Saturday, May 31, 2008

காதல் பண்ண திமிரு இருக்கா?

காதல்ன்னாலே அதுல களவு, கற்புன்னு ரெண்டு வகையைச் சொல்லுது பழந்தமிழ் இலக்கியம். இந்தக் காலத்துலயும் பாட்டுல பாருங்க 'கள்ளத்தனமா காதலை பண்ணு; ஊரறியக் கல்யாணம் பண்ணு'ன்னு அதையே சொல்றாங்க. ஆக அந்தக் காலத்துல இருந்து நம்ம பண்பாட்டுல அவ்வளவா மாற்றம் வரலை. இல்லீங்களா?

கடைசிப் பத்தியில நல்ல ஒரு அறிவுரையா சொல்றாங்க பாருங்க இந்த ஆத்தா. நம்ம பசங்க எல்லாம் இதைப் பயன்படுத்திக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும். எல்லாரோட ஆசிர்வாதத்தோட காதல் கல்யாணமும் வெற்றிகரமா நடக்கும்.

***



ஊரை விட்டு உறவை விட்டு சாதி விட்டு சாமி விட்டு
எல்லை விட்டுத் தொல்லை விட்டு மானம் விட்டு ஈனம் விட்டு
மனசை மட்டும் பார்க்குமடா காதல் - நல்ல
மனசை மட்டும் பார்க்குமடா காதல்


என்னத்தைச் சொல்ல வர்ற?

ஏய் அப்பூ எடுத்து விடு

ஆங்...
காதல் பண்ணத் திமிரு இருக்கா
கையைப் பிடிக்கத் தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தா
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தா
கள்ளத்தனமா காதலை பண்ணு
ஊரறிய கல்யாணம் பண்ணு

ஏய் (காதல் ...)

பேரா பேரா செல்லப் பேரா
ஜோரா ஜோரா லவ்வு பண்ணு பேரா


பொண்ணுங்களை நம்புறது தப்பு
கவுந்துப்புட்டா ஊரெல்லாம் கப்பு
காதலொரு வாலிப மப்பு
கிறங்கிப்புட்டா ஒண்ணுமில்லை தப்பு
நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு
இல்லைனாக்கா எக்கச்சக்க அப்பு

ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
காதல்ன்னா என்ன பண்ணும் ஆத்தா

ஒழுக்கத்துல இராமனா இருங்க
சீதைங்களைத் தேடித் தான் புடிங்க
தேவதாஸை மறங்கடா முதல்ல
மன்மதனை நெனைங்கடா அதில
கெட்டியான காதலை உடைக்க
கொம்பனாலும் முடியாது இங்க

பேரா பேரா
என்ன கிழவி
செல்லப் பேரா
சொல்லு சொல்லு
ஜோரா ஜோரா லவ்வு பண்ணு பேரா

என்னைப் புடிச்ச பொண்ணை நான் பாத்தேன்
என் மனசை அவகிட்ட கொடுத்தேன்
அவ அப்பன் கோபக்காரன்
அண்ணன் கூட அவசரக்காரன்
எப்படி நான் சரிக்கட்டப் போறேன்
எப்ப நானும் ஜோடி சேரப்போறேன்

ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
என் காதலுக்கு வழி என்ன ஆத்தா

சந்தையில அப்பனோட பாத்தா
வேட்டியை நீ இறக்கியும் விடுடா
கோவிலில ஆத்தாவோட பாத்தா
பட்டுன்னுதான் காலுல விழுடா
பஸ்ஸுக்குள்ள பாட்டியோட பாத்தா
எடம் கொடுத்து டிக்கெட்டையும் எடுடா

பேரா பேரா செல்லப் பேரா
அவ அண்ணன்கிட்ட எடு நல்ல பேரா

(காதல்)

திரைப்படம்: கோவில்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பரவை முனியம்மா, வடிவேலு, சிம்பு

Friday, May 30, 2008

முக்கியம், பிரபலம்

பிரபல மருத்துவர் சென்னை விஜயம் என்று நக்கீரன், துக்ளக் அட்டைப் படங்களில் பார்த்திருப்போம். 7 தலைமுறைகளாக வைத்தியம் செய்துவருவதாக சொல்லி, ஆண்மை குறைபாட்டு சிகிச்சைக்கு உடனடி தீர்வுக்கு நாட விரும்புபவர்கள் நாடலாம் என்று ஒரு பக்கத்திற்கு விளம்பர தகவல் இருக்கும். பிரபல நடிகர் வரி ஏய்ப்பு, பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். நகரில் முக்கிய சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது என்ற அறிவுப்பு இது போல 'நன்கு அறியப்பட்ட' இரண்டு சொற்களைப் பார்ப்போம்.

செல்வாக்குடையவர், கைராசிக்காரர், சிறப்புடையவர், நன்கு அறியப்பட்டவர், நன்கு அறிமுகமானவர்கள் என்ற பொருள் இருக்கும் இடங்களில் எல்லாம் பிரபலம் என்று எழுதிவருகிறோம். அதற்கு பதிலாக எல்லோருக்கும் தெரிந்த அரசியல் வாதி என்ற இடத்தில் பிரபல அரசியல்வாதி என்று சொல்லாமல் செல்வாக்குள்ள அரசியல்வாதி அல்லது அரசியல் செல்வாக்குடையவர் என்று சொல்லலாம். பிரபல மருத்துவர் என்று சொல்வதற்கு பதில் நன்கு அறியப்பட்ட மருத்துவர் அல்லது அனைவரும் அறிந்த அல்லது புகழ்பெற்ற மருத்துவர் அல்லது பெயர்பெற்ற மருத்துவர் என்று சொல்லாம். பிரபல நடிகர் என்பதற்குப் பதில் புகழ்பெற்ற நடிகர் என்று சொல்லலாம். பிரபல கொள்ளைக்காரன் பிடிபட்டான் என்பதற்கு பதில் அனைவராலும் தேடப்படும் கொள்ளைக்காரான், நன்கு அறியப்பட்ட (கொள்ளைக்காரனெல்லாம் பிரபலப்படுத்த வேண்டாம்) கொள்ளைக்காரன், சமூக எதிரி பிடிபட்டான் என்று எழுதலாம். பிரபல கிரிக்கெட் வீரர் என்பதற்கு பதில் முன்னனி கிரிக்கெட் விரர் என்று சொல்லலாம்.

முக்கிய என்ற சொல்லுக்கு முதன்மையான, இன்றியமையாத என்ற சொல்லை இடத்துக்கு ஏற்றார்போல் பயன்படுத்தலாம். முக்கிய சாலைகளில் என்பதற்கு பதில் முதன்மைச் சாலைகளில் என்று சொல்லலாம். முக்கியஸ்தர், முக்கிய விருந்தினர், முக்கியமானவர் என்பதற்கு பதில் சிறப்புடையோர், சிறப்புவிருந்தினர், இன்றியமையதவர் என்ற வழக்கில் வருவது தனித்தமிழுக்கு மேலும் மெருக்கூட்டும்.

தனித்தமிழுக்கு தனிச்சிறப்புச் (மிக முக்கியமாக) சேர்க்க நாம் இன்றியமையாது என்பது போல் பயன்படுத்தும், 'பிரபலமடைந்த, முக்கியமான' மேற்கண்ட இரு சொற்களை முறையே நன்கு அறிந்த, முதன்மையான என்ற பொருளில் பயன்படுத்தலாம். எல்லா இடத்திலும் பிரபலம் என்று எளிதாக சொல்வதைவிட இடத்துக்கு ஏற்றார் போல் தமிழ் செற்களைப் பயன்படுத்துவது பொருள் நிறைந்ததாக இருக்கும். விஜயம் என்பது வருகை என்று நன்கு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

இது பற்றி உங்களின் முதன்மையான கருத்துக்கள் என்ன, வேறு பொருத்தமான தமிழ் சொற்கள் இருந்தால் பரிந்துரையுங்கள்.

ஜிரா கோரா இராகவன் அளிக்கும் - கவுண்டமணி செந்தில் நடிக்கும் 'உடுக்கை'

பட்டிக்காட்டு பெஞ்சுக்கடையில் உக்காந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. அந்த வழியாக கையில் உடுக்கையோடு செந்தில் வருகிறார்.

"டேய்! கரியடுப்புத் தலையா! இங்க வாடா. உச்சி வெயில்ல எங்கடா போயிட்டு வார?"

"அது வந்துண்ணே.....ஜிரா இருக்கார்ல ஜிரா..."

"என்னது ஜிரா இருக்காரா? ஜிரா இருக்குன்னு சொல்லுடா இலக்கோண வாயா. ஜிராங்குறது திரவப் பொருள். அதுல குலாப்ஜான் ஜலஜலஜலஜலன்னு மெதக்கும். (கையால் உருட்டிக் காட்டுகிறார்) பாத்ததில்லையா? நீ எங்க பாத்துருக்கப் போற? அதெல்லாம் என்னப் போல வெவரமான அழகான அம்சமான இளமையான (செந்தில் கெக்கெக்கென சிரிக்கிறார்) ஆட்கள் சாப்புடுறது"

"ஹெ ஹெ ஹெ அண்ணே...அது குலோப்ஜான் இல்லண்ணே...குலோப்ஜாமூன். ஐயோ...ஜானுக்கும் ஜாமூனுக்குமே ஒங்களுக்கு வித்தியாசம் தெரியலையே...இதுல ஒங்களுக்குக் கலியாணம் வேற ஆகி...ஹெ ஹெ ஹே"

கடுப்பாகிறார் கவுண்டமணி. பெஞ்சை விட்டு படக்கென எழுந்து, 'அடேய். அடடேய்..அடடடடேய்! வந்துட்டான் ஜானுக்கும் மொழத்துக்கும் வித்தியாசம் சொல்ல. திருக்குறள நூறு வாட்டி திருப்பி எழுதுனவன் மாதிரி. எங்கடா போனேன்னு கேட்டா...."

"கோவிச்சிக்கிறாதீங்கண்ணே. ஜிராதான் கூப்புட்டு உடுக்கைன்னா என்னன்னு சொல்லிக் குடுத்தாருண்ணே."

"அதான் உடுக்கையோட குடுக்கை மாதிரி போனியாக்கும்?" அமைதியாகி உட்கார்ந்து சாப்பிடத் தொடங்குகிறார். "(சத்தமாக)ஆமாமாமா...அதென்ன உடுக்கையப் பத்திப் பாடம்? கோடாங்கி கிட்ட கேட்டா நாலு தட்டு தட்டப் போறான். இதுக்குப் போய் ஜிராகிட்ட எதுக்குக் கேட்ட? அந்த ஜிரா என்ன தாளிச்ச மோரா?"

செந்தில் குனிந்து கவுண்டமணி காதில் மெதுவாகச் சொல்கிறார். "அண்ணே....அவரு கூட ஒரு மயிலார் இருக்காரு. அவரு காதுல விழாமப் பேசுங்க. கொத்தீரப் போறாரு. அப்புறம் நீங்க குத்தம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பதேது எம்.ஆர்.ராதா மாதிரி ஆயிருவீங்க." (செந்திலின் கனவில் கவுண்டமணி ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி வந்து பாடுகிறார்.)

"டேய்..ஒம் மண்டைக்குள்ள இருக்குற அந்த டீவிய ஆப் பண்ணு. இல்லைன்னா ஆண்டெனாவைப் பிடுங்கிப் போட்டுருவேன். மகனே! நீ எப்பப்ப எங்கெங்க எப்படியெப்படி நெனச்சாலும் சிக்னலு எங்களுக்கு வந்துருதுப்பு."

செந்தில் முகத்தை அப்பாவி மாதிரி வைத்துக் கொள்கிறார். கவுண்டமணி, "சரி சரி....தோச வாயா...ரொம்ப நாடகம் போடாத. ராம நாராயணன் படத்துல நடிக்கக் கூட்டுறப் போறாங்க. போகட்டும்...அந்த உடுக்கையைப் பத்திச் சொல்லு. (கடைக்குள் பார்த்து கத்துகிறார்) யாருப்பா இது....சாம்பார் எங்கப்பா....இதுவரைக்கும் அஞ்சே அஞ்சு வாட்டிதான் சாம்பர ஊத்தீருக்க. சாம்பார்ல கேரட்டே இல்லை. கத்திரிக்காயா வந்து விழுது என்ன கடையோ....இங்க மனுசன் திம்பானா?"

"அண்ணே...உடுக்கைன்னா தட்டுற உடுக்கை மட்டுமில்லையாம். போட்டுக்குற துணிக்கும் உடுக்கைன்னுதான் பேரு."

ஆச்சரியப் பட்டு வாயைப் பிளக்கிறார் கவுண்டர். "என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது. உடுக்கைன்னா போட்டுக்குற துணியா? எம்.ஜி.ஆர் படத்துல ஜோதிலட்சுமி ஒடம்பு முழுக்க உடுக்கையக் கட்டிக்கிட்டு ஆடுறாங்களே...அதச் சொல்றாங்களா?"

முகத்தைச் சுளித்து தலையில் அடித்துக் கொள்கிறார் செந்தில். "ஐயோ அண்ணே..இப்பிடி கிட்னி இல்லாம இருக்கீங்களே...."

"அதென்ன கிட்னியோப்பா...நான் என்னத்தக் கண்டேன். இட்டிலிக்குத் தொட்டுக்கிட கெட்டிச் சட்டினி கூட இந்தக் கடையில குடுக்குறதில்லையே...."

"சரி...முழுக்கக் கேளுங்க. வள்ளுவரு என்ன சொல்லீருக்காரு?"

"அவரு எங்கிட்ட ஒன்னும் சொல்லையே ராசா! ஒங்கிட்ட என்ன சொன்னாரு?"

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு"

"என்னது கடுக்கண் களையனுமா? டேய்! இந்தக் கடுக்கண் எங்க தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தா மைசூர் மகாராஜாகிட்ட வாங்குனது. இதுக்கு முன்னாடி இது சந்திரமுகி படத்துல வர்ர வேட்டைராஜா கிட்ட இருந்தது. அதுக்கு முன்னாடி அவரு வெச்சிருந்த சந்திரமுகி கிட்ட இருந்தது. இப்ப்ப்ப்ப்ப்ப்ப...எங்கிட்ட இருக்கு"

செந்தில் முகமெல்லாம் பிரகாசமாக எதையோ கேட்கப் போகிறார். கவுண்டர் அதைத் தடுத்து, "நீ என்ன கேக்கப் போறன்னு தெரியும். எலய எடுத்து விசிர்ரதுக்கு முன்னாடி வள்ளுவர் என்ன சொன்னார்னு சொல்லீட்டு..அப்படியே திரும்பிப் பாக்காம ஓடிப் போ!"

"உடுக்கைன்னா ட்டிரஸ்சு. அந்த ட்டிரஸ்சு அவுந்துச்சுன்னா கை எப்பிடி தானாப் பிடிக்குதோ...அதுமாதிரி துன்பம் வர்ரப்ப நண்பர்கள் உதவுவாங்கன்னு வள்ளுவர் சொல்லீருக்காருண்ணே!"

சலித்துக் கொள்கிறார் கவுண்டர். "என்ன நண்பர்களோடா! ஒரு ஆயிரம் ரூவா திருப்பித் தரலைன்னு தெருவுல நின்னு கத்துற நாயெல்லாம் நண்பனா? கொஞ்ச நாள் பொறுத்தா திருப்பிக் குடுக்க மாட்டேனா? பத்து வருசம் பொறுத்தவனுக்கு இன்னங் கொஞ்சம் பொறுக்க என்ன கேடு வந்தது. நண்பனாம் நண்பன்." முறுக்கிக் கொண்டு மூஞ்சியை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

"டென்சன் ஆகாதீங்கண்ணே. டென்சன் ரொம்ப வந்தா பிரசர் வரும். பிரசர் வந்தா தலைவலி வரும். ரெண்டும் சேந்து வந்தா மாரடைப்பு வரும்...மாரடைப்பு வந்தா...."

"டேய் டேய் டேய் நிறுத்துடா.....இதெல்லாம் தானா வரலைன்னாலும் நீ போய் கூட்டீட்டு வந்துரவ போல. ரொம்பப் பேசாத கண்ணா....உடுக்கைக்கு வாடா" சோற்றையும் சாம்பாரையும் பிசைகிறார்.

"உடுத்தப் படுவது உடுக்கையாம். இதத்தான் குறுந்தொகைல சொல்லீருக்காங்களாம். முருகன் போட்டுருக்குற ட்டிரஸ்சு ஜொஜ்ஜொஜ்ஜொஜ்ஜொஜ்ஜொன்னு இருந்துச்சாம். அதச் சொல்ல திகழ் ஒளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைன்னு எழுதீருக்காங்கண்ணே."

யோசிக்கிறார் கவுண்டமணி. "பனம்பழத் தலையா...முருகன் என்னைக்கு ஜொஜ்ஜொஜோ ஜொஜ்ஜொஜோன்னு டிரஸ் போட்டிருந்தான்? அவங்கிட்ட இருக்குறது ரெண்டு கோமணம். அதுல ஒன்னு திருடு போயிருச்சு. (மனசுக்குள்...நம்மதான் எடுத்தம்னு யார் கிட்டயும் சொல்லக் கூடாது.) இப்பக் கூட நாந்தான் அவனுக்கு பத்து ரூவா குடுத்து வேட்டி சட்டை வாங்கச் சொன்னேன்."

தலையிலடித்துக் கொள்கிறார் செந்தில். "ஐயோ ஐயோ...இப்பிடி சுப்பிடிட்டியா இருக்கீங்களேன்னே. நீங்க சொல்ற முருகன்....நம்மூரு முருகன். நாஞ் சொல்ற முருகன்...சாமி முருகன். இப்படி ஏதாவது நீங்க ஓளறி வெச்சு சாமி குத்தமாயி கைகாலுக்கு ஏதாவது....."

கவுண்டமணி பம்முகிறார். "ஏண்டா...ஒனக்கு நான் என்னடா செஞ்சேன்? இப்பிடி எதையாவது சொல்லிப் பயமுறுத்தாதடா! அஞ்சு காசுக்குத் தேன்மிட்டாய் வாங்கித்தாரேன்." முகத்தில் பொய்யாக சிரிப்பை வைத்துக் கொண்டு..."நீ மேல ஸொல்லு"

"உடுக்கப் பயன்படுவது எப்படி உடுக்கையோ..அதே மாதிரி படுக்கப் பயன்படுவது படுக்கை."

"எல்லாம் வக்கனையாத்தான் கேட்டுக்கிட்டு வந்திருக்க. அது சரி....இந்தச் சோத்துக்கு ஏண்டா பருக்கைன்னு பேரு வந்தது?"

சிரிக்கிறார் செந்தில். விழுந்து விழுந்து சிரிக்கிறார். "நிறுத்துடா...டேய்...நிறுத்துடா...என்ன கேட்டுட்டேன்னு இப்பிடி விழுந்து விழுந்து சிரிக்கிற?"

"அது ஒன்னுமில்ல....சரி. நீங்களே கேட்டுட்டீங்க. உடுக்கப் பயன்படுவது உடுக்கை. படுக்கப் பயன்படுவது படுக்கை....அது மாதிரி...நீங்க இப்பிடி பருக்கப் பயன்படுவது பருக்கை. எப்படிண்ணே நம்ம தமிழறிவு?" சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு ஓடுகிறார் செந்தில்.

கோவத்தில் கவுண்டமணி எழுந்திருக்கிறார். பெஞ்சுகள் கீழே விழுகின்றன. "பிடிங்கடா அந்த டைனோசார? அடிச்சா ஒரு நாடே ஒரு வருசத்துக்கு உப்புக் கண்டம் போட்டுச் சாப்புடலாம். உடுக்கையாம் உடுக்கை. இனிமே எவனாவது உடுக்கைன்னு சொன்னா...அவனுக்கு உடுக்கையடிதான். ஒழுங்கா அழகா நிறுத்தி நிதானமா எழுத்துக் கூட்டி தமிழ்ல டிரஸ்சுன்னு சொல்லனும்."

(என்னடா சொல் ஒரு சொல் இப்படி இருக்கேன்னு பாக்குறீங்களா? இப்படி எழுதுனா சரியா வருமான்னு முயற்சி செஞ்சி பாத்தேன். பதினைஞ்சு நிமிசத்துல பதிவு தயார். அதுகாக இப்படியே தொடர மாட்டேன். இது ஒரு பரிசோதனைதான்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, May 29, 2008

உடுக்கை இழந்தவன் கதை - தற்காலிக தாமதம்

தொடர்ந்து வாராவாரம் எழுதி வந்த தொடர் கதையான 'உடுக்கை இழந்தவன் கை'யின் அடுத்த பகுதியை சில காரணங்களால் ஒரு மாதமாக எழுத முடியவில்லை. விரைவில் நேரம் ஏற்படுத்திக் கொண்டு எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Wednesday, May 28, 2008

கொடையா தானமா?

சொல் ஒரு சொல்லிற்காக நம் கோவி.கண்ணன் அண்ணா எழுதி அனுப்பிய இந்தக் கட்டுரை சிற்சில மாற்றங்களுடன்...

***

மழை கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம் என்ற அருமையான கவியரசர் பாடல் கர்ணன் படத்தில் இடம்பெற்றது. நாம் வடமொழியை உள்வாங்கி தமிழின் கையிருப்பைத் தானம் செய்த பலவற்றில் ஒன்று தமிழில் இருக்கும் 'கொடை' என்ற சொல். கடையேழு வள்ளல்களைச் சிறப்பிக்கும் போது மறக்காமல் கொடை வள்ளல்கள் என்கிறோம். கோவில்களில் ஒரு குழல் விளக்கைக் கொடையாகக் கொடுத்து மறக்காமல் தன் பெயரை கொட்டை எழுத்தில் எழுதி வைப்பவரையும் கொடை வள்ளல் என்கிறோம்.

எங்கள் ஊரில் ஆடிமாதம் மாரி ஆத்தாவுக்கு கஞ்சி காய்சி ஊற்ற தண்டோரா போட்டுச் சொல்லிச் செல்வார்கள். மறுநாள் நன்'கொடை' கேட்டு விழா அமைப்பாளர்கள் வந்து பெருள் வாங்கிச் (வசூல் வேட்டைக்கு) செல்வார்கள். பொருட்கள் பணமாகவோ, படிக்கணக்கில் பச்சை அரிசி, பச்சை பயிறு, தேங்காய் போன்றைவைகளாகவோ கொடுக்கப்படும். விழாவில் நன்பகலில் கோவிலுக்கு அருகில் விறகு அடுப்பு மூட்டப் பட்டு பெரிய பானையில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். அந்த பச்சரிசிக் கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும். கூடவே முருங்கைக் கீரை துவட்டல், மாவிளக்கு மாவு ஆகியவை கிடைக்கும். மாலை அலங்காரக் காவடி அம்மன் கோவிலுக்குச் செல்வதுடன் விழா முடியும்.

ஈகை, கொடை, தானம் எல்லாம் தமிழர் மற்றும் இந்தியர்களின் பண்பு நலன்கள். விபத்து கால அவசரத்திற்கு என்ன என்ன தேவைப்படுகிறது ? இரத்தம் தானே. அதனை இரத்ததானம் என்கிறோம். குருதி என்றால் இரத்தம் என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் அதிகமாக இரத்தம் என்றே சொல்கிறோம்.

இரத்த தானம் என்பதை அழகாக குருதிக் கொடை என்று சொல்லலாம். கண் தானம் என்பதை கண் கொடை என்று சொல்லலாம். இதுவே வடமொழியில் நேத்ர தானம் என்கிறார்கள். உடல் உறுப்புகள் தானங்களை உறுப்புக் கொடை என்று சொல்ல முடியும் அந்த வகையில் சிறுநீரகக் கொடை, கல்லீரல் கொடை என்று சொல்லலாம்.

ஈதல், ஈகை, கொடை என்று திருவள்ளுவர் கொடைகளுக்கு குடை பிடித்து நிழல் கொடுத்திருக்கிறார் நாம் நிழலை விட்டு ஒதுங்கியே காய்கிறோம். தமிழ் மழையில் நினையும் போது தானத்தை தானம் செய்துவிட்டு கொடை வைத்துக் கொள்வோமா? எளிதான சொல்தானே !

Sunday, May 25, 2008

அசைகலையும் வரைகலையும்

அசைகலை என்பதும் வரைகலை என்பதும் அண்மையில் நான் படித்த புதிய கலைச்சொற்கள். இவை எந்த ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற சொற்கள் என்று தெரிகிறதா?

விக்சனரி (tamil_wiktionary@googlegroups.com) என்றொரு கூகுள் குழுமத்தை அறிமுகப்படுத்தி அண்மையில் பதிவர் இரவிசங்கர் ஒரு பதிவு இட்டிருந்தார். அதனைப் படித்து விட்டு அந்தக் குழுமத்தில் இணைந்தேன். பல புதிய சொற்களை அங்கே அறிமுகப்படுத்துகிறார்கள். புதிய கலைச்சொற்களைக் கற்கும் ஆர்வமுள்ளவர்கள் அந்தக் குழுமத்தில் இணையுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அந்தக் குழுமத்தில் அன்பர் மணிமாறன் அவர்கள் அனுப்பிய சொற்கள் தான் இவை. Graphics என்பதை வரைகலை என்றும் Animation என்பதை அசைகலை என்றும் மொழிபெயர்த்துத் தந்திருந்தார். வேறு ஏதேனும் சொற்கள் இவற்றிற்காக பரிந்துரை செய்யலாமா? அப்படி எண்ணினால் சொல்லுங்கள். இல்லை இவை நல்ல சொற்கள் என்றால் இனிமேல் நாம் புழங்கத் தொடங்கலாம்.

Saturday, May 24, 2008

முத்தம் முத்தம் முத்தமா...

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக்கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

ஒற்றை முத்தத்தில் ஒற்றை முத்தத்தில் நீ
உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போல் நான்
இடைவெளியில்லாமல்
அள்ளித் தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்?

இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய்
என் எலும்பெல்லாம் தூளாய் போகும் (முத்தம்)




மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு?
இருதயம் மேலே மூளை கீழே பௌதிக மாற்றம் எனக்கு
சிந்திய முத்தம் அது சைவம் தான்டா இனி
அசைவ முத்தம் இங்கு ஆரம்பம் தான்டா

அடி உலகின் பசி எல்லாம் முழுவுருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மூர்க்கம் அதில் செத்தாலும் செத்துப் போவேன் (முத்தம்)

கொட்டும் அருவியில் வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும் கொஞ்சம் வோல்டேஜ் இருக்கு
மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம் இந்தப்
பெண்சாரத்தால் தினம் பலமுறை மரணம்

ஒரு முத்தம் அது மரணம் மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விலகாமல் சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா (முத்தம்)



திரைப்படம்: 12 B
வெளிவந்த வருடம்: 2001
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

Wednesday, May 21, 2008

ஸுத்த ப்ரஹ்ம பராத்பர ராமா

பத்ராசல இராமதாசரின் சரிதத்தைத் தெலுங்கில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். (எப்போது எடுத்தார்கள் என்று தெரியாது). அண்மையில் அந்தத் திரைப்படத்திலிருந்து பாடல்களைக் கேட்கவும் பார்க்கவும் கிடைத்தது. அதில் ஒன்று கீழே இருக்கிறது. மற்றவற்றை யூட்யூபில் பாருங்கள்/கேளுங்கள்.



ஸுத்த ப்ரஹ்ம பராத்பர ராமா
காலாத்மக பரமேஸ்வர ராமா
சேஷதல்ப சுக நித்ரித ராமா
ப்ரஹ்மாத்யமர ப்ரார்த்தித ராமா

ராம ராம ஜெய ராஜா ராமா
ராம ராம ஜெய ஸீதா ராமா

ப்ரிய குஹ விநிவேதித பத ராமா
சபரீ தத்த பலாஸ்ரய ராமா
ஹனுமத் ஸேவித நிஜபத ராமா
ஸீதா ப்ராணாதாரக ராமா

ராம ராம ஜெய ராஜா ராமா
ராம ராம ஜெய ஸீதா ராமா

முக்குணங்களைக் கடந்த சுத்த பிரம்மமயமான பெரிதிலும் பெரிதான இராமனே!
காலத்தின் உருவாக இருக்கும் பெருந்தலைவனே இராமனே!
பாம்பணையில் பள்ளி கொண்டவனே இராமனே!
பிரம்மன் முதலான தேவர்களால் வணங்கப்படும் இராமனே!

அன்புடைய குகனால் வணங்கப்பட்ட இராமனே!
அன்புடன் சபரியால் கொடுக்கப்பட்ட பழங்களை ஏற்றவனே இராமனே!
அனுமனால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவனே இராமனே!
சீதையின் உயிருக்கு ஆதாரமே இராமனே!

ஒரு உணர்ச்சிகரமான உரையாடல் - ஒரு பழைய திரைப்படத்தில்...

இன்று காலை வேறு எதையோ தேடிக் கொண்டிருந்த போது இது அகப்பட்டது. மூன்று பேர் பேசுகிறார்கள் இந்த ஒளிஒலித்துணுக்கில். 'அந்த நாள்' திரைப்படத்தில் வந்த காட்சி என்று நினைக்கிறேன். மூவர் பேச்சும் மிக உணர்ச்சிகரமாக இருக்கிறது. நல்ல நல்ல கருத்துகள் இருக்கின்றன. கடைசியில் வரும் 'வளையலை அணி' என்ற குத்தலைத் தவிர.



நன்றி: rectian, Youtube.

இந்தப் படத்துணுக்கைப் பார்த்த போது பல முறை பதிவுலகில் நடக்கும் விவாதங்களில் எனக்கு ஏற்படும் உணர்ச்சியே உண்டானது. இந்தப் பக்கம் உள்ள கருத்துகளைப் படிக்கும் போது இவர்கள் சொல்வது சரி போலும் அந்தப் பக்கம் உள்ள கருத்துகளைப் படிக்கும் போது அவர்கள் சொல்வது சரி போலும் மாறி மாறித் தோன்றுமே; கடைசியில் நமக்கென்று தனியாக ஒரு கருத்து இருக்கிறதா என்ற ஐயம் எழுமே; அந்த உணர்வைச் சொல்கிறேன். :)

போதுதல்

திருப்பாவை திருவெம்பாவை மாதமான இந்த மார்கழியில் 'சொல் ஒரு சொல்' பதிவில் இந்தச் சொல் வருவது மிகப் பொருத்தமானது தான்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் (பாசுரம் 1)

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரா போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய் (பாசுரம் 15)

இந்தத் திருப்பாவைப் பாசுரங்களுக்கு இங்கே பொருள் சொல்லப் போவதில்லை. பாசுரப் பொருள் தேவையென்றால் தேசிகன், இராகவன் பதிவுகளைப் பாருங்கள். இல்லை இனிமேல் கோதை தமிழில் அவை வரும்போது பாருங்கள். இப்போது எடுத்துக் கொண்ட சொல்லான 'போதுதல்' & அதன் மற்ற உருவங்களை மட்டுமே இங்கே பார்க்கப் போகிறோம்.

போதுதல் என்றவுடன் என்ன பொருள் தோன்றுகிறது? போ என்ற வினைச்சொல்லின் அடிப்படையான போதல் என்ற பொருள் தானே தோன்றுகிறது? எனக்கும் முதன்முதலில் இந்தச் சொல்லைப் பார்த்ததும் அப்படித் தான் தோன்றியது. அண்மையிலும் ஏதோ ஒரு பெரிய கவிஞர் இந்தச் சொல்லை போதல் என்ற பொருளிலேயே எடுத்தாண்டிருப்பதையும் பார்த்தேன். ஆனால் இந்தத் திருப்பாவைப் பாசுரங்களுக்குப் பொருள் சொல்லும் போது போதல் என்பதற்கு நேர் எதிரான பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் பாசுரத்தில் வரும் சொற்களான 'நீராடப் போதுவீர்' 'போதுமினோ' என்ற சொற்களுக்கு 'நீராட வாருங்கள்', 'வாருங்களே' என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

பதினைந்தாம் பாசுரத்தில் வரும் சொற்களான 'போதருகின்றேன்', 'போதாய்', 'போந்தாரா', 'போந்தார்', 'போந்து எண்ணிக் கொள்', என்ற சொற்களுக்கு 'வருகின்றேன்', 'வருவாய்', 'வந்தாரா', 'வந்தார்', 'வந்து எண்ணிக்கொள்' என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சொல்லாட்சியை வேறு எந்த இலக்கியத்திலாவது பார்த்திருக்கிறீர்களா? எதன் அடிப்படையில் இந்தச் சொல்லுக்கு இந்த பொருள்?

Tuesday, May 20, 2008

தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு....

தத்தியாடுதே தாவியாடுதே ஒரு தட்டார பூச்சி இன்று

சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் ...

தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டார பூச்சி இன்று

தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இன்று

இடஒதுக்கீடு உனக்காக இடை செய்தது
எந்தன் ஆடை நீயல்லவோ
இடஒதுக்கீடு எனக்காக இடைசெய்வது அந்த ராத்திரிப் பொழுதல்லவா
உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலை போல இறங்காதது... (சில்ல்..)




புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் வழங்கவா
சொல் சொல் நீ சொல் அன்பே

விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே

பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி ராசாங்கமா
என் ஆசைகள் எப்போது கைகூடும் யார் சொல்ல
காவேரி நீராகுமா (சில்ல்..)

Monday, May 19, 2008

திராவிட வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்!!!



நேற்று மகளுடன் பேசிக் கொண்டிருந்த போது 'நாளை முருகன் பிறந்த நாள். கொண்டாடலாமா?' என்றேன். உடனே அவள் 'முருகனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?' என்று கேட்டாள். 'நீயே சொல்' என்றேன். இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். இன்று காலை எழுந்த பிறகு சொல்வாள் என்று நினைக்கிறேன்.

இன்று பிறந்த நாள் காணும் முருகப்பெருமானைப் போற்றி ஒரு இடுகை முருகனருளிலும் தமிழ் வேதமாம் திருவாய்மொழி தந்த மாறன் சடகோபன் நம்மாழ்வாரைப் போற்றி ஒரு இடுகை கண்ணன் பாட்டிலும் எழுதலாம் என்று நேற்றிரவே அமர்ந்தேன். ஆனால் ஒருத்திக்குக் கதை சொல்வதும் ஒருவனுக்குத் தாலாட்டு பாடுவதும் என்ற இனிய கடமைகள் அப்படி செய்ய விடாமல் செய்துவிட்டன. இன்று காலை எழுந்து பார்த்தால் நண்பர்கள் இராகவனும் இரவிசங்கரும் (முதலில் இரவிசங்கரும் இராகவனும் என்று தான் எழுதினேன். அப்புறம் சரி செய்துவிட்டேன். முருகனருள் என்றாலோ முருகனன்பு என்றாலோ முதலிடம் இராகவனுக்குத் தானே) போட்டி போட்டுக் கொண்டு முருகனருள் பதிவில் இடுகைகள் இட்டிருக்கிறார்கள். மதுரையம்பதி மௌலியும் முருகன் பிறந்தநாளுக்கு ஒரு இடுகை இட்டிருக்கிறார். சரி நாம் தான் இரண்டு நாட்களுக்கு முன்னரே கந்தனும் கண்ணனும் என்று ஒரு இடுகை இட்டாயிற்றே; நம்மாழ்வாரைப் போற்றி ஒரு சிறு இடுகை இடலாம் என்று தோன்றியது.

இன்று பார்த்து வேலைக்கு விரைவில் செல்லவேண்டும். அதனால் எண்ணியது போல் விரிவாக எழுதாமல் சுருக்கமாக ஒரு இடுகை. விரிவாக எழுதுவதைக் கண்ணன் பாட்டில் இனி மேல் இடுகிறேன். சுருக்கமாக இங்கே கூடலில்.



நன்றி: திரு. வாசுதேவன், யூட்யூப்.

பக்தாம்ருதம் விஸ்வஜநானுமோதனம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்


பக்தர்களுக்கு அமுதம் போன்றதும் பக்தர்களை இறைவனுக்கு அமுதமாக்குவதும், பயிலும் எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைத் தருவதும், வேண்டியவற்றை எல்லாம் தருவதும், மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக இருப்பதும், ஆயிரக்கணக்கான பகுதிகள் கொண்ட வேத உபநிடதங்களுக்கு நேரான ஆகமமானதும், தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே


ஓங்கி ஒலிக்கும் அருவிகள் நிறைந்த திருவேங்கடத்தில் நிலைத்து வாழும் அழகும் ஒளியும் உடைய சோதி உருவான என் தந்தை தந்தைக்கும் தந்தையான திருவேங்கடத்தானின் அருகிலேயே காலகாலமாக என்றைக்கும் நிலைத்து வாழ்ந்து எந்த வித குற்றங்களும் இல்லாத அடிமைத் திறத்தை நாங்கள் செய்ய வேண்டும்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே


நொடிப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டேன் என்று தாமரை மேல் வாழும் மங்கையாம் திருமகள் உறையும் திருமார்பினை உடையவனே! நிகரில்லாத புகழை உடையவனே! மூவுலகங்களையும் உடைமையாய் கொண்டவனே! என்னை என்றும் ஆள்பவனே! நிகரில்லாத அமரர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்பித் தொழும் திருவேங்கடத்தானே! வேறு கதி ஒன்றில்லாத அடியேன் உன் திருவடிகளின் கீழே தஞ்சமென்று புகுந்து அங்கேயே நிலைத்தேன்.

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லா பெருமானைப் பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்னவாயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே


தன்னுடைய திருவடிகளின் கீழ் தஞ்சமென்று புகுந்து நல்வாழ்க்கையை வாழுங்கள் என்று திருக்கைகளால் தன் திருவடிகளைக் காட்டி எல்லோருக்கும் திருவருள் செய்யும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமானை, பழமையும் பெருமையும் கொண்ட திருக்குருகூரில் வாழும் சடகோபன் தனது வினைப்பயன்களை முடிப்பதற்குச் சொன்ன ஓர் ஆயிரம் பாசுரங்களில் இந்தப் பத்துப் பாசுரங்களையும் சிக்கெனப் பிடித்தவர்கள் இறைவனின் பரமபதமாம் பெரிய வானுள் என்றென்றும் நிலைத்து வாழுவார்கள்.

***

திராவிட வேத சாகரத்தைப் போற்றும் சுலோகம் வைணவ ஆசாரிய பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியரான நாதமுனிகள் அருளிச் செய்தது (முதல் நால்வர் திருமால், திருமகள், சேனைமுதலியார், நம்மாழ்வார்). பாசுரங்கள் நம்மாழ்வார் திருவேங்கடத்தான் மேல் அருளிச் செய்த திருவாய்மொழிப்பாசுரங்கள்.

நம்மாழ்வாரின் திருக்கதையை இங்கே படிக்கலாம்.

Sunday, May 18, 2008

சால உறு தவ நனி கூர் கழி

என்ன தலைப்பைப் பார்த்தால் ஒன்றும் புரியவில்லையே என்று நினைக்கிறீர்களா? சாலச் சிறந்தது என்று சிலர் சொல்வார்கள் கேட்டிருக்கிறீர்களா? அது மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தக் காலத்திலும் மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் தலைப்பிலுள்ள ஆறு சொற்களும் சில சொற்களின் முன்னால் நின்று 'மிகுதி', 'பெருக்கம்' போன்ற பொருட்களைத் தந்து நிற்கும்.

1. இலக்கண நூலான நன்னூல் சொல்வது:

சால உறு தவ நனி கூர் கழி மிகல்

இந்த ஆறு சொற்களும் 'மிகல்' என்ற பொருளைத் தரும்.

2. பாரதியாரின் சுயசரிதையில் வருவது:

வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்து ஓர் ஆயிரம் ஆண்டு தவம் செய்து
பார்க்கினும் பெறல் சாலவரிது காண்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதைத் தான் இங்கே சொல்கிறார். மிக அரிது என்ற பொருளில் சாலவரிது என்கிறார்.

3. திருவாவடுதுறைப் பெருமானைப் பாடும் திருநாவுக்கரசப் பெருமான் சொல்வது:

உற்ற நோய் தீர்ப்பர் போலும்
உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும்
தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்தக்
கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும்
ஆவடு துறையினாரே.

இந்தப் பாடலில் 'நெருங்கிய துணை', 'மிகத் துணை' என்ற பொருளில் உறுதுணை வருகிறது.

4. தவப்பெரியோன் என்று மிகவும் பெரியவரைக் கூறுதல் மரபு.

5. நனி என்ற சொல்லை பல என்ற சொல்லிற்கு இணையாகப் புழங்க வேண்டும் என்று இராம.கி. ஐயா கருதுகிறார். அதற்கேற்ப நனி என்ற சொல் பல இடங்களிலும் நனிவகையில் (பலவகையில்) புழங்கியிருக்கிறது என்பதை கூகுளாண்டவர் சொல்கிறார். எல்லோரும் கேட்டிருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்ற பாரதியாரின் அழகு வரி. இங்கே மிகச் சிறந்தவை என்ற பொருளில் நனி சிறந்தனவே என்கிறார்.

6. கூர் என்பது மிகுதி என்ற பொருளிலும் கூர்மை என்ற பொருளிலும் பல இடங்களில் சேர்ந்தே வருகிறது. கூர்மதி, கூரொலி, கூரொளி, கூர்கடல், கூர்குழல், கூர்குழலி, கூர்கூந்தல், கூர்சுடர், கூர்சோலை, கூர்பொறை என்று எடுத்துக்காட்டுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

7. கழி என்ற சொல்லைத் தேடி எங்கேயும் அலையவேண்டாம். கழிநெடிலடி என்று பல பாவகைகளைக் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். கழி நெடில் அடி என்றது மிக நீண்ட அடிகளைக் கொண்ட பாவகைகளை.

பழமொழி நானூறில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு:

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார் முன்
சொல்லும் கால் சோர்வு படுததால் - நல்லாய்
'வினா முந்துறாத உரையில்லை; இல்லை
கனா முந்துறாத வினை'

நம் முதல் குடிம்கனார் சொல்வதைத் தான் இந்தப் பழமொழி சொல்கிறது. கனவு காணுங்கள்; கனவே செயலில் இறக்கும் என்பதைச் சொல்கிறது. அப்போது கல்வி இல்லாதவனின் மிகுதியான அறிவு கற்றவர் முன் நில்லாது என்றும் சொல்கிறார். ஏனென்றால் கல்வியில்லாதவன் கழிநுட்பம் கேள்வியில்லாமல் பிறந்த பதிலையும் கனவின்றிப் பிறந்தச் செயலையும் ஒத்தது என்பதால்.

Saturday, May 17, 2008

மைத்ரீம் பஜத

நீங்கள் திருமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடிய இந்த பாடலை கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடல் ஜகத்குரு காஞ்சி காமகோடி பீட சங்கராசாரியார் ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் இயற்றப்பட்டது. ஐக்கிய நாட்டுச் சபையின் 50ம் ஆண்டு (அப்படித் தான் நினைவு) நிறைவு விழாவில் பாட எம்.எஸ்ஸிற்கு அழைப்பு வந்தது. எம்.எஸ் இந்த அழைப்பைப் பற்றி ஆசாரியரிடம் சொன்ன போது ஆசாரியர் இந்த பாடலை எழுதிக் கொடுத்தார்.

இந்த பாடலை எழுதி ஏறக்குறைய 40 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் இந்த பாடலின் கருத்து நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வகையில் உள்ளது.




மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம் - பணிவுடனும் நட்புடனும் உலக மக்கள் எல்லோருக்கும் சேவை செய்யுங்கள். அது எல்லோர் இதயத்தையும் வெல்ல உதவும்.

ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத - பிறரையும் உங்களைப் போலவே எண்ணிப் பாருங்கள்.

யுத்தம் த்யஜத - போரினை விடுங்கள்.

ஸ்பர்தாம் த்யஜத - தேவையற்ற அதிகாரப் போட்டியினை விடுங்கள்.

த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமனம் - பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்ரமிக்கும் அக்கிரம செயலை விடுங்கள்.

ஜனனீ ப்ருதிவீ காமதுகாஸ்தே - பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்ற காத்துக் கொண்டு இருக்கிறாள்.

ஜனகோ தேவ: சகல தயாளு: - நம் தந்தையான இறைவனோ எல்லோர் மேலும் மிக்கக் கருணை கொண்டவன்.

தாம்யத - ஆதலால் தன்னடக்கம் கொள்ளுங்கள்.

தத்த - ஆதலால் எல்லோருக்கும் உங்கள் செல்வத்தை தானம் கொடுங்கள்.

தயத்வம் - ஆதலால் எல்லோரிடமும் கருணையோடு இருங்கள்.

ஜனதா - உலக மக்களே!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

இந்தப் பாடலின் பொருள் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். தமிழ் அறியாத உங்கள் நண்பர் யாருக்காவது நீங்கள் இந்த பாடலின் பொருளை அனுப்ப விரும்பினால் இங்கே சொடுக்கி அனுப்பவும்.

Friday, May 16, 2008

என் சுவாசக் காற்றே! சுவாசக் காற்றே! நீயடி!

என் சுவாசக் காற்றே! சுவாசக் காற்றே! நீயடி!

உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி?!
நான் பாடும் பாட்டே! பன்னீர் ஊற்றே! நீயடி!

முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக்குழல்களில் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா? கண்கள் காணுமா?
காதல் தோன்றுமா? (என் சுவாசக் காற்றே)




இதயத்தைத் திருடிக் கொண்டேன் - என்
உயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைத்ததை அடையவே
மறுமுறை காண்பேனா நான்?

என் சுவாசக் காற்றே! சுவாசக் காற்றே! நீயடி!

உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி?!
நான் பாடும் பாட்டே! பன்னீர் ஊற்றே! நீயடி!

முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக்குழல்களில் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா? கண்கள் காணுமா?
காதல் தோன்றுமா? (என் சுவாசக் காற்றே)


திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
பாடியவர்கள்: எம்.ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

கொங்கு

கொங்கு நாட்டுக்காரங்க எத்தன பேர் இருக்கீங்க வலைப்பூக்கள்ள? ரொம்பப் பேரு. கொங்கு வட்டாரச் சொற்களும் சொலவடைகள்ளாம் நிறைய தெரிஞ்சிக்கிட்டோமே. சரி. கொங்குன்னா என்னன்னு தெரியுமா? தெரிஞ்சவங்க கை தூக்குங்க. தூக்கியாச்சா? இப்ப கொங்குன்னா என்னன்னு பாக்கலாம். நீங்க நெனச்சதும் நான் சொல்றதும் சரியாயிருந்துச்சுன்னா ஒங்க முதுகுல நீங்களே பாராட்டுதலா தட்டிக்கிருங்க. சரியா?

அதுக்கு முன்னாடி இலக்கியத்துல எங்கெல்லாம் கொம்பு..இல்லயில்ல..கொங்கு வருதுன்னு பாப்போமா? மொதல்ல எல்லாருக்கும் தெரிஞ்ச திருவிளையாடல் படத்துல வர்ர பாட்டு வரிகளப் பாப்போமா? "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" இந்தப் பாட்டத்தான் இறையனார் எழுதிக்குடுக்க தருமி வாங்கீட்டுப் போய் வம்புல மாட்டிக்கிட்டது.

தலைவன் பாடுறானாம். அதுவும் தும்பியைப் பாத்து. அதனால்தான் பாட்டு இப்படித் தொடங்குது. இதுக்குப் பொருள் மொதல்ல பாக்கலாம். அதென்ன கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி? தும்பி தெரியும். பறக்குமே. தும்பி என்ன இறையாகச் சாப்பிட்டு வாழும்? தேனைத்தானே!

அப்படியே ஜிங்குன்னு பறந்து போய் மலர்ல உக்காந்து கிட்டு தேன்குடத்துல லேசா ஒரு ஓட்டையப் போட்டு தேனைக் குடிக்கிறப்போ மலர்கள்ள இருக்குற மகரந்தப் பொடியும் அந்தத் தேன் குடத்துலயும் தும்பியோட வாயிலையும் விழுமாம். அப்படித் தேனையும் மகரந்தத்தையும் கொழப்பித்தான் இறையாத் திங்குதாம் தும்பி. இங்க தேன் என்றால் சிறிலோட வலைப்பூவென்றோ மகரந்தம் என்றால் என்னுடைய வலைப்பூவென்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது! :-)

அரிசிதான் பலருக்குச் சாப்பாடு. அதுக்காக எந்த அரிசியுமா திங்க முடியுது. கேரளா அரிசி ரொம்பப் பெருசு. கர்நாடகா அரிசி ரொம்பக் கொழையுது. ஆந்திரா அரிசி அம்சமா இருக்குன்னு தேர்ச்சி பண்ணித் திங்கதுண்டுதானே. அப்படிச் சாப்பிடுறவங்கள்ளாம் "அரிசி தேர் வாழ்க்கை அஞ்சிறை மனிதன்". புரிஞ்சதுங்களா? இப்ப கொங்கு தேர் வாழ்க்கைக்கு என்ன பொருள்? தேன் என்றும் சொல்லலாம். மகரந்தம்னும் பொருள் சொல்லலாம். இரண்டையுமே எடுத்துக்கிட்டிருக்காங்க. மகரந்தம் நறுமணம் மிகுந்ததால கொங்குங்குறதுக்குப் பண்பாகுபெயரா நறுமணம்னும் பொருள் சொல்லுவாங்க. ஆனா மகரந்தந்தான் மிகப் பொருத்தமானது. அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு பாக்கலாமா? சிலப்பதிகாரத்தைத் தொடுவோம். அதுவும் மொதப் பாட்டே.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று
இவ்வங்கண் உலகளித்தலான்


முழுப் பொருளையும் இப்பப் பாக்க வேண்டாம். கொங்க மட்டும் பார்க்கலாம். "கொங்கு அலர் தார்"னா என்ன? தார்னா மாலை. அலர்னா மல்ர். ஆக அலர் தார்னா மலர்மாலை. கொங்கு? அந்த மாலையில இருந்த மலர்கல் எல்லாம் இளம் மலர்களாம். அதுனால மகரந்தம் நிரம்பித் ததும்பித் ததும்பி வழிந்து மணம் பரப்புச்சாம். இப்ப கொங்குக்குப் பொருள் தெரிஞ்சதா? எத்தனை பேர் சரியா நினைச்சீங்க?

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, May 15, 2008

காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு


பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை ஊட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்குச் சம்மதம் தருமே

பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்குச் சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்

அந்தி வானம் அரைத்த மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்


சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே
கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே
பெண்மை எழுதும் கண் மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்துன் கூந்தல் நிறமே
எல்லாம் சேர்ந்துன் கூந்தல் நிறமே

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு


வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
மழையில் ஒடியும் தும்பை நிறமே
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் ஒடியும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே




திரைப்படம்: அலைபாயுதே
வெளிவந்த வருடம்: 2000
பாடியவர்கள்: ஹரிஹரன், கிளின்டன்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர்: வைரமுத்து

அலைபேசி

தொலைபேசி தெரியும். அதென்ன அலைபேசிங்கறீங்களா? கொஞ்சம் சிந்திச்சுப் பாத்தா புரிஞ்சிரும்ங்க. ஆங்... அதே தான். மொபைல் போன், செல் போன் என்றெல்லாம் சொல்றோமே - அதனைத் தமிழ்ல அலைபேசின்னு சொன்னா என்னங்க? நம்ம வா. மணிகண்டன் அவரோட தமிழ்மண விண்மீன் வாரத்துல இதனைப் பயன்படுத்தியிருந்தார்ன்னு நினைக்கிறேன். அப்ப குறிச்சு வச்சுக்கிட்டேன் இந்த சொல்லை - சொல் ஒரு சொல்லுக்காக. இனிமே நாம எல்லாரும் செல்போன்னு சொல்லாம அலைபேசின்னே சொல்லலாங்களா?

வேற பொருத்தமான சொல் ஏதாச்சும் இருந்தா அதையும் சொல்லுங்க.

Wednesday, May 14, 2008

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் - பெரியாழ்வார் திருமொழி 1.1


'நாலாயிரம் கற்போம்' பத்தித் தொடரில் இரண்டாவது பகுதி இது. பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் முதல் திருமொழி இந்த 'வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்' என்று தொடங்கும் பத்துப் பாடல்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்த போது பொங்கிப் பெருகும் மகிழ்ச்சியால் ஆயர்கள் செய்த செயல்களை எல்லாம் கூறுகிறார். இந்தப் பதிகம் திருக்கோட்டியூர் திவ்யதலத்திற்கு உரியது. திருக்கோட்டியூர் எம்பெருமானே ஆயர்பாடியில் பிறந்ததாகச் சொல்கிறார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.1:

பாசுரம் 1 (14 May 2008)

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே


அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் வாழும் கண்ணன் கேசவன் நம்பி திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்த போது, அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால் ஆயர்கள் ஒருவர் மீது பூசிய நறுமண எண்ணெயாலும் ஒருவர் மீது ஒருவர் தூவிய வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளாலும் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது.

***

இந்தப் பாசுரத்தில் கண்ணனை அறிமுகம் செய்யும் போது கண்ணன், கேசவன், நம்பி என்ற மூன்று பெயர்களைச் சொல்கிறார். அழகிய கண்களை உடையவன், கண்ணைப் போன்றவன், கண்களுக்கு விருந்தானவன், அழகிய திருமுடிக்கற்றைகளை உடையவன், கேசியை அழித்தவன், நற்குணங்களால் நிறைந்தவன், அழகன் போன்ற எல்லா பொருளையும் ஒரே நேரத்தில் அழகுபடச் சொல்லிச் செல்கிறார். கண்ணன் அவதரித்ததால் நந்தகோபருடைய இல்லை இனிய இல்லமானது. கண்ணன் பிறந்த பின்னர் நந்தகோபர் தன் இல்லத்தின் தலைவனாக கண்ணனைக் கொண்டான் என்பதால் நந்தகோபர் திருமாளிகையின் திருமுற்றத்தை கண்ணன் முற்றம் என்றார். செம்புலப்பெயல்நீர் என்பார் தமிழ்ப்புலவர். அதே போல் இங்கே எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறாகிக் கிடக்கிறது. ஆழ்வாருடைய காலத்திலும் கண்ணனுடைய காலத்திலும் மகிழ்ச்சியைத் தெரிவிக்க எண்ணையை ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டும் வண்ணச் சுண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவிக்கொண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப்பொடிகளைத் தூவியும் நீரில் கரைத்துத் தெளித்தும் மகிழ்கிறார்களே.

-------------------

பாசுரம் 2. (16 May 2008)

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே


திருவாய்ப்பாடியிலிருக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபருக்குத் திருக்குமரன் பிறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி.


***

இந்தப் பாசுரத்தில் கண்ணனின் திருவவதாரத்தை ஆய்ப்பாடியில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஆயர்கள் எப்படி குதூகலமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினார்கள் என்பதைச் சொல்கிறார் பட்டர்பிரான். கிருஷ்ண ஜனனத்தால் மகிழ்ச்சியுறாதவர்கள் எவருமில்லை திருவாய்ப்பாடியிலே. ஆலிப்பார் என்பதற்கு உரக்கக் கூவுதல், ஆலிங்கனம் (கட்டித் தழுவுதல்) என்று இரு பொருளைச் சொல்கின்றனர் பெரியோர்.

-----

பாசுரம் 3. (21 May 2008)

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேரில்லை காண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே


எல்லா சீர்களையும் உடைய இந்த சிறு பிள்ளை கம்சனைப் போன்றவர்களிடம் இருந்து மறைந்து வளர்வதற்காக அந்தப் பெருமைகளை எல்லாம் பேணி/மறைத்து நந்தகோபர் இல்லத்தில் பிறந்தான். அப்போது அவனைக் காண்பதற்காக எல்லா ஆயர்களும் ஆய்ச்சியர்களும் திருமாளிகைக்குள் புகுவார்கள்களும் உள்ளே புகுந்து அவனைக் கண்டு வெளியே வருபவர்களுமாக இருக்கிறார்கள். புகுபவர்களும் புக்குப் போதுபவர்களும் ஒருவருக்கொருவர் கண்ணனின் பெருமைகளைப் பேசிக் கொள்கிறார்கள். 'இவனைப் போன்ற அழகுடைய ஆண்மகன் வேறு யாரும் இல்லை. இவன் திருவோணத்தானாகிய திருமாலால் அளக்கப்பட்ட மூவுலகங்களையும் ஆள்வான்' என்று சொல்கிறார்கள்.

***

இந்தப் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளை திருவாய்ப்பாடி வாழ் மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டதைச் சொல்கிறார். பேணிச் சீருடை என்ற சொற்றொடருக்கு 'பேணுவதற்கு உரிய சீர்களை உடைய' என்று பொருள் கொண்டாலும் பொருத்தமே. திருவோணத்தான் உலகாளும் என்ற சொற்றொடருக்கு 'திருவோணத்தானாகிய திருமாலின் உலகங்களை ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரி தான்; 'இவன் திருவோணத்தானாகிய திருமாலே. இவன் உலகங்களை எல்லாம் ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரியே.

-------
பாசுரம் 4. (24 May 2008)

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே

பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய், பால், தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள்.

***

நெய், பால், தயிர் போன்றவற்றை மகிழ்ச்சியின் மிகுதியால் முற்றமெங்கும் தூவினார்கள் என்பதொரு பொருள். கண்ணனுக்கு நன்மை உண்டாகும் பொருட்டு (நன்று ஆக) எல்லாவற்றையும் எல்லோருக்கும் தானமாகக் கொடுத்தார்கள் என்று இன்னொரு பொருளைச் சொல்கிறார்கள் பெரியவர்கள்.
------------
பாசுரம் 5. (02 June 2008)

கொண்ட தாள் உறி கோலக் கொடு மழு
தண்டினர் பறி ஓலைச் சயனத்தர்
விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்


இந்த இடையர்கள் தாங்கி வந்த உறிகள் அவர்கள் கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. அவர்களது ஆயுதங்களான அழகிய கூர்மையான மழுவையும் மாடு மேய்க்கும் கோல்களையும் ஏந்தி வந்திருக்கின்றனர். பனைமரத்திலிருந்து பறித்து எடுத்த ஓலையால் செய்த பாயை இரவில் படுக்கப் பயன்படுத்திவிட்டு அதனையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். பறித்தெடுத்த முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களைக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட இடையர்கள் நெருக்கமாகக் கூடி கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக நெய்யால் ஆடினார்கள்.

***

மாடு மேய்க்கப் போன இடத்தில் பால் கறக்க நேர்ந்ததால் அந்த பாலை இட்டு வைத்த உறியையும் தாங்கி வந்திருக்கின்றனர். அந்த உறிகளைக் காவடி போல் ஏந்தி வந்தார்கள் போலும். அப்படி ஏந்தி வந்த உறிக்காவடி அவர்களது தாள்களை/கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. இலை தழைகளைப் பறித்து மாடுகளுக்கு இடுவதற்காக சிறிய மழுவாயுதத்தைத் தாங்கி வருகிறார்கள். மாடுகளை மேய்க்கும் கோல்களையும் தாங்கி வருகின்றார்கள். எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாததால் அவர்களது பற்கள் வெண்மையான முல்லை அரும்புகளைப் போல் இருக்கின்றன. கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் எண்ணெய் தேய்த்து நீராடியதை நெய்யாடினார் என்று சொல்வதாகக் கூறினாலும் பொருத்தமே.

இராக்காவல் முடிந்து வந்தார்கள் என்பது பெரியோர்கள் சொன்ன பொருள். அதிகாலையில் மாடு மேய்க்கச் செல்பவர்கள் கண்ணன் பிறந்த செய்தியைக் கேட்டு வந்து மகிழ்ந்து நெய்யாடினார்கள் என்றாலும் பொருத்தமே.

இங்கே அண்டர் என்று சொன்னது அண்டத்தில் வாழும் தேவர்களை என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால் இங்கே விளக்கியிருக்கும் செயல்களைச் செய்பவர்கள் இடையர்களாக இருக்கவே வாய்ப்புள்ளதாலும் முன்பின் வரும் பாசுரங்கள் இடைச்சேரியைப் பற்றியே பேசுவதாலும் அண்டர் என்றது ஆயர்களையே எனலாம்.

-------
பாசுரம் 6. (06 June 2008)

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பையவாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே


கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!

***

இன்றைக்கும் சிறு குழந்தையைக் குளிப்பாட்டும் போது தாய்மார்கள் கால்களை நீட்டி அமர்ந்து குழந்தையை முழந்தாள் மூட்டின் மேல் வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள். அப்போது குழந்தைக்கு சிறிதும் அதிர்ச்சி ஏற்படாத வண்ணம் சிறிதே வெம்மையான நீரை பையப் பைய ஊற்றி நீராட்டுகிறார்கள். அன்றைக்கும் அசோதைப் பிராட்டியார் தன் சிறு குழந்தையாம் இளஞ்சிங்கத்தை அப்படித் தான் நீராட்டியிருக்கிறாள். குழந்தையின் கையும் காலும் நன்கு செயல்படுவதற்காக அவற்றை நீட்டி நிமிர்த்துவதும் இன்றைக்கும் தாய்மார்கள் செய்வதே (சில இல்லங்களில் பாட்டிமார்கள் செய்கிறார்கள்). அப்படி கையும் காலும் நீட்டி நிமிர்த்திய பின் கடார நீரால் கண்ணக் குழந்தையை நீராட்டி அவனது நாக்கை வழிப்பதற்காக வாயை திறந்த போது அங்கே ஏழுலகையும் கண்டு வியந்து போனாள். ஐய என்ற சொல்லால் அந்த வியப்பைக் குறிக்கிறார் ஆழ்வார்.

மண்ணெடுத்து உண்டதால் அண்ணனால் தடுக்கப் பட்டு அன்னையால் ஆராயப்படும் போது வாயுள் ஏழுலகம் காட்டினான் என்றே இதுவரை படித்தும் கேட்டும் இருக்கிறோம். ஆழ்வார் அந்த நிகழ்வை இன்னும் விரைவாக்கி பிறந்த சில நாட்களிலேயே நடப்பதாகக் கூறுகிறார்.

-----
பாசுரம் 7. (17 June 2008)

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே


கண்ணனின் திருவாயுனுள் எல்லா உலகங்களையும் கண்ட யசோதைப் பிராட்டியும் மற்ற ஆய்ச்சியர்களும் மிகவும் வியந்து 'ஆயர்களின் பிள்ளை இல்லை இவன். பெறுதற்கரிய தெய்வமே இவன். பரந்த புகழையும் சிறந்த பண்புகளையும் உடைய இந்த பாலகன் எல்லா உலகங்களையும் மயக்கும் அந்த மாயனே' என்று ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.

***

கண்ணனுடைய திருவருளால் தெய்வீகக் கண் பெற்ற யசோதைப் பிராட்டியார் கண்ணனின் திருவாயுனுள் ஏழுகலங்களையும் கண்டு வியந்து மற்ற ஆய்ச்சியர்களையும் அழைத்துக் காண்பித்தாள். கண்ணன் அவர்களுக்கும் திருவருள் செய்து தெய்வீகக் கண்களைக் கொடுக்க அவர்களும் அவன் திருவாயுனுள் உலகங்களைக் கண்டு வியந்தனர். வியந்து 'இவன் இடைப்பிள்ளை இல்லை; ஏழுலகங்களையும் மயக்கும் மாயனே' என்று சொல்லி மகிழ்ந்தனர்.
---------

பாசுரம் 8. (30 June 2008)

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்தமாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே


கண்ணன் பிறந்து பன்னிரண்டாம் நாள் அந்தக் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்தத் திருவிழாவிற்காக எல்லா திசைகளிலும் கொடிகளும் தோரணங்களும் தாங்கிய வெற்றித் தூண்கள் நடப்பட்டிருக்கின்றன. அந்தத் திருவிழாவில் யானைகள் நிறைந்த கோவர்ந்தன மலையைத் தாங்கிய மைந்தனாம் கோபாலனை கைத்தலங்களில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர் ஆயர்கள்.

***

குழந்தை பிறந்து பத்தாம் நாளிலோ பன்னிரண்டாம் நாளிலோ ஏதோ ஒரு நல்ல நாளில் பெயர் சூட வேண்டும் என்று சொல்கின்றன சாத்திரங்கள். அதனை ஒட்டி பன்னிரண்டாம் நாள் அன்று எல்லாத் திசைகளிலும் தோரணங்களையும் கொடிகளையும் நாட்டிக் கொண்டாடுகின்றனர் ஆயர்கள்.

இங்கே ஆயர்கள் என்றது ஆண் பெண் இருபாலரையும்.

தங்கள் கைகளில் வைத்துக் கொண்டாடினர் என்று சொன்னாலும் தகும். உத்தானம் என்று சொன்னதால் தலை மேல் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினர் என்றாலும் சரியே.

கோவர்த்தன மலையைத் தூக்கிய நிகழ்ச்சி பிற்காலத்தில் நடந்திருந்தாலும் அந்த நிகழ்ச்சி நடந்ததற்கு பின்னர் வாழ்ந்தவர் ஆழ்வார் என்பதால் அதனை இங்கே நினைத்துக் கொண்டார் என்பதில் குறையில்லை. திருவாய்ப்பாடியில் நடந்ததை திருக்கோட்டியூருக்குக் கொண்டு வந்ததைப் போல் பின்னர் நடந்ததை முன்னரே நினைத்துக் கொண்டார் போலும்.
---
பாசுரம் 9. (8 July 2008)

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்


'கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ இடுப்பை முறிக்கும் அளவிற்கு ஆடுகிறான். இறுக்கி அணைத்துக் கொண்டால் வயிற்றின் மேல் பாய்கிறான். தேவையான வலிமை இல்லாததால் நான் மிகவும் மெலிந்தேன் பெண்ணே' என்று யசோதைப் பிராட்டியார் தோழியிடம் முறையிடுகிறார்.

***

இங்கே மிடுக்கிலாமையால் என்றது யசோதையாகிய தன்னை என்றும் கிருஷ்ணக் குழந்தையை என்றும் இருவிதமாகப் பெரியோர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பிறந்து பன்னிரண்டே நாட்கள் பிஞ்சினைப் பற்றி கூறுவதால் குழந்தையின் மென்மையை மிடுக்கிலாமை என்றார். சிறிதே வளர்ந்த குழந்தையைப் பற்றி யசோதையார் கூறினார் என்றால் அது தன்னைக் கூறினார் என்னிலும் தகும். இன்றைக்கும் தமது குழவியரைப் பற்றி தாயர் இந்தக் குறையைக் கூறி மெச்சிக் கொள்வதைக் கேட்கிறோமே.

-----

பாசுரம் 10. (14 July 2008)

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்தயிப்
பன்னுபாடவல்லார்க்கு இல்லை பாவமே

செந்நெல் ஆர்க்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் நிலைத்து வாழும் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பிய நாரணன் திருவாய்ப்பாடியில் பிறந்த சரிதத்தை திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடுபவர்களுக்கு இறைவனைச் சிந்திக்கவும் அடையவும் தடையாக நிற்கும் பாவங்கள் நீங்கும்.

***

செந்நெல் ஆர்க்கும் என்றதனால் இம்மைப்பயன்கள் குறைவின்றி விளங்குவதைக் காட்டினார். மன்னு என்று என்றும் நிலைத்து வாழ்வதைக் கூறியதால் அர்ச்சாவதாரத்தின் குறைவில்லாப் பெருங்குணத்தைக் காட்டினார். நாரணன் என்று சொன்னதால் எவ்விடத்தும் எவ்வுயிரிலும் வாழ்பவன் என்பதையும் எவ்விடமும் எவ்வுயிரும் தன்னுள் கொண்டவன் என்பதையும் கூறினார். நம்பி என்றதால் அர்ச்சாவதாரத்தில் மிக வெளிப்படையாக நிற்கும் பெருங்குணமான சௌலப்யத்தை / நீர்மையைக் காட்டினார். இல்லை பாவமே என்றதனால் கைங்கர்ய விரோதிகளான பாவங்கள் நீங்கினபடியைக் கூறினார்.
--------------

இதற்கு முந்தைய பாசுரங்களை 'நாலாயிரம் கற்போம்' வகையில் காணலாம். வண்ணப்படத்திற்கு நன்றி: இஸ்கான்

Tuesday, May 13, 2008

திருவிளையாடலும் பாரதியாரும்...

1. சன் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக 'திருவிளையாடல்' என்ற நெடுந்தொடரைத் தொடங்கியிருக்கிறார்கள். திருவிளையாடல் திரைப்படத்தை ஒட்டி மாங்கனி விளையாட்டுடன் தொடங்கிய தொடர் திரைப்படத்தைப் போலவே 'தருமி'யின் கதைக்கு முதலில் சென்றுவிடும் என்று எண்ணினேன். ஆனால் அப்படி செய்யாமல் திருவிளையாடல் புராணத்தில் வருவதைப் போலவே வரிசையாக திருவிளையாடல்களைச் சொல்லிவரப் போகிறார்கள் போலும். முதல் திருவிளையாடலான இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தைப் பெற்று பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ளும் திருவிளையாடலைத் தற்போது காட்டுகிறார்கள். திருவிளையாடல் புராணம் சொல்வதற்கும் அதிகமாக இந்தக் கதையில் இந்திரன் தொடர்புள்ள மற்ற கதைகளையும் இணைத்துச் சொன்னாலும் இது வரை பிசிறு தட்டவில்லை; எந்தக் கதையுமே இந்தத் தொடருடன் இயைந்து வருவதற்காக மாற்றப்படவும் இல்லை. அது வியப்பாகவும் சுவையாகவும் இருக்கிறது. அவ்வப்போது நடுநடுவே சுவையைக் குறைக்கும் நீண்ட உரையாடல்கள் வந்தாலும் தற்போதைக்கு இந்தத் தொடர் மொத்தத்தில் சுவையுள்ளதாக இருக்கிறது.

2. பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை இன்று யூட்யூபில் பார்த்துக்/கேட்டுக் கொண்டிருந்தேன். அவரது 'அச்சமில்லை அச்சமில்லை' பாடலை ஒரு சிறுவன் பிசிறு தட்டாமல் பாடுவதைக் கண்டு வியந்தேன். பெரியவர்களுக்கே வாய் குழறும் நீண்ட வரிகளை ஒருவர் சொல்லச் சொல்ல எந்த வித குழறல்களும் இல்லாமல் இந்த சிறுவன்/சிறுமி மிக அருமையாகச் சொல்கிறார்.




இப்படி சின்ன சின்ன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக குறும்பதிவுகள் இடுவதும் நன்றாகத் தான் இருக்கிறது. இனி அவ்வப்போது நானும் இப்படி இடுகைகள் இடலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

Monday, May 12, 2008

நலந்தானா நலந்தானா

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் நலந்தானா பாடலை யார்தான் மறக்க முடியும்! கவுண்டமணி ஒரு படத்தில் மேளம் வாசிக்கும் செந்திலிடம் நலந்தானா வாசிக்கச் சொல்லி வம்பு செய்து "டொட்டொடோ டொட்ட டொட்டடோ" என்று சிரிக்க வைப்பார். அந்த அளவிற்கு அந்தப் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. கவியரசர் எழுதி திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் இசைக்குயில் பி.சுசீலா பாடிய பாடல் அது.

ஒன்று வெற்றி பெற்றால் அதைப் பார்த்து மற்றொன்று வருவது இயல்புதானே. அப்படி வந்த இன்னொரு பாடல்தான் "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா"! இந்தப் பாடலும் திறமையுள்ளவர்கள் இணைந்து உருவாக்கிய பாடல்தான். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து எழுதி நித்யஸ்ரீ பாடிய பாடல் இது. ஆனாலும் முதல் பாட்டு அடைந்த புகழை இந்தப் பாட்டு அடையவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவைகளில் ஒன்று நலந்தானா என்ற சொல் நமக்கு எளிதாக இருக்கும் அளவிற்குச் சௌக்கியமா என்ற சொல் இல்லாதது.

ஆனாலும் நாம் நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கையில் "சௌக்கியமா?" "சவுக்கியமா?" "சௌகர்யமா?" "சவுரியமா?" என்றெல்லாம் கேட்கிறோம். இந்தச் சொற்களைத் தவிர்த்துத் தமிழில் பேசுகையில் நலமா என்றே கேட்கலாம். நலமா என்று சொல்வது செந்தமிழில் பேசுவது போல இருந்தால் "நல்லாயிருக்கீங்களா" என்று கேட்கலாம்.

சௌக்கியமும் சௌகர்யமும் பல இடங்களில் பயன்படுத்தப் படுகிறது. அதாவது வசதி என்ற சொல்லுக்கு மாற்றாக. இடம் வசதியாக இருந்தது என்று சொல்வதற்கு சௌகர்யமாக இருந்தது என்று சொல்வதும் உண்டு. அந்த இடங்களில் வசதியைப் பயன்படுத்தலாம்.

இவ்வளவு சொல்லியாகி விட்டது. இலக்கியத்தில் நலம் வரும் இடங்களில் சிலவற்றைப் பார்க்கலாமா?

1. திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் என்றே ஒரு அதிகாரம் உள்ளது. இங்கு நலம் என்பது கிட்டத்தட்ட செல்வம் என்ற பொருளில் வருகிறது. வாழ்க்கைத் துணை என்பதே நலம் என்ற பொருள். இந்த அதிகாரத்தில்தான் "தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெளுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்ற புகழ் பெற்ற திருக்குறளும் உள்ளது.

2. ஒரு வாசகத்திற்கும் உருகாதாரும் உருகும் திருவாசகத்தில் ஒரு மாறுபட்ட பயன்பாடு. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடுகிறார்கள் "நலக்க அடியோமை ஆண்டுகொண்டு" என்று. அதாவது இறைத்தொண்டாக பொற்சுண்ணம் இடிப்பதால் தாம் நலம் அடையும் வகையில் ஆட்கொள்வான் இறைவன் என்னும் பொருளில் வந்தது. நலக்க என்பது நலம் பெறும் வகையில் என்ற பொருளில் வந்துள்ளது.

இப்பொழுது நான் இங்கு நிறுத்திக் கொள்கிறேன். மற்றைய இலக்கியங்களில் நலம் எங்கெல்லாம் பயின்று வந்திருக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது!

எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவை ஆனது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

அலெ அலெ ...

ஆனந்த தண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்
ஒரு எறும்பாய்...
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன்
ஒரு இலையாய்... (அலே அலே...)

காதல் சொன்ன கணமே - அது
கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓ...ஹோ... (காதல்)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலவுதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே (அலே அலே...)

கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளை தான் குடித்ததும் வற்றிவிட்டேன் (காதல்)

மணல் முழுதும் இன்று சர்க்கரையா?
கடல் முழுதும் இன்று குடிநீரா?
கரை முழுதும் உந்தன் சுவடுகளா?
அலை முழுதும் உந்தன் புன்னகையா?
காகிதம் என் மேல் பறந்ததும்
அது கவிதை நூல் என மாறியதே! (அலே அலே)

வானவில் உரசியே பறந்ததும்
இந்தக் காக்கையும் மயில் என மாறியதே (காதல்)




திரைப்படம்: பாய்ஸ்
வெளிவந்த வருடம்: 2003
பாடியவர்கள்: சாதனா சர்கம், கார்த்திக்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர்: கபிலன்

Saturday, May 10, 2008

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே!

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டுக் கிளியே சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே (சென்னை)

நேந்திரம்பழமே நெய்மீனே நதியே மிளகுக் கொடியே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்

சகீ உன்னிடம்...
சகீ உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்
உன்னைக் காணவே நிலவு தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும் (சென்னை)

காதல் கதகளீ ...
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களைக் கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன் (சென்னை)




திரைப்படம்: M. குமரன் S/O மகாலக்ஷ்மி
வெளிவந்த வருடம்: 2004
பாடகர்: ஹரீஷ் இராகவேந்தர்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
இயற்றியவர்: நா. முத்துகுமார்

Thursday, May 08, 2008

திகிரி

வண்டி உருண்டோட அச்சாணி தேவைன்னு பாட்டு இருக்கு. ஆனா அச்சாணி மட்டும் போதுமா? அதவிடத் தேவையானது எது? அதாங்க சக்கரம். அச்சாணி இல்லாம வண்டி கொஞ்ச தொலையாவது ஓடும். ஆனா அச்சாணி இருந்து சக்கரமில்லாட்டி? வண்டிச்சக்கரம்னு சிவகுமாரும் சரிதாவும் நடிச்சு ஒரு படம் வந்தது. அதுலதாங்க தமிழர் உள்ளங் கொண்ட சிலுக்கு சுமிதா அறிமுகமானாங்க. "வா மச்சாம் வா வண்ணாரப்பேட்ட! சிலுக்கோட கையால வாங்கிக் குடி"ங்குற தீந்தமிழ்ப் பாட்டு இருக்கு.

இந்தச் சக்கரம் எப்படியெல்லாம் பயன்படுது பாருங்க...எதெல்லாம் சுத்துதோ அதோட எல்லாம் வரும். வாழ்க்கைச் சக்கரம்னு ஒரு திரைப்படம் கூட இருக்கு. சக்கரத்தாழ்வார்னு ஒரு சாமி இருக்கு. மதுரைக்குப் பக்கத்துல திருமாலிருஞ்சோலைக்குப் (பழைய பழமுதிர்ச்சோலை) போனீங்கன்னா அங்க சக்கரத்தாழ்வாருக்கு ஒரு சின்னக் கோயில் இருக்கு. அங்க இருக்குற ஐயரு "எட்டெட்டும் பதினாறு கைகள். பதினாறு கைகளிலும் பதினாறு வித ஆயுதங்கள்" அப்படீன்னு விளக்கம் சொல்வாரு. போன தடவ போனப்போ கேட்டேனே!

காலச்சக்கரம்னும் சொல்ற வழக்கம் உண்டே. மகாபாரதம் தொடர் பாத்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒரு சக்கரம் அப்பப்ப வந்து சுத்திக்கிட்டே கதை சொல்லும். விளக்கம் சொல்லும். அதுதான் காலச்சக்கரம். காலம் நிக்காம சுத்திக்கிட்டேயிருந்து உலகத்த நடத்துதுன்னு சொல்ல அப்படிக் காட்டுவாங்க.

வேறெங்க சக்கரம் இருக்கு? அசோகச் சக்கரம். நம்ம நாட்டுக் கொடியில ஊதா நிறத்துல நடுவுல 24 ஆரங்களோட இருக்குதே. அதுவும் காலங் காட்டும் குறியீடுதான்.

இன்னொரு எடத்துலயும் சக்கரம் இருக்கு. களிமண்ண வெட்டியெடுத்துக் கொழச்சு சக்கரத்தச் சுத்த விட்டு நடுவுல மண்ண வெச்சி பான சட்டி செய்யுறதுக்கும் சக்கரம் பயன்படுது. மைக்ரோவேவ் அவன் வெச்சிருக்கீங்களா? அதுக்குள்ள ஒரு சக்கரம். பிலிம் ரோல் சுக்தி வெக்கிற சக்கரம்.

இன்னும் நெறைய இருக்கு. இந்தச் சக்கரம் தமிழா? வடமொழியில் இருந்து வந்ததுன்னு நெனைக்கிறேன். பழைய தமிழ் நூல்களில் வேறொரு சொல் பயன்படுத்தப்பட்டிருக்கு. அதத்தான் இன்னைக்கு அறிமுகப்படுத்தப் போறேன். மேலே நம்ம பாத்த அத்தனைக்கும் இந்தச் சொல்தான் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சொல்தான் "திகிரி!"

இலக்கியத்துல இது இருக்குதா? சட்டுன்னு நினைவுக்கு வர்ரது திருப்புகழ்தான். முத்தைத் தரு பத்தித் திருநகை திருப்புகழ் எல்லாருக்கும் தெரியும். அதுல் இப்பிடி வரும். "பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக".

வட்ட வடிவமானவை திகிரி. இங்கு சூரியனும் திகிரிதான். அதுவும் எப்படி? பட்டப்பகல் வட்டத் திகிரி. திகிரின்னா சக்கரம்னு சொன்னேன். பட்டப்பகல்னா பெருவெளிச்சம். பெருவெளிச்சந்தரும் வட்ட வடிவச் சக்கரந்தான் பட்டப்பகல் வட்டத் திகிரி. எப்படி பேரு வெச்சிருக்காரு பாத்தீங்களா அருணகிரிநாதரு.

வைணவத்துலயும் திகிரிதான். திருமாலின் திருக்கரத்தில் திருவீற்றிருக்கும் திருக்கருவியும் திகிரிதான்.

இதுக்கும் பழையது ஒன்னு இருக்கு. சிலப்பதிகாரந்தான். வஞ்சிக் காண்டத்துல இப்பிடி வருது. ஒம்பது அரசர்கள் சோழன் கிள்ளி வளவனச் சண்ட பிடிக்க வர்ராங்க. அப்ப அவரோட மச்சினரு சேரன் செங்குட்டுவன் உதவிக்கு வந்து அந்த ஒம்பது அரசர்களை ஒரு பகற்பொழுதில் அழிச்சான். (இந்தக் கதையும் ரொம்பச் சுவையானது. வேறொரு பொழுது பார்ப்போம்.) அதச் சொல்றப்போ இப்படி ஒரு வரியப் போடுறாரு நம்ம இளங்கோ.
ஒன்பது குடையும் ஒரு பகலொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப்படுத்தோய் (அப்பயே ஒருவழிப்பாதைய ஏற்படுத்துனவன் தமிழன் ஹா ஹா ஹா)

இப்பிடி எக்கச்சக்கமாப் பயன்படுத்தப்பட்ட திகிரிங்குற சொல் இன்னைக்குப் பயன்பாட்டுல இல்ல. இனிமே சக்கரத்துக்குப் பதிலா பஸ் திகிரி, சைக்கிள் திகிரின்னு சொல்லச் சொல்லலை. ஆனா இப்படி ஒரு சொல் இருந்தது. அது செழிப்பாப் பயன்படுத்தப்பட்டதுன்னு எல்லாரும் நினைவுல வெச்சுக்கனும். அதுதான் என்னோட வேண்டுகோள். மறந்தது மறைந்ததுன்னு தெரிஞ்சிக்கிட்டு மறக்காம மறையவிடாம காப்பாத்தனும். அவ்வளவுதாங்க.

என்னோட அறிவுக்கு எட்டியத் சொல்லீட்டேன். இனிமே இராம.கி, எஸ்.கே, யோகன் ஐயா, குமரன் போன்றோர் வந்து நெறைய விவரங்களத் தரனமுன்னு கேட்டுக்கிறேன். விவரந் தெரிஞ்ச யாரும் வந்து சொல்லலாம். ரொம்ப நன்றியாப் போகும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, May 07, 2008

இணைய எழுத்துகள் எழுதியவருக்குச் சொந்தமா இல்லையா?

இணையத்தில் எழுத வந்த நாள் முதல் இந்த கேள்வி உண்டு. என்னுடைய வலைப்பதிவுகளில் நான் எழுதிய இடுகைகள் அப்படியே ஒரு சொல்லும் மாறாமல் மற்ற இணையத் தளங்களிலும் வலைக்குழுமங்களிலும் இருப்பதை பல முறை கண்டிருக்கிறேன். சில நேரங்களில் என் இடுகையோ என் பதிவோ தொடுப்பாகக் கொடுக்கப் பட்டிருக்கும். சில நேரம் என் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வகையில் இருந்தால் சரி 'கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்துவிட்டார்கள்' என்று மகிழ்ந்திருப்பேன். பல இடங்களில் அப்படி எந்த விதக் குறிப்பும் இல்லாமல் அப்படியே நான் எழுதியது எழுத்துப்பிசகாமல் இருப்பதைக் காணும் போது மெல்லிய சினம் படர்வதைத் தவிர்க்க முடிவதில்லை. ஒருவருடைய எழுத்து பிடித்திருந்தால் அவரிடம் அனுமதி பெற்றே மற்ற இடத்தில் அதனை எடுத்து இடவேண்டும் என்று ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் இணையத்தில் அது எல்லா நேரங்களிலும் செய்ய முடிவதில்லை. அதனால் சுட்டியை மட்டும் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த அளவிற்காவது என் எழுத்துகளை எடுத்து இடும்போது குறிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஏன் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நாளை யாராவது ஒருவர் அப்படி எந்த வித குறிப்பும் இல்லாமல் என் எழுத்துகள் இருக்கும் வலைப்பக்கத்தைப் பார்த்துவிட்டு அதனைத் திருடித் தான் என் எழுத்து என்று சொல்லிக் கொண்டு என் வலைப்பதிவில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டால்? :-)

ஒரே ஒரு எடுத்துக்காட்டு: http://www.mayyam.com/hub/viewtopic.php?t=10549&postdays=0&postorder=asc&start=0 ('மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம்' என்னும் என் இடுகை தலைப்பிலிருந்து எதுவுமே மாறாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் என் பெயரோ இடுகையோ பதிவோ குறிக்கப்படவில்லை)

நல்ல இடத்துச் சம்பந்தம்

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" ரொம்பப் பேர் கேட்டிருப்போம். இதில் வரும் சம்பந்தம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் இல்லை. இன்றைக்குப் பயன்பாட்டில் இந்தச் சொல் இருக்கிறது. இதற்கான இணைச் சொல் தமிழில் தொடர்பு எனப்படும். இந்தச் சொல்லை இனியாவது நிறைய பயன்படுத்த வேண்டும். சம்பந்தம் இருக்கையில் தொடர்பு தேவையா எனக் கேட்கலாம். சரிதான். சம்பந்தம் இருக்கட்டும். தொடர்பு ஏன் இல்லாமல் போக வேண்டும். ஆகையால் தொடர்பைப் பேச்சில் இனிமேல் தொடர்பு படுத்துவோம்.

( திருஞான சம்பந்தர் இருந்தாரல்லவா. தமிழ் பிழைக்கப் பாடிய பிள்ளை அவர். அவர் அறிவோடு தொடர்ந்தவர் என்பதால்தான் அவருக்குத் திருஞான சம்பந்தர் என்று பெயர். திருஞானம் என்றால் மெய்ப் பொருள். மெய்பொருள் என்பது இறையருள். பெயர்ப் பொருள் புரிந்ததா! )

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, May 06, 2008

ஆத்திகம், நாத்திகம்

இந்த இரு சொற்களையும் நாம் எல்லோரும் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். எனக்குத் தெரிந்தவரை இவை இரண்டும் வடமொழியடிப்படையில் வந்த சொற்கள். ஆஸ்திகம் - 'உண்டு' என்று சொல்லும் இயல், நாஸ்திகம் - 'இல்லை' என்று சொல்லும் இயல் என்று வடமொழியில் பொருள். அவற்றை முறையே தமிழில் ஆத்திகம் என்றும் நாத்திகம் என்றும் புழங்கிக்கொண்டிருக்கிறோம்.

இல்லை, இவையிரண்டும் தமிழ்ச் சொற்களே. இவையே வடமொழியில் ஆஸ்திகம், நாஸ்திகம் என்று ஆக்கப்பட்டது என்று ஒலி, எழுத்து முதலிய அடிப்படைகளில் இராம.கி. போன்ற தமிழறிஞர்கள் விளக்கினால் இவை தமிழென்று ஏற்றுக் கொண்டு தொடர்ந்து புழங்கலாம்.

அப்படியின்றி இவை இரண்டும் வடமொழிச் சொற்களே; தமிழில் ஆத்திகம், நாத்திகம் என்று வடமொழிச் சொற்களே புழங்குகின்றன என்றால் அவற்றிற்குத் தகுந்த தமிழ்ச் சொற்களைப் புழங்கத் தொடங்கலாம் என்று எண்ணுகிறேன்.

சில இடங்களில் நாத்திகர் என்பதற்கு 'கடவுள் மறுப்பாளர்' என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஆஸ்திகர் என்பவர்கள் கடவுள், ஆன்மா (உயிர்?), கர்மா (வினை) இவை 'உண்டு' என்று சொல்பவர்கள். அதற்கு நேரெதிராக இவை எல்லாம் 'இல்லை' என்று சொல்பவர்கள் நாத்திகர்கள். 'கடவுள் மறுப்பாளர்' என்பது 'உண்டு' என்று சொல்லப்பட்ட மூன்றில் ஒன்றை மட்டுமே மறுப்பவர்களைக் கூறுகிறது. மூன்றையும் மறுப்பவர்கள் என்று சொல்லும்படியான சொல்லோ சொற்றொடரோ இருக்கிறதா? இல்லை இந்த 'கடவுள் மறுப்பாளர்' என்ற சொற்றொடரே மூன்றையும் மறுப்பதைக் குறிக்குமா? அதற்கு எதிராக ஆத்திகர் என்பதற்குத் தகுந்த தமிழ்ச்சொல் என்ன?

குறிப்பு: இந்தப் பதிவு ஆத்திகர்களையோ நாத்திகர்களையோ போற்றியோ இகழ்ந்தோ எந்த விதமான உ.கு., வெ.கு., நே.கு., நி.கு. வைத்தோ எழுதப்படவில்லை. ஆத்திகம், நாத்திகம் என்னும் சொற்களை ஆய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். அதனால் அந்த நோக்கத்திற்கு ஏற்ற மாதிரிப் பின்னூட்டங்களே இடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

Virtual: மெய்நிகர்

இராம.கி. ஐயா அவர்களின் வளவு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருந்த போது இந்த 'மெய்நிகர்' என்ற சொல்லை 'Virtual' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்தேன். இது ஒரு நல்ல பரிந்திரை ஆயிற்றே என்று தோன்றியது. அதனால் இந்த வாரச் சொல்லாக அதனை இங்கே தருகிறேன்.

இந்தத் தமிழ்ச்சொல்லை யாராவது புழங்குகிறார்களா என்று கூகிளில் தேடியபோது நிறைய சுட்டிகள் கிடைத்தன. அவற்றில் இந்தச் சொல் பயன்பட்டிருக்கும் இடங்கள்:

1. மெய்நிகர் கன்சோல் - Virtual Console
2. மெய்நிகர் வட்டு - Virtual Disk
3. மெய்நிகர் முனையம் - Virtual Terminal
4. மெய்நிகர் அகராதி - Virtual Dictionary
5. மெய்நிகர் திரைகள் - Virtual Screens
6. மெய்நிகர் தாள் - Virtual Paper
7. மெய்நிகர் வாழ்க்கை - Virtual Life
8. மெய்நிகர் முகவரி - Virtual Address
9. மெய்நிகர் கணினி - Virtual Computer (இராம.கி. ஐயா கணினி என்று சொல்லாமல் கணி என்றே கம்ப்யூட்டரைக் குறிப்பதையும் அவர் வலைப்பதிவில் கண்டேன். )
10. மெய்நிகர் பல்கலைக்கழகம் - Virtual University

இப்படி நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. கூகிளில் பாருங்கள். ஏற்கனவே இந்தச் சொல் புழக்கத்தில் வந்துவிட்டது போலும். இன்னும் நம்மைப் போன்ற தமிழார்வலர் அல்லாதாரும் இந்தச் சொல்லைப் புழங்கத் தொடங்கினால் விரைவில் இதுவும் கணினி என்பதைப் போல் அனைவரும் புரிந்து கொள்ளும் ஒரு சொல்லாக கட்டாயம் மாறும்.

***

இந்த மாதிரி சொல்லைப் பரிந்துரைப்பது எவ்வளவு உதவியாக இருக்கிறது? உங்களால் இந்தச் சொற்களை எழுத்திலோ பேச்சிலோ புழங்க முடிகிறதா? அப்படிச் செய்ய முடிந்தால் தான் இந்த வலைப்பதிவுகளால் பயன். இல்லை இது வீண் வேலையாகவே முடியும்.

இரு வாரங்களுக்கு முன் 'ஒளவியம்' என்றச் சொல்லைப் பார்த்தோம். என்னால் ஒரே ஒரு முறை எழுத்தில் மட்டுமே அதனைப் பயன்படுத்த முடிந்தது. அதற்குக் காரணம் பொறாமை என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்துவதில்லை என்பது தான். ஆனால் அதற்கு முன் சொல்லப்பட்டச் சொற்களை நன்கு பயன்படுத்த முடிகிறது. உங்கள் நிலை எப்படி?

Saturday, May 03, 2008

ஒளவியம்: பொறாமை

இந்த ஒளவியம் என்ற சொல்லை இதற்கு முன் ஓரிரு முறை கேட்டிருந்தாலும் இதற்கு என்ன பொருள் என்று மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை போலும். இன்று ஒரு வலைப்பதிவு போடுவதற்காக ஒள என்று தொடங்கும் வார்த்தைகளை கூகுளில் தேடியபோது இந்தச் சொல் அகப்பட்டது. மேலும் தேடிய போது கூகிளாண்டவரால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மூன்றினைத் தான் தர முடிந்தது.

1. ஒளவியம் பேசேல் - ஒளவையாரின் ஆத்திச்சூடியில் வருவது இது. ஓரிடத்தில் இதற்கு 'பொறாமையுடன் கூடிய சொற்களைப் பேசாதீர்கள்' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். இன்னோரிடத்தில் ஒளவியம் என்பதற்குப் 'பொறாமை, தீவினை' என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.

2. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு - இதுவும் ஒளவையார் சொன்னதே. கொன்றை வேந்தனில். இங்கும் பொறாமை என்ற பொருளே ஒளவியம் என்ற சொல்லிற்குத் தரப்பட்டுள்ளது.

3. மூன்றாவது சுட்டி சண்முகக் கவசத்தைத் தந்தது.

ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனை மல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க

பொறாமை உள்ளோர், உயிர்வதை செய்து ஊன் உண்போர், அசடர், பேய், அரக்கர், புல்லர், பகைவர்கள் எவரானாலும் என்னுடன் மல்லாட (சண்டையிட) தாவியே (தவ்வியே) வருவார்கள் ஆயின் உலகத்தில் அசையும் அசையாப் பொருட்கள் யாவும் காக்கும் பெருமையுடைய சூரனை எதிர்த்தவன் கையில் இருக்கும் வேல் காக்கட்டும்.

(தெவ்வர் - பகைவர்.
சராசரம் - சரம் + அசரம். அசையும் பொருட்கள் சரம். அசையாப் பொருட்கள் அசரம்.
புரத்தல் - காத்தல்.
கவ்வு - பெருமை.
அயில் - வேல்)

ஒளவில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கின்றன. இந்த 'ஒளவியம்' என்ற சொல் அழகான சொல்லாக இருக்கிறது. நாமும் பொறாமை என்ற சொல்லைப் பல இடங்களில் புழங்குகிறோம். ஓரிரு முறை பொறாமை என்று சொல்லாமல் ஒளவியம் என்றுச் சொல்லத் தொடங்குவோமானால் இந்தச் சொல் மீண்டும் புழக்கத்திற்கு வரும்.

உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதாவது சொல் 'ஒள' என்று தொடங்குகிறதா? உடனே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது 'ஒளவை'யும் 'ஒளடதமு'ம் தான். வேறு ஏதாவது சொல்?

Friday, May 02, 2008

விஷயம்: விதயம், செய்தி, சங்கதி...

இது ஏறக்குறைய மறுபதிவு போலத் தான். இந்தத் தலைப்பில் பதிவு போடவில்லையே ஒழிய இந்த 'விஷயம்' என்ற சொல்லை பின்னூட்டங்களில் நண்பர்கள் நன்றாக அலசியிருக்கிறார்கள். தருமி ஐயா இந்த 'விஷயம்' என்பதற்கான கருத்துரையாடல்கள் ஒரு தனிப்பதிவாக இருந்தால் அது நன்றாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியதாலும் பின்னூட்டங்களில் பேசப்பட்ட கருத்துகள் தனிப்பதிவாக இருந்தால் அவற்றைத் தேடிப் படிக்கவேண்டிய தேவை இல்லாமல் எளிதாகப் பதிவுகளின் தலைப்புகளை வைத்துப் படிக்க எளிதாகும் என்பதாலும் இங்கு அதனைத் தனிப்பதிவாகப் போடுகிறேன்.

விஷயத்திற்கு 'செய்தி' 'சேதி' என்ற சொற்களை சில இடங்களில் புழங்கலாம்.

'கருத்து' என்ற சொல்லும் சில இடங்களில் பொருத்தமாக வரும்.

'விடயம்' என்று சிலர் புழங்குகிறார்கள். அது வலிய வரவழைத்துக் கொண்ட சொல் போல் தோன்றுகிறது. அது எப்படி 'விஷயம்' என்ற சொல்லுக்கு நேரான சொல் ஆகிறது என்று யாராவது விளக்குவார்களா?

'சங்கதி' என்ற சொல்லையும் சில இடங்களில் பயன்படுத்தலாம்.

'தகவல்' என்றும் சொல்லலாம்.

இவையெல்லாம் நண்பர்களின் பின்னூட்டங்களில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறேன். இவை சரியான சொற்களாகத் தோன்றுகிறதா? எந்த இடங்களில் பயன்படுத்தலாம் என்று எடுத்துக்காட்டுகள் தர முடியுமா? வேறு ஏதேனும் சொற்கள் விஷயம் என்பதற்குப் பதிலாகப் புழங்கலாமா? நண்பர்களே சொல்லுங்கள்.

Thursday, May 01, 2008

உயிரெழுத்துகள் பத்தா? பன்னிரண்டா?

உயிரெழுத்துகள் எத்தனை என்று கேட்டு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்களில் எழுந்த கேள்வி இது. நம்மில் பலர் ஐ, ஒள போன்ற உயிரெழுத்துகள் பயின்று வரும் சொற்களை அய் என்றும் அவ் என்று எழுதுகிறார்கள்.

சில எடுத்துக்காட்டுகள்:

ஐந்து - அய்ந்து
ஐயனார் - அய்யனார்
ஐயப்பன் - அய்யப்பன்
ஐயா - அய்யா
ஐயம் - அய்யம்
ஐ.நா - அய்.நா
வைரம் - வயிரம்
ஒளவையார் - அவ்வையார்
கௌதாரி - கவுதாரி
கௌசிகன் - கவுசிகன்
மௌலி - மவுலி
பௌர்ணமி - பவுர்ணமி
பௌவம் - பவ்வம்
ரௌத்திரம் - ரவுத்திரம்
வௌவால் - வவ்வால்

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் சில சொற்களை இப்படி மாற்றி எழுதுவதில்லை.

கைதி - கய்தி
கைம்பெண் - கய்ம்பெண்
கைத்தலம் - கய்த்தலம்
சைதை - சயிதை
தை - தய்
பை - பய்
பைய - பய்ய
பையன் - பய்யன்
மை - மய் (மையம் - மய்யம் என்று எழுதுவதுண்டு)
லைலா - லய்லா
வை - வய்

ஏன் இந்தச் சொற்களை மாற்றி எழுதுவதில்லை? இப்படி சில சொற்களை மாற்றி எழுதியும் சில சொற்களை மாற்றாமல் விடுவதற்கும் ஏதாவது புதிய இலக்கணம் வந்துவிட்டதா? இல்லை சொல்லிலக்கணம் அறியாமல் போனதால் வந்த விளைவா இது? தெரிந்தவர்கள் சொன்னால் அறிந்து கொள்வேன்.

மேலே எடுத்துக்காட்டுகளில் சொன்னபடி எழுதுவது சரி; தற்போது அது நடைமுறைக்கு வந்துவிட்டது என்று சொல்பவர்கள் அப்படியே விரைவில் உயிரெழுத்துகள் பத்து தான்; ஐயும் ஒளவும் தேவையில்லை என்பதனையும் தெளிவாகச் சொல்லிவிட்டால் ஒரு அரசாணையின் மூலம் அதனைச் செயல்படுத்த பரிந்துரையும் செய்யலாம். என்ன சொல்கிறீர்கள்? :-)

டிஸ்கி: தலைப்பைப் பார்த்து சில பேர் உணர்ச்சி வசப்படுவதாகப் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. அந்தத் தலைப்பு உங்களை இந்தப் பதிவிற்கு அழைத்துவருவதற்காக வைக்கப்பட்டத் தலைப்பேயன்றி வேறில்லை. அனைவருக்கும் 'உயிரெழுத்துகள் 12' என்பதில் எந்த வித ஐயமும் இல்லை என்பது தெரியும்.