Friday, December 26, 2008

குமரனின் குமரனா? நந்தகோபன் குமரனா?

"யப்பா. இவன் செய்ற குசும்பு தாங்க முடியலைங்க. இவங்க அக்கா செஞ்ச குசும்பெல்லாம் எந்த மூலைக்கு? இவன அடக்க என்னால முடியலை. நீங்க தான் பாத்துக்கணும். சும்மா தமிழ்மணம் பாத்துக்கிட்டு இருக்காதீங்க. இவனைக் கொஞ்சம் பாத்துக்குங்க"

"இப்ப என்ன பண்ணிட்டான் அவன்?"

"நான் பாத்திரம் கழுவி டிஷ் வாஷர்ல போட விடமாட்டேங்கறான். எல்லாத்தையும் எடுத்து வெளிய போட்டுக்கிட்டு இருக்கான்"

"அவங்க அக்காவோட விளையாடச் சொல்ல வேண்டியது தானே?"

"ஆமா. அப்புறம் அவங்க சண்டைய யாரு தீர்த்து வைக்கிறது?"

"சண்டையா? நல்லா தானா தம்பியைப் பாத்துக்கிறா பெரியவ? அப்புறம் ஏன் சண்டை போடறாங்க?"

"அவ நல்லாத் தான் பாத்துக்கறா. இவன் தான் எதை எடுத்தாலும் மைன் மைன்னு சொல்லி புடுங்கறான். தம்பி கேக்குறான்னு அவளும் குடுத்துர்றா. அப்புறம் அவ தலை முடியை புடிச்சு இழுக்குறான். அவ அழ ஆரம்பிச்சுர்றா"

"ம்ம்ம். தேஜும்மா. தம்பி உன் முடியைப் பிடிச்சு இழுத்தா நீயும் அவன் முடியை பிடிச்சு இழு"

"என்ன சொல்லித் தர்றீங்க நீங்க? தம்பி சின்னப்பையன்;அடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லியிருக்கேன். அதனால தான் அவ அடிக்கிறதில்லை. நீங்க இப்படி சொல்லித் தரலாமா? சும்மா பேசிக்கிட்டு இருக்காம வந்து பையனைப் பாத்துக்கோங்க"

"சரி சரி இதோ வர்றேன். இந்த கமெண்டை மட்டும் படிச்சுட்டு வர்றேன்"

நான் பிடிக்கப் போக அவன் சிரித்துக் கொண்டே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஓடி ஒளிகிறான். அந்த விளையாட்டில் அவன் அக்காவும் கலந்து கொள்கிறாள். சமையலறையிலிருந்து எப்படியோ அவனை வெளியே ஓட்டிக் கொண்டு வந்தாயிற்று. எப்படி இவனை இங்கேயே கட்டிப் போடுவது? ஆமாம் யசோதை செஞ்சதைத் தான் செய்யணும். கண்ணனோட குறும்பு தாங்க முடியாம தாம்புக் கயித்தால கட்டிப் போடறதுக்கு முன்னாடி பால் குடுத்து தானே அவனை வஞ்சித்தாள். அதையே செய்ய வேண்டியது தான்.

"இவன் எப்ப பால் குடிச்சான்?"

"ரெண்டு மணி நேரம் ஆச்சு. அதோ அங்க பாட்டில் இருக்கு. ஹார்லிக்ஸ் கலந்து குடுங்க".

செஞ்சுட்டா போச்சு. :-)

பாலை ஹார்லிக்ஸுடன் கலந்து கையில் வைத்துக் கொண்டதும் அவனாகவே வந்து அதனைப் பிடுங்கிக் கொண்டான். அவனை அப்படியே தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் போட்டு பாடத் தொடங்கினேன். பாலைக் குடித்துக் கொண்டே பாட்டும் கேட்டுக் கொண்டுத் தூங்கிப் போனான். நான் எழுத வந்தேன்.

அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே

Thursday, December 25, 2008

அனுமன் புகழ் பாடும் மந்திகள்!

கோகுலத்தின் நடுவில் நிமிர்ந்து நிற்கும் குன்றம் இது. மலர்கள் பூத்துக் குலுங்கவும் கனிகள் கனிந்து விளங்கவும் மிகச் செழிப்புடன் மரம் செடி கொடிகள் விளங்கும் குன்றம் இது. இனிய நீர்ச்சுனைகளும் இன்னிசை ஓடைகளும் நிறைந்த குன்றம் இது. யாராலும் ஏற முடியாத படி செங்குத்தாக இல்லாமல் ஆடு மாடுகளும் மற்ற விலங்குகளும் மனிதர்களும் எளிதாக ஏறிச் சென்று இயற்கை வளங்களை அனுபவிக்கும் படியாக அமைந்த குன்றம் இது. இறைவனே இக்குன்றின் வடிவில் நின்று இக்குன்றத்திற்கு ஆய்ப்பாடியினர் படைத்த படையல்களை எல்லாம் ஏற்றுக் கொண்டான் என்றால் இதன் பெருமையைச் சொல்லி முடியுமா?

இப்படிப்பட்ட இக்கோவர்த்தன குன்றத்தின் மீது மரங்களின் காய்களையும் கனிகளையும் உண்டு வாழும் மந்திகளும் (பெண்குரங்குகள்) கடுவன்களும் (ஆண்குரங்குகள்) நிறைய உண்டு. மற்ற இடங்களில் வாழும் குரங்குகள் ஐந்தறிவினவாக இருக்க இந்த கோவர்த்தன குன்றத்தில் வாழும் குரங்குகளுக்கு மட்டும் ஆறாவது அறிவும் இருக்கின்றது போலும். அதனால் தானே இந்த மந்திகள் தங்கள் குட்டன்களைத் (குழந்தைகளை) தூங்க வைக்கும் போது தங்கள் முன்னோனாகிய அனுமனின் வீர தீர கதைகளைச் சொல்லித் தூங்க வைக்கின்றன. இப்படி கதை சொல்லிக் குழந்தைகளைத் தூங்க வைப்பதை இவை எங்கே கற்றன? ஆதி சேஷன் தன் ஆயிரம் தலைகளால் இவ்வுலகைத் தாங்குவதைப் போல் தன் விரல்களால் இக்குன்றம் ஏந்திக் குளிர்மழையிலிருந்து ஆய்ப்பாடி ஆயர்களையும் அவர் தம் செல்வங்களையும் காத்தானே கோகுலன். அவர்கள் இம்மழையின் கீழ் பல நாட்கள் தங்கியிருந்த போது அவர்களிடம் இருந்து அனுமன் கதைகளையும் அவற்றைச் சொல்லி தம் குழந்தைகளை உறங்க வைக்கும் முறையையும் இந்த மந்திகள் கற்றுக் கொண்டன போலும்.


படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர்பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே

கருடனைப் புள்ளரையன் என்றாள் கோதை நாச்சியார். அவர் தம் திருத்தகப்பனார் பெரியாழ்வார் ஆதிசேஷனைப் பாம்பரையன் என்கிறார்.

பாம்புகளின் அரசனான ஆதிசேஷன் விரிந்த படங்கள் பலவும் உடையவன். அவன் பூமியைத் தாங்கிக் கிடக்கின்றான். அது போல் நீண்ட அழகிய கைகளின் விரல்கள் ஐந்தும் மலர விரித்து தாமோதரன் தாங்கும் கொற்றக் குடை எது தெரியுமா? இலங்கைக்குச் சென்று அதன் பெருமையை முழுக்க அழித்த அனுமனின் புகழினைப் பாடி தங்கள் குழந்தைகளை தங்களின் கைகளில் ஏந்தி பெண் குரங்குகள் தூங்க வைக்கும் கோவர்த்தனம் என்னும் குன்றமே.

மந்திகள் மட்டுமின்றி மாநிலத்தில் உதித்தவர் எல்லோரும் அனுமன் புகழ் பாடி அவன் தன் பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அனுமனின் திருவவதார நாளான இந்த இனிய நன்னாளில் சொல்லுவோம்.


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

ஐம்பூதங்களில் ஒன்றான காற்று பெற்ற திருமகனானவன் அஞ்சிலே ஒன்றான நீர் நிறைந்த கடலை அஞ்சிலே ஒன்றான ஆகாயமே வழியாகக் கொண்டு தாவிச் சென்றான். சிறந்தவர்களான இராமனுக்காக அவ்வாறு தாவிச் சென்று அஞ்சிலே ஒன்றான நிலமகள் பெற்ற பெண்ணான சீதையைக் கண்டு அயலாரின் ஊரில் அஞ்சிலே ஒன்றான தீயை வைத்தான். அவன் நமக்கு வேண்டியதை எல்லாம் அளித்து நம்மைக் காப்பான்.

Sunday, December 21, 2008

காலங்களின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்கள்

தமிழ் பல்கலைக்கழக பட்டய படிப்பிற்கான பாட திட்டத்தில் இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தமிழ் இலக்கியங்களை அவை இயற்றப்பட்டக் கால அடிப்படையில் தொகுத்திருந்தார்கள். அதனை எடுத்து இங்கே இடுகிறேன்.

***

(1) சங்க கால இலக்கியங்கள் (கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)

தோன்றிய நூற்கள்: அகத்தியம், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

(2) சங்கம் மருவிய கால இலக்கியங்கள் (கி.பி. 200 முதல் கி.பி. 450 வரை)

பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் இக்காலத்தில் தோன்றின. சங்க காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கள் குடித்தலையும், பரத்தமைத் தொடர்பையும் இக்கால இலக்கியங்கள் கண்டித்தன. பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் வேரூன்றின. தனிப்பாடல் அமைப்பை இளங்கோ மாற்றி சிலப்பதிகாரம் எனும் காப்பியம் தந்தார். பசியைப் போக்குதலே உயர்ந்த அறம் எனும் நோக்கில் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை எனும் காப்பியம் படைத்தார். குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் இயற்றப்பட்ட பிருகத் கதை எனும் நூலின் அடிப்படையில் பெருங்கதை அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் கொங்கு வேளிர். இது சமண சமய நூல்.

(3) சோழர் காலக் காப்பியங்கள் (கி.பி. 900 முதல் கி.பி. 1300 வரை)

1. சீவகசிந்தாமணி - திருத்தக்க தேவர்

2. வளையாபதி - 72 பாடல்கள் தற்போது கிடைத்துள்ளன. ஆரிய வைசிய புராணத்தின் அடிப்படையில் அமைந்தது.

3. குண்டலகேசி - பௌத்தம் சார்ந்தது.

4. நீலகேசி - தமிழின் முதல் தர்க்க நூல். புத்த சமய நூலுக்கு (குண்டலகேசி) எதிர்ப்பாகத் தோன்றியது. சமண சமய நூல்.

5. சூளாமணி - வடமொழியில் ஜினசேனர் எழுதிய மகாபுராணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

6. உதயணகுமார காவியம் - 367 பாடல்கள் உடையது. உதயணன் வரலாறு கூறும் நூல் இது. சமண சமயம் சார்ந்த நூல்.

7. யசோதர காவியம் - நூலாசிரியர் சமணர்.

8. நாககுமார காவியம் - சென்னைப் பல்கலைக்கழகம் 1973ல் புலவர் சண்முகத்தைக் கொண்டு இந்நூலை வெளியிட்டது. நாகபஞ்சமி கதை என்ற பெயர் உண்டு. நாககுமாரனின் கதையைக் கூறும் காப்பியம் இது.

9. மேரு மந்தர புராணம் - சமண சமயத்தின் சமய சாரம் இந்நூல். ஆசிரியர் வாமனாசாரியர். 'நல்வினையோ தீவினையோ நம்மைத் தொடரும்' என்கிறது இந்நூல்.

10. பெரிய புராணம் - ஆசிரியர் சேக்கிழார். காலம். கி.பி. 12ஆம் நூற்றாண்டு. அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன் இரன்டாம் குலோத்துங்கன். சேக்கிழார் இந்நூலுக்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வரலாறு கூறும் நூல்.

11. கம்பராமாயணம் - ஆசிரியர் கம்பர். தமிழில் தோன்றிய காப்பியங்களுள் அளவிற் பெரியது. இராமபிரானின் வரலாறு கூறும் நூல்.

12. நளவெண்பா - ஆசிரியர் புகழேந்தி. வியாசபாரதத்தில் வரும் நளன் பற்றிய கதையைக் கூறுவது. பெண்பா யாப்பில் அமைந்தது.

(4) நாயக்கர் காலம்

இதைச் சிற்றிலக்கிய காலமாக அழைக்கலாம். இக்காலத்தில் தான் கோவை, பரணி, பள்ளு, பிள்ளைத்தமிழ், குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றின.

நன்றி: இணையத் தமிழ் பல்கலைக்கழகம்.

Saturday, December 20, 2008

மன்னு வடமதுரை மைந்தன்

தொல்காப்பியம் முதற்கொண்டு பழந்தமிழ் நூற்கள் பலவற்றிலும் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டும் தரவுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. திருமுருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று இப்போது பெரும்பான்மையோரின் மனத்தில் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது; அப்படி நிலைநாட்ட எந்த விதமான தரவுகள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்து வைக்கப்பட்டனவோ அதே அளவிற்கு அதே தரத்தில் அதே போன்ற தரவுகள் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டுவதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்தத் தரவுகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டு வருகிறேன்; இனிமேலும் எழுதுவேன். இன்றைக்கு 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்ற திருப்பாவை வரிகளில் சொல்லப்படும் மதுரை வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுராவா தெற்கே வைகைக்கரையில் இருக்கும் மதுரையா என்று மட்டும் ஆராய்வோம்.

ஆன்மிகத்தையும் பக்தி இலக்கியங்களையும் முடிந்த வரையில் எளிமைப்படுத்தி அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் எழுதி வரும் நல்நண்பர் இரவிசங்கர் இந்த வரியில் சொல்லப்படும் வடமதுரை மைந்தன் தமிழக மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை வாழ் அழகனே என்று சொல்கிறார். ஆண்டாள் தென் தமிழகத்தில் இருக்கும் வில்லிபுத்தூரில் இருந்து பார்க்கும் போது தமிழக மதுரை அவளுக்கு வடக்கே அமைகிறது; அதனால் அந்த மதுரையைத் தான் அவள் வடமதுரை என்றாள் என்கிறார். அதற்கு வடபழனி, தென்பழனி போன்ற எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார். ஏரணத்திற்குப் பொருந்துவதைப் போல் தோன்றினாலும் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காண்பதே சிறப்பு என்பதால் இன்னும் கொஞ்சம் ஆராயலாம் என்று தோன்றியது.

வில்லிபுத்தூருக்கு வடக்கே தான் தமிழக மதுரை இருக்கிறது. அங்கு கூடல் அழகர் திருக்கோவில் இருக்கிறது. அதனால் வடமதுரை என்று திருப்பாவையில் குறிக்கப்பட்டது தமிழக மதுரை தான் என்றால் வடமதுரை மைந்தன் (வடமதுரைத் தலைவன்) என்பவன் கூடல் அழகராகவே எடுத்துக் கொள்ளலாம். மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகனாம் கள்ளழகரைத் தான் அந்தத் தொடர் குறிக்கிறது என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படி குறிப்பாக கள்ளழகரைத் தான் சொன்னாள் கோதை என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

வடமதுரை என்பது தமிழக மதுரை தானா என்ற கேள்விக்குப் பதிலாக நாச்சியார் திருமொழியில் இருந்து சில வரிகளை எடுத்துத் தந்திருக்கிறார். அவற்றையும் ஆராய்வோம்.

பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்
யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்
சோலைமலைப்பெருமாள் துவராபதி எம்பெருமான்...

1. பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்; யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்

இந்த வரிகள் வருவது 'மற்றிருந்தீர்' என்று தொடங்கும் நாச்சியார் திருமொழியின் 12ம் திருமொழி. இந்தத் திருமொழியில் எல்லா பாசுரங்களிலும் 'என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்' என்று சொல்லும் விதமாக 'உய்த்திடுமின்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார் நாச்சியார்.

மதுரைப் புறத்தென்னை உய்த்திடுமின், ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின், நந்தகோபன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின், யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், பத்தவிலோசனத்து என்னை உய்த்திடுமின், பாண்டிவடத்தென்னை உய்த்திடுமின், கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின், துவராபதிக்கென்னை உய்த்திடுமின் என்றெல்லாம் சொல்கிறாள். இவற்றில் 'பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்' என்பதை 'பாண்டிய நாட்டில் வடபகுதியில் இருக்கும் மதுரை நகருக்கு என்னை கொண்டு சேருங்கள்' என்று பொருள் கொள்கிறார் இரவிசங்கர். பொருத்தமான பொருள் தானா? மற்ற இடங்களில் எல்லாமே கண்ணனின் பிறப்பும் வாழ்வும் நடந்ததென சொல்லப்பட்ட இடங்களை நாச்சியார் பாடும் போது இங்கே திடீரென்று பாண்டிய நாட்டைச் சொல்வாரா? பொருந்துகிறதா?

இதற்கு முந்தைய வரியையும் சேர்த்துப் பார்த்தால் பொருள் இன்னும் தெளிவாகப் புரியும். 'பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்'. பாருங்கள் திருமாலிருஞ்சோலையில் பலதேவனின் கோவில் இருந்ததாக பரிபாடல் சொல்கிறது; இங்கும் நாச்சியார் பலதேவனைச் சொல்லியிருக்கிறார்; அதனால் இது பாண்டிய நாட்டின் வடப்புறத்தில் இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தான் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதே - என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா? அவக்கரம் வேண்டாம்; இன்னும் பொருளை ஆய்வோம். பிலம்பன் தன்னை பண் அழிய பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்கிறாளே நாச்சியார். பிலம்பன் என்றால் யார்? எது? பண் அழிய பலதேவன் வென்றது யாரை? எதை? அது பாண்டிய நாட்டில் நடந்ததா? ஒன்றும் புரியவில்லையே. பாகவத புராணத்தைப் பார்த்தால் புரியும்.

ப்ரலம்பன் என்ற அசுரனை பலராமன் பாண்டிரமென்னும் ஆலமரத்தின் அருகில் வென்று கொன்றதாக பாகவத புராணம் சொல்கிறது. அந்த ஆலமரம் தமிழகத்தில் இல்லை; வடக்கே யமுனைக்கரையில் தான் இருக்கிறது. ஆலமரத்திற்கு வடவிருட்சம் என்ற பெயரும் உண்டு. ஆலிலைத் துயில்பவன் என்பதைத் தானே வடபத்ரசாயி என்று சொல்கிறோம்; வில்லிபுத்தூரில் இருக்கும் வடபெருங்கோவிலுடையான் திருக்கோவில் திருமாலின் திருப்பெயர் அது தானே. (நல்ல வேளை. அந்த வடபெருங்கோவிலும் ஆண்டாளின் வீட்டிற்கு வடக்கே இருந்ததால் தான் அந்தப் பெயர் என்று சொல்லாமல் விட்டோம்). வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் பாண்டிரம் என்னும் ஆலமரத்தின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்பதைத் தான் ஆண்டாள் இங்கே 'பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்' என்கிறாள். அதில் ஐயமே இல்லை.

2. சோலைமலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்:

இந்த இடத்தில் சோலைமலைப்பெருமான் தான் துவராபதி எம்பெருமான் என்று சொல்வது எந்த வகையில் 'வடமதுரை மைந்தன்' என்று குறித்தது தமிழக மதுரையைக் குறிக்கும் என்று புரியவில்லை. சோலைமலையிலும் மற்ற திருமால் கோவில்களிலும் இருப்பவன் துவராபதி இறைவன் தான்; ஆலின் இலைப் பெருமான் தான். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அந்தத் தரவு வடமதுரை மைந்தன் என்று குறித்தது கூடல் அழகரையோ மதுரைக்கு வடக்கே இருக்கும் சோலைமலை அழகரையோ தான் என்று காட்டுவதாகத் தெரியவில்லை. வேங்கடவன் விண்ணோர் தலைவன் என்றெல்லாம் பட்டியல் இட்டுவருவதைப் போல் சோலைமலைப் பெருமான், துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப்பெருமான் என்று அவன் பெயர்களையும் புகழ்களையும் பட்டியல் இடுகிறாள் கோதை. அது போன்ற பட்டியலை நாலாயிரத்தில் நிறைய பார்க்கலாம். அதனால் வடமதுரை என்றது தென்னக மதுரையைத் தான் என்றோ யமுனைத்துறைவன் என்றது வைகைக்கரையைத் தான் என்றோ காட்டுவதாக இந்தத் தரவின் மூலம் அறிய முடியவில்லை.

ஆய்ப்பாடியை வில்லிபுத்தூருக்கு மாற்றி தன்னையும் தன் தோழியர்களையும் ஆய்ப்பெண்களாக மாற்றி வடபெரும்கோவிலுடையானின் (வடபத்ரசாயியின்) திருக்கோவிலை நந்தகோபன் திருமாளிகையாக மாற்றி ஆண்டாள் திருப்பாவை பாடினாள் என்று சொன்னால் அதற்கு திருப்பாவையும் பெரியவர்கள் பலர் செய்த உரைகளும் துணையாக நிற்கின்றன. ஆனால் ஆய்ப்பாடியை மதுரைக்கும் யமுனையை வைகைக்கும் ஆண்டாள் மாற்றுகிறாள் என்பதற்கு வலுவான தரவு இருப்பதாகத் தோன்றவில்லை.

***

இன்னும் ஆழமாகச் சென்று ஆராய நாலாயிரத்தில் இருந்து இன்னும் சில தரவுகளைப் பார்க்கலாம்.

3. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்:

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் ஒரு பாசுரம் இது,

இதுவோ பொருத்தம் மின்னாழிப்படையாய்
ஏறும் இருஞ்சிறைப்புள்
அதுவே கொடியாய் உயர்த்தானே
என்றென்று ஏங்கி அழுதக்கால்
எதுவே ஆகக் கருதும் கொல்
இம்மாஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே


ஆண்டாள் சொன்னதையே தான் இவரும் சொல்கிறார். மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையில் பிறந்த மாயனே. 'ஆகா! சோலை என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்?! இவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். தாமிரபரணிக் கரையில் இருக்கும் திருக்குருகூராம் ஆழ்வார் திருநகரியில் பிறந்து வாழ்ந்தவர் தான். இவருக்கும் தமிழக மதுரை வடக்கில் இருப்பது தான். அதனால் தான் உத்தர மதுரை என்றார். அது மட்டும் இல்லாமல் கோதை 'மாயனை' என்று தொடங்கியது போல் இவரும் 'மாயனே' என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலிருஞ்சோலை தான் உத்தர மதுரை என்பதைக் காட்ட மதுவார் சோலை என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வளவு தெளிவாக ஆழ்வாரின் திருவுள்ளம் தெரியும் போது நேர்மையாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. நேர்மையை உள்ளத்தே கொள்வோம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா. ஐயோ பாவம். 'பிறந்த' என்ற சொல்லை இட்டுக் கெடுத்தாரே. திருமாலிருஞ்சோலையில் மாயன் பிறந்ததாக எந்த புராணமும் சொல்லவில்லையே. தமிழக மதுரையில் பிறந்ததாகவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் ஆழ்வார் திருவுள்ளம் உண்மையில் வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுரையில் பிறந்தவன் தான் மாயன் என்பதைச் சொல்வதாகத் தானே தெரிகிறது. அந்த உத்தர மதுரையைத் தானே மதுவார் சோலை உடைய மதுரை என்கிறார். இந்தப் பாசுரமும் 'வடமதுரை மைந்தன்' என்றால் 'உத்தர மதுரையில் பிறந்தவன்' என்ற பொருளைத் தான் சொல்கிறது.

4. திருமங்கை மன்னன்:

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சில இடங்களில் மதுரை என்று வருகிறது. அவற்றைப் பார்ப்போம்.

சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை...

பெருமாள் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களைப் பட்டியல் இடும் போது திருமாலிருஞ்சோலை, திருமோகூர் என்று மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் இரு தலங்களைச் சொல்லிவிட்டு உடனே பத்ரிகாச்ரமம் என்ற வதரியையும் வடமதுரையையும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் சோழநாட்டவர். அதனால் அவருக்கு தென்னக மதுரை தென்மதுரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்; அது மட்டும் இல்லாமல் மதுரையின் வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தனியாகச் சொல்லிவிட்டார். அதனால் வடமதுரை என்று சொன்னது உண்மையிலேயே வடநாட்டில் இருக்கும் மதுரையைத் தான் என்று கொள்வதில் தடையில்லை.

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே.

மன்னு வடமதுரை என்று நாச்சியார் சொன்னதைப் போல் இவர் மன்னு மதுரை என்கிறார். வட என்று சொல்லவில்லை; அதனால் தமிழக மதுரையைத் தான் சொன்னார் என்று கொள்வதில் தட்டில்லை. ஆனால் மன்னு மதுரை என்பது வசுதேவருக்கு அடைமொழியாக வந்ததால் இங்கே சொல்லப்படும் மதுரை வடநாட்டு மதுரை என்பது தெரிகிறது. தமிழக மதுரையில் வசுதேவர் வாழவில்லை; அவருக்குக் கோவிலும் இல்லை.

வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
நறையூர் நின்ற நம்பியே

இங்கும் வடமதுரை என்றது வடநாட்டு மதுரையைத் தான் என்பது வில் விழாவையும், மல்லரைக் கொன்றதையும், கம்சனைக் காய்ந்ததையும், காளியன் மேல் பாய்ந்ததையும் சொன்னதால் தெளிவு.

***

5. விப்ரநாராயணர்:

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மதுரையைப் பற்றி ஓரிடத்தில் குறித்துள்ளார்.

வளவெழும் தவள மாட
மதுரை மாநகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
கண்ணனை அரங்கமாலை...

அடடா. மதுரை மாநகரம் என்று சொல்லியிருக்கிறாரே. அது நம் தமிழக மதுரையாய் இருக்கலாமே. தவள மாடங்கள் நிறைந்த மதுரை என்று இம்மாநகரை இன்னும் பல இலக்கியங்கள் புகழ்கின்றதே - என்றால், 'மாநகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற' என்று சொன்னதால் இங்கும் சொல்லப்பட்டது வடநாட்டு மதுரையைத் தான் என்பது தெளிவு.

***

6. வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்:

சரி. மற்றவர் சொன்னதைப் பார்த்தோம். ஆண்டாளின் திருத்தந்தை சொன்னவற்றைப் பார்க்கலாமா?

'திருமதுரையுள் சிலை குனித்து' என்று திருப்பல்லாண்டில் பாடுகிறார் விட்டுசித்தர். வில்லை முறித்து என்று சொன்னதால் இங்கு சொல்லப்படும் திருமதுரை வடநாட்டு மதுரை தான் என்பது தெளிவு.

வானில் அரசு வைகுந்தக் குட்டன்
வாசுதேவன் மதுரைமன்னன் நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன்....

இங்கே மதுரை மன்னன் என்றதால் எந்த மதுரையைச் சொன்னார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வாசுதேவன் (வசுதேவன் மகன்) என்றதாலும் நந்தகோன் இளவரசு என்றதாலும் கோவலர் குட்டன் என்றதாலும் இங்கே மன்னனாய் சொன்னது வடமதுரைக்கு மன்னன் என்று தான் என்பது தெளிவு.

இங்கே பெரியாழ்வார் 'மதுரை மன்னன்' என்றது போல் அவர்தம் திருமகளாரும் 'மதுரையார் மன்னன்' என்றும் 'வடமதுரையார் மன்னன்' என்றும் பாடுகிறாள். அங்கும் இதே பொருள் தான் என்பதில் ஐயமில்லை.

'என் மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறார் பெரியாழ்வார். கோதை 'உய்த்திடுமின்' என்று பாடிய பிறகு பாடியது போலும் இந்தப் பாசுரம். அதனால் தான் 'மல்லரை அட்டவன் பின் போய்' மதுரைப் புறம் புக்காள் கொலோ என்று கேட்கிறார். இங்கும் மல்லரை அட்ட நிகழ்ச்சி நடந்த வடநாட்டு மதுரை தான் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

இன்னொரு இடத்தில் பெருமாள் திருத்தலங்களைப் பட்டியல் இடுகிறார் பெரியாழ்வார். 'வடதிசை மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவரை, அயோத்தி, இடமுடை வதரி, இட வகையுடைய எம் புருடோத்தமன் இருக்கை' என்கிறார். இங்கு பெரும்பாலும் வடநாட்டில் இருக்கும் தலங்களைக் குறித்ததால் இந்தப் பட்டியலில் வரும் 'வடதிசை மதுரை' தென்னக மதுரை இல்லை வடநாட்டு மதுரையே என்பது தெளிவு.

***

இப்படி நாலாயிரத்தில் 'மதுரை' என்ற சொல் வரும் இடங்களை எல்லாம் பார்க்கும் போது அங்கெல்லாம் குறிக்கப்பட்டது வடநாட்டு மதுரையே என்பது தெளிவாகத் தெரிவதால் ஆண்டாளும் 'வடமதுரை மைந்தனை' என்ற போது வடநாட்டு மதுரையைத் தான் குறித்தாள் என்பது தெளிவு. வில்லிபுத்தூருக்கு வடக்கே இருக்கும் தென்னக மதுரையை வடமதுரை என்றாள் என்பது சுவையாக இருக்கிறது; ஆனால் வலிந்து கொண்ட பொருளாகத் தான் தோன்றுகிறது.

கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று காட்ட போதிய அளவிற்குத் தரவுகள் இருக்கின்றன. இந்த 'வலிந்து கொள்ளப்பட்ட தரவுகள்' தேவையில்லை. எப்படி திருமுருகன் வடக்கே பிறந்து வடக்கே வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானே எப்படி சிவபெருமான் வடகயிலையில் வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானோ அதே போல் கண்ணனும் வடமதுரையில் பிறந்து வடமதுரையார் மன்னனாக இருந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறான். அதுவும் மிகத் தெளிவு.

புறநானூறு சொல்லும் உடன்கட்டை ஏற்றம்...

புறநானூறு 246ஆவது பாடல். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் அரசி பெருங்கோப்பெண்டு என்பவர் பாடியது. பூதப்பாண்டியன் இளம்வயதிலேயே மாண்டுவிட கணவனை இழந்து வாழேன் என்று கூறி உடன்கட்டை ஏற முடிவெடுத்தாள் பெருங்கோப்பெண்டு. அமைச்சர்களும் அரசவைப் பெரியோர்களும் அவளது முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் வேண்டுகோளை மறுத்து அரசி இயற்றிய பாடல் இது.

பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!


திணை: பொதுவியல் (பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத
பொதுவான செய்திகளைக் கூறும் திணை)
துறை: ஆனந்தப்பையுள் (கணவன் இறப்ப மனைவி மெலிந்து வருந்தும் அறத்துறை)

சான்றோர்களே! சான்றோர்களே! நீயும் இறந்துபட்ட கணவனுடன் சென்று விடு என்று என்னை அனுப்பாமல் அதனைத் தவிர்த்து உயிர் வாழச் சொல்லும் உங்கள் பொல்லாத பேரறிவினை உடையவராக இருக்கிறீர்களே.

அணிலின் முதுகில் உள்ள கோடுகளைப் போன்ற வரிகளை உடைய வெள்ளரிக்காயைப் பிளந்தால் அதிலிருக்கும் சிறு விதைகளைப் பார்க்கலாம்; அந்த விதைகளைப் போன்ற நுண்ணிய நெய்யைக் கையால் தொடாமல் இருக்க வேன்டும். இலையின் மேல் இடப்பட்ட கைப்பிடி அளவு பழைய சோற்றைப் பிழிந்து நீரை விலக்கி வெள்ளெருக்குத் துவையலைத் தொட்டுக் கொண்டு சிறிதே புளியைச் சேர்த்துக் கொண்டு வெந்தும் வேகாததுமாக உண்ண வேண்டும். பரல் கற்கள் (பருக்கைக் கற்கள்) நிறைந்த கட்டாந்தரையில் பாய் இன்றிப் படுக்க வேண்டும். இப்படி ஒரு கடின வாழ்க்கையை விரும்பி வாழும், கைம்மை நோன்பு நோற்றேனும் உயிர் வாழ விரும்பும் பெண்களில் ஒருத்தி இல்லை யான்.

ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் கருங்கட்டைகளால் உண்டான நெருப்பை உடைய இந்த ஈமப்படுக்கை உங்களுக்கு வேண்டுமானால் அரியதாகவும் கொடியதாகவும் இருக்கலாம்; எனக்கு அப்படி இல்லை.

பெரிய தோளினை உடைய என் கணவன் மாய்ந்த பின் நன்கு மலர்ந்த அழகான தாமரை மலர்கள் நிறைந்த நீர்ப்பொய்கையும் தீயும் ஒரே தன்மை உடையன.

***

உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்தப் பாடல் எழுதப்பட்ட போது இருந்திருக்கிறது என்பது இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது; ஆனால் அது சான்றோர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இந்தப் பாடலின் மூலம் விதவைகள் படும் துயரமும் சொல்லப்பட்டிருக்கிறது. கைம்மை நோன்பெனும் துயரம் பலவகைகளில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலின் குறிப்பில் 'பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவள் இந்தப் பாடலைப் பாடிய பின்னர் தீப்பாய்ந்தாளா இல்லையா என்ற குறிப்பு இந்தப் பாடலில் இல்லை. ஆனால் அவள் தீப்பாய்ந்தாள் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.

பாண்டியன் மனைவி தீப்பாய்ந்தாள் என்றால் வேறு ஏதாவது புலவர் அதனைப் பாடியிருப்பார்; ஆனால் அப்படிப்பட்ட குறிப்பு வேறு எந்தப் பாடலிலும் இல்லை; அதனால் இவள் தீப்பாய்ந்தாள் எனக் கொள்ளத் தேவையில்லை என்றும் சிலர் கருதுகின்றனர். ஏரணப்படி சரி தான் என்று தோன்றத் தொடங்கினாலும் மேற்கேள்விகள் எழாமல் இல்லை. சங்க காலத்தில் இயற்றப்பட்ட எல்லா பாடல்களும் கிடைக்கவில்லை; பத்துப்பாட்டு எட்டுத்தொகை கீழ்க்கணக்கு என்று தொகுக்கப்பட்ட தொகைப்பாடல்களில் இருக்கும் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அதனால் வேறு எந்தப் பாடலிலும் இந்தக் குறிப்பு இல்லை என்பது இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று காட்டுவதாக அமையாது.

இந்தப் பாடல் மட்டுமே கைம்மைக் கொடுமையையும் உடன்கட்டை ஏறுவதையும் கூறுகிறது; அதனால் இது சிறுபான்மையாகத் தான் நடந்திருக்கும்; பெரும்பான்மையாக நடந்திருந்தால் மற்ற பாடல்கள் கூறியிருக்கும் - என்றும் ஒரு கருத்து இருக்கலாம். அதற்கும் மறுப்பு உண்டு. உடன்கட்டை ஏறுவது வேண்டுமானால் சிறுபான்மையாக இருந்திருக்கலாம்; ஆனால் கைம்மை பெரும்பான்மையாகத் தான் இருந்தது என்பது இந்தப் பாடலின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறவில்லை; மற்றவர் செய்ததைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு பாடினாள். கபிலர் பெண்ணைப் போல் பல பாடல்கள் பாடியிருக்கிறார்; அதனால் அவர் பெண் என்று கூறிவிட இயலுமா? - என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது. மற்றவர் செய்ததைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு படர்க்கையில் பாடாமல் மரபுப்படி தன்மையில் பெருங்கோப்பெண்டு பாடியிருந்தாலும் இருந்ததைத் தான் பாடியிருக்கிறாள் என்பது கைம்மை நோன்பைப் பற்றி தெளிவாகப் பாடியிருப்பதன் மூலம் தெரிகிறது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாகத் தெரியும் செய்திகளையும் ஏற்க மறுத்து இப்படி வாதங்களை வைப்பது தான் ஏன் என்று புரிவதில்லை. வடமொழி இலக்கியங்களில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சொல்லைத் தவறாகப் பொருள் கொண்டு அதனை முடிந்த முடிபென்று பேச முடியும் போது (எடுத்துக்காட்டுகள்: இராமனுக்குப் பல மனைவிகள் என்று கூறுவது, திராவிட சிசு என்று சங்கரர் தன்னையோ சம்பந்தரையோ 'இழிவாக'ச் சொன்னார் என்று சாதிப்பது, இலிங்க வழிபாட்டை ஆரியர்கள் பழித்தார்கள் என்று கூறுவது) தெள்ளத் தெளிவாகத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் செய்திகளைத் தங்களின் கருத்தாக்கத்திற்கு ஒவ்வாத செய்திகள் என்பதால் வலிந்து புறந்தள்ள எடுக்கப்படும் முயற்சிகளாகத் தான் இந்த வகை மறுப்புகளைக் காண முடிகிறது.

Wednesday, December 17, 2008

சிவன் கோவில் தீர்த்த சடாரியும் பெருமாள் கோவில் திருநீறும்....

பெருமாள் கோவிலில் தீர்த்தம் தருவார்கள். சிவன் கோவிலில் திருநீறு தானே தருவார்கள்? தீர்த்தப் பிரசாதம் தருவதும் உண்டா? உண்டு என்று தான் கூகிளார் சொல்கிறார். இராமேஸ்வரம் இராமநாதப் பெருமான் சன்னிதியில் தீர்த்தப் பிரசாதம் தருவார்கள் என்ற குறிப்பைப் படித்தேன். சரி தானா என்று தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.

***

கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒரு சிவத்தலம் திருநல்லூர். அப்பர், சம்பந்தர் இருவருடைய பதிகங்களையும் பெற்ற திருத்தலம். அப்பர் பெருமான் இறைவனுடைய திருவடிகளில் சரணடைந்தது இந்தத் திருத்தலத்தில் என்பதால் இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடிநிலைகளை இங்கு வணங்க வரும் பக்தர்களின் தலைகளில் வைத்து ஆசி வழங்கும் வழக்கம் இருக்கிறது.

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினதிருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனதுருவி மணிமகுடத் தேறத்துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே.

நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர் களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி, அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார். இஃது அவர் பேரருளின் தன்மையாம்.

பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார் சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை, பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத் தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திரு வடிகளை, என் தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர்.

தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

இதழ்கள் மிக்க கொன்றை மலரைத் தலையில் சூடி, எருக்கம் பூ மாலை பூண்டு, தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக் கொண்டு, அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக்கொண்டு, கையில் வில் ஏந்தி, யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.

வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார், வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி, மலையை வில்லாகக்கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி, முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம் திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி, அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி, நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து, தீயினை யும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு, அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து, மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர். குறைந்த சந்திரனை வளரவைத்தவர். பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்த பாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்ல தவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர். அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர். அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர். நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர். தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர். மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.

குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர். இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர். திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்த விடத்தை உண்டு, அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர். எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர். நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர். அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர். இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம், மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர். தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர். நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர். கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன் புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர். வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார், பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க, கங்கை அலை வீச, அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர். தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர். சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்ட வர். நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர். உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்ட வர். விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர்.

குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார், கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளை யும் அமைத்தவர். கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர். இராவணன் ` தலைவனே ` என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர். தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து, நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர்.

பதிகத்தின் பொழிப்புரைக்கு நன்றி: http://www.thevaaram.org/

பெருமாள் கோவில்களில் பெருமாள் திருவடிநிலைகளை சடகோபன் நம்மாழ்வாரின் திருவுருவமாகக் கருதுவதால் சடாரி என்று அழைப்பார்கள். இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடி நிலைகளை எந்தப் பெயருடன் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை - அப்பர் என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.

***

பெருமாள் விபூதி அணிந்து கொள்வதும் விபூதி பிரசாதம் அந்த நேரத்தில் எல்லோருக்கும் தரப்படுவதும் பற்றி மிக அருமையாக மிகத் தெளிவாக கதை வசனத்துடன் அந்த நிகழ்வை இரவிசங்கர் எழுதியிருந்தார். அதனைப் படித்த பின்னர் தான் திருக்கண்ணங்குடி என்று கூகிளில் தேடினேன். இரவிசங்கர் சொன்ன நிகழ்வைப் பற்றி சொல்லும் குறிப்புகளையும் படித்தேன். பெருமாள் திருநீறு அணிவதற்கு இன்னொரு நிகழ்வையும் காட்டும் குறிப்பு ஒன்றைப் படித்தேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

உபரிசிரவஸு என்னும் மன்னன் சிவபக்தன். (இந்த உபரிசிரவஸு என்ற பெயர் ஏதோ ஒரு சோழ மன்னனின் தமிழ்ப்பெயரின் வடமொழி வடிவம் என்று நினைக்கிறேன்). தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது அவன் வழக்கம். ஒரு முறை திருக்கண்ணங்குடி வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது இந்தக் கோவில் சிவன் கோவில் என்று எண்ணி தரிசிக்க உள்ளே சென்றான். அவன் ஏமாறாமல் இருக்க மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) பெருமாள் திருநீறு அணிந்து சிவனாகக் காட்சியளித்தார்.

Friday, December 12, 2008

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை! நீருக்குள் மூழ்கிடும் தாமரை!

நிறைய கவிஞர்கள் அவர்களது முத்திரையாக தமது பெயரையோ தமது காதலர் பெயரையோ தமக்குப் பிடித்த ஒன்றின் பெயரையோ பாடலின் கடைசி வரியிலோ கடைசி வரியின் முந்தைய வரியிலோ வைப்பார்கள். கவிஞர் தாமரை தன் பெயரை இந்தப்பாடலின் இரண்டாவது வரியிலேயே வைத்திருக்கிறார். :-)

ஒரு பெண் கவிஞர் ஆணின் காதல் உணர்வுகளை அருமையாகக் கூறும் இந்தப் பாடல் வரிகளை எழுதியிருப்பது மிக அருமை. காதலின் வேகத்தால் தன் நிலை தலைகீழாகப் போவதை இந்தப் பாடலில் காதலன் மிக மிக நன்றாகச் சொல்கிறான். ஒவ்வொரு வரியும் அருமை. அதிலும் எடுப்பும் (முதல் நான்கு வரிகள்) தொடுப்பும் (அடுத்த நான்கு வரிகள்) மிக மிக அருமை.



நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!

நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!

என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)

படம்: வாரணம் ஆயிரம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: கவிஞர் தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா


காதலனாக நடிக்கும் சூர்யா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாடலின் வரிகளுக்குப் பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள். சொல்கிறேன்.

Thursday, December 11, 2008

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெரும்ஜோதி மந்திரத்தை அடியேனின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணபிரேம் ஓதி ஒலிப்பேழையாக சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டிருந்தார். எனக்கும் ஒரு ஒலிப்பேழையைத் தந்திருந்தார். இன்றைக்கு அதனை யூட்யூபில் வள்ளலார், அவரது ஜோதித் திருவுரு, அவருடன் தொடர்புடைய இடங்கள் போன்ற படங்களுடன் ஏற்றி எனக்குச் சுட்டி அனுப்பியிருந்தார். அவர் அதனை அனுப்பிப் பத்தே நிமிடங்கள் தான் ஆகின்றன. இன்றைக்கு திருக்கார்த்திகைக்கு அருட்பெருஞ்ஜோதி மந்திரம் கேட்கக் கிடைத்ததும் வள்ளலாரின் திருவுருவ அருவ தரிசனங்கள் கிடைத்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

Wednesday, December 03, 2008

சுடும் நிலவு சுடாத சூரியன்...

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

(சுடும் நிலவு)





இமை அடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதி இருந்தாலும் நாவே உலரும்

தப்பு எல்லாம் கடிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சை தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்

நாக்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

(சுடும் நிலவு)

மழைத் துளி நமக்கு சமுத்திரம் ஆகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய் போகும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம் மோட்சமாகும்
மத்த பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தேய்ந்து மிருகம் ஆகும்
மிருகம் தூங்கி தெய்வம் ஆகும்

தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

(சுடும் நிலவு)

படம்: தம்பி
வெளிவந்த வருடம்: 2006
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்
இயற்றியவர்: வைரமுத்து

Monday, December 01, 2008

தயங்கித் தயங்கிக் கேட்டதால் தயங்கித் தயங்கிப் பதில் சொல்கிறேன்!

முன்பு 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன' என்று ஒரு இடுகை இட்டு நண்பர்கள் கேள்விகள் கேட்க பதில்கள் சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் கேட்காமல் மிக மிகத் தயங்கிப் பின்னர் கடைசியில் சில கேள்விகளைக் கேட்டார் இராகவ். 'சரி. குமரன் பதில் சொல்லப் போவதில்லை. மறந்துவிட்டார்' என்றே அவர் எண்ணியிருப்பார். அவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. மறக்கவில்லை. ஆனால் அவர் தயங்கித் தயங்கிக் கேட்டதைப் போல் நானும் பதில் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தேன்.

தயக்கம் மட்டுமின்றி இன்னொரு வேலையும் இருந்தது. மே மாதத்திலிருந்து படிக்கவென்று சேர்த்து வைத்திருந்த நண்பர்களின் இடுகைகள் குவிந்திருந்தன. அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து இப்போது தான் அக்டோபருக்கு வந்திருக்கிறேன். விரைவில் எல்லாவற்றையும் படித்து முடித்துவிடுவேன் என்று நம்புகிறேன். :-)

இதோ தயங்கித் தயங்கி இராகவன் கேட்ட கேள்விகள்!

குமரன், இதோ என்னுடைய கேள்விகள்.. முன்னரே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனாலும் தயக்கம் இருந்ததால் கேக்கவில்லை. கேள்விகளில் வார்த்தைகள் தவறாக இருப்பின் சரி செய்து விடையளிக்கவும்.

1. அன்னை பார்வதி, திருமாலின் தங்கை என்பது எந்த வகையில். எனக்கு தெரிந்து எந்த வைஷ்ணவரும் இதை ஒத்துக் கொண்டதாக தெரியவில்லை. நாராயணண், நான்முகனை படைத்தான், நான்முகன் சங்கரனை படைத்தான் என்ற பாசுர அளவில் மட்டும் எனக்கு தெரியும்.

2. பிராம்மணன் என்பவர் யார்? சற்று விரிவாக விளக்க வேண்டுகிறேன்.

3. என் தாய்மொழி தமிழாக இருந்தும், 23 வயது வரை பள்ளியில், நண்பர்கள் அனைவருடனும் செளராஷ்ட்ர மொழி பேசியே வளர்ந்ததால் தமிழ் சில நேரங்களில் தடுமாறும். நீங்க இப்புடி தமிழ்ல கலக்குறீங்களே எப்புடி (கொஞ்சம் காமெடியா சொல்லலாமே)

4. பலவிதமான பேச்சுத்தமிழ் புழக்கத்தில் உள்ளது போலவே, செளராஷ்ட்ரமும் உள்ளதே ஏன்?? உதாரணத்திற்கு எமனேஸ்வரம் செளராஷ்ட்ர பேச்சை மதுரை மக்கள் கேலி செய்வர். செந்தமிழ் என்பது போல் செம்மையான செளராஷ்ட்ரா மொழி உள்ளதா ?


ஒவ்வொன்றாகப் பதில் சொல்கிறேன். முடிந்த வரை சிரிச்சுவையுடன். நீங்களும் சிரிச்சு வையுங்கள். :-)

1. தமிழக வைணவர் எவரும் பார்வதியின் அண்ணன் திருமால் என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை இராகவ். இரவிசங்கரிடம் கேட்டால் அப்படி ஏற்றுக் கொண்டதற்குத் தரவுகள் தரலாம். ஆனால் தமிழக சைவ, சாக்த சமயங்களில் எல்லாம் அந்தக் கருத்து வலுவாக இருக்கிறது. இந்தக் கருத்து சமய ஒற்றுமைக்காக ஆதிசங்கரரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். ஸ்மார்த்தத்தின் வழியே தமிழகத்திலும் அந்தக் கருத்து வலுப்பெற்று சைவ சாக்த சமயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் வெறும் ஊகங்களே.

ஆழ்வார்கள் யாரும் பார்வதிக்கும் திருமாலுக்கும் உள்ள உடன்பிறந்தோர் உறவைப் பற்றி பேசவில்லை. ஆனால் பெருமாளின் உடலில் 'பிரம்மன், சிவன், திருமகள்' மூவருக்கும் இடமுண்டு என்று பாடியிருக்கிறார்கள். அப்போது பெருமாளின் வலப்புறமே சிவனுக்குரியது என்று பாடியிருக்கிறார்கள். அது சங்கரநாராயண உருவத்தில் சிவன் வலப்புறத்திலும் திருமால் இடப்புறத்திலும் இருப்பதை ஒத்திருப்பதைப் பார்க்கலாம். சங்கரநாராயண உருவத்தை அருத்தநாரீசுவர உருவத்திற்கு ஒப்பிட்டால் அதே இடப்பக்கத்தில் அம்மை இருப்பதைக் காணலாம். அதனால் நாயன்மாரில் ஒருவர் சொன்ன 'அரியலால் தேவியில்லை ஐயன் ஐயனாருக்கே' என்ற கருத்து வலுப்படுவதைக் காணலாம்.

இந்தக் கேள்விக்கு இன்னும் விரிவாக விடை தரலாம். அதனை நம் நண்பர் இரவிசங்கர் செய்தால் இன்னும் விரிவாகவும் சுவையாகவும் இருக்கும். நேரமும் தேவையும் அமைந்தால் அவர் எழுதலாம்.

2. இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்னர் பாரதியார் உபநிடதங்களின் கருத்தினை தொகுத்துத் தந்திருப்பதைத் தருகிறேன்.

'பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்... பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள். ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று.

அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.'

இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)

3. எழுதுறது வேற; பேசுறது வேற இராகவ். என்னுடன் தொலைபேசிய பதிவுலக நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். நானும் எப்படி தயங்கித் தயங்கி பேசுகிறேன் என்று. :-)

ஆமா. நீங்க 23 வயது வரை பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தீர்களா? சொல்லவே இல்லை? ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை வருடம் படித்தீர்கள்? :-)

என்னுடைய தமிழார்வத்திற்கு எனக்கு அமைந்த தமிழாசிரியர்கள் தான் காரணம் இராகவ். நானும் பள்ளி இறுதி வகுப்பு வரை பள்ளியில் நண்பர்களுடன் சௌராஷ்ட்ரம் பேசியே தான் வளர்ந்தேன். ஏதாவது ஒரு குறை இருந்தால் இன்னொன்றில் அதனை இட்டு நிரப்புவார்கள் என்று கேள்விபட்டிருப்பீர்களே. எனக்கு விளையாட்டுகளில் பள்ளிக் காலத்தில் ஈடுபாடு வரவில்லை. அதனால் சமயம், மொழி என்று ஈடுபாடு சென்றது. அதில் நான் தனித்தன்மை உடையவனாகக் 'காட்டி'க் கொள்ள முடிந்ததால் அதில் ஆர்வம் இன்னும் கூடியது. ஆசிரியர்களும் நன்றாகத் தூண்டிவிட்டார்கள். :-)

இப்போது கூட நீங்கள் யாரும் படிக்கவில்லை என்றால் நான் எழுத மாட்டேன். எல்லாம் வெளி வேடம் தான். பெயருக்கும் புகழுக்கும் தான் எல்லாம். :-)

4. செந்தமிழ், செங்கிருதம் போல் செந்தரப்பட்ட சௌராஷ்ட்ரம் இல்லை இராகவ். அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் 'இதெல்லாம் எதற்கு? மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே' என்ற எண்ணம் சௌராஷ்ட்ரர்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. அதனால் யாரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

வட்டார வழக்கு சௌராஷ்ட்ரத்தில் இருப்பது இயற்கை தானே. ஊர் மாற்றி ஊர் திருமணம் செய்து கொடுப்பதே இப்போது தான் கொஞ்சம் தொடங்கியிருக்கிறது. சென்ற தலைமுறை வரை அது மிக மிக அரிதாகவே நடந்தது. வெளியூரில் பெண் எடுத்தாலோ கொடுத்தாலோ கேவலமாக எண்ணப்பட்டது. அப்படி கொடுக்கல் வாங்கல் தொடர்பு கூட இல்லாத போது தனித்தனியான பேச்சு வழக்கு ஏற்படுவது இயற்கை தானே. இதனைப் பற்றி எழுதத் தொடங்கினால் நிறைய எழுத வேண்டும். இன்னொரு தருணத்தில் அதனைப் பார்க்கலாம். :-)

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி!

எத்தனை எத்தனை நாடகங்கள்! இறைவனிடமே! அத்தனை நாடகங்களையும் தொடர்ந்து நாம் நடத்த அவனும் நடித்துக் கொண்டிருக்கிறான். அருளாளர்கள் இருவர் சொல்வதைப் பாருங்கள்.


கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே

- திருநாவுக்கரசர்.

நான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தைக் வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து / உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன்


உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

- தொண்டரடிப்பொடியாழ்வார்.

உள்ளத்தே உறையும் திருமாலை நினைக்கும் நினைப்பு சிறிதும் இல்லாத பொய்யனான நான் தொண்டு செய்கிறேன் என்று பொய்க்கோலம் பூண்டேன். நினைப்பவர் நினைப்பவை எல்லாம் உடன் இருந்து நீ அறிவாய் என்று வெட்கட்ப்பட்டு என்னுள்ளே நான் விலா அறும் படி சிரித்திட்டேனே.