நடந்து வந்து உணவைப் பெற்றுச் செல்வதால் அவர்கள் பார்வைக் குறை உடையவர்கள் என்பதே மறந்து போகிறது. தற்செயலாக சில மாணவர்களின் வழியில் நின்று கொண்டு அவர்களுடன் மோதிக் கொண்டேன். சில முறை இப்படி நடந்த பின்னர் தான் அவர்கள் பழக்கத்தால் அப்படி இயல்பாக நடக்கிறார்கள்; அதனால் புதியவரான நாம் தான் அவர்கள் பாதையில் இருந்து விலக வேண்டும்; அவர்கள் நாம் அங்கே இருப்பதை அறியார்கள் என்பது புரிந்தது. அவர்கள் பாதையில் இருந்து விலகி சிறிது தூரத்தில் வந்து நின்று கொண்டோம்.



மற்றவர்கள் படிக்கும் அதே பாடபுத்தகங்களைத் தான் இம்மாணவர்களும் படிக்கிறார்கள் என்று சரவணன் சொன்னார். அப்புத்தகங்களில் இருப்பதை ஒலிப்பதிவு செய்து அதனைக் கேட்டுக் கேட்டு இவர்கள் படிக்கிறார்கள் என்றும் சொன்னார். +2 தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள் என்றும் அவர்கள் பெயர்களுடன் மதிப்பெண் பட்டியலை அங்கே ஓரிடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

மெய்யம்மை அம்மா அவர்கள் தேர்வெழுதும் போது அவர்களுக்குத் துணையாகச் சென்று அவர்கள் சொல்லச் சொல்ல எழுதிய அனுபவத்தைப் பற்றி சொன்னார். என் தம்பியும் அப்படி சென்று உதவியது உண்டென்றும் பாடங்களை ஒலிப்பதிவு செய்தும் தந்துள்ளார் என்றும் அழகர்கோவிலில் இப்பள்ளியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சொல்லியிருந்தார்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உணவு பெற்ற பின்னர் கல்லூரி மாணவர்கள் வந்து உணவு பெறத் தொடங்கினார்கள். அருகிலேயே காதக்கிணறு என்ற ஊரில் இருக்கும் தாய் தந்தையர் அற்ற ஆதரவற்ற சிறுவர்கள் வாழ்ந்து படிக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சீனா ஐயாவிடம் சொல்லியிருந்ததால் அவர் அப்பள்ளி ஆசிரியரிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அங்கே செல்ல நேரமாகிவிட்டதால் பார்வையற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம்.





நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் தன் செலவிலேயே நடத்தும் இந்த ஆதரவற்ற சிறுவர்களின் பள்ளிக்குச் சென்றோம். அங்கே மாணவர்கள் எங்கள் வருகை எதிர்நோக்கி அமர்ந்திருந்தார்கள். சென்று சிறிது நேரம் அவர்களுடன் செலவழித்து பின்னொரு நாள் வருவதாகச் சொல்லி வந்தோம்.

இன்னும் சில உதவிகளை எங்கள் சார்பில் சீனா ஐயா செய்வதற்கு ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய பேருதவி மட்டும் இல்லையென்றால் இந்த உதவிகளை எல்லாம் இவ்வளவு குறுகிய காலத்தில் செய்திருக்க இயலாது. உதவி தர முன் வருபவர்களையும் உதவி வேண்டுபவர்களையும் இணைக்கும் இந்த நற்செயலை தனது பொன்னான நேரத்தை எல்லாம் செலவழித்துச் செய்யும் ஐயாவின் மனத்திற்கும் அம்மாவின் மனத்திற்கும் பல்லாயிரம் நன்றிகளைத் தெரிவித்தாலும் போதாது!