Saturday, January 26, 2008

சித்திரையா தையா? தமிழ் புத்தாண்டு தொடங்குவது என்று?

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்ற கருத்து தமிழறிஞர்களால் சொல்லப்பட்டு அது தமிழார்வம் கொண்டவர்களால் பல ஆண்டுகளாக ஏற்கப்பட்டு வந்திருக்கிறது. பொங்கல் தினத்தன்று கடந்த இரு வருடங்களாக என்னுடன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட வலைப்பதிவர்கள் உண்டு.

நேற்று தமிழாயம் என்ற கூகுள் குழுமத்தில் இருக்கும் அஞ்சல்களைப் படித்துக் கொண்டிருந்த போது தினமணியிலும் நக்கீரனிலும் வந்த இந்த இரு கட்டுரைகளையும் படித்தேன். அரசு ஆணை வெளியான பின்பு தமிழ்ப்புத்தாண்டு சித்திரையிலா தையிலா தொடக்கம் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் நண்பர்களும் இக்கட்டுரைகளைப் படிக்க விரும்பலாம் என்று எண்ணியதால் இங்கே இடுகிறேன்.

***

சித்திரையில்தான் புத்தாண்டு
எஸ். ராமச்சந்திரன்
(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)


இக்கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் "தைந்நீராடல்" எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத்
தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது.
தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும்,தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் (Spring) எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு
மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட "ஏரீஸ்" வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய
(லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம்
(பிர்தெளஸ்)
என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி - சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ
(சித்திரை)
மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது "மீன மேஷம் பார்த்தல்'' என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது *தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?
*

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். ("நாஞ்சிற்பனைக் கொடியோன்'' - புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை "புஜங்கம புரஸ்ஸர போகி" எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது.
எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.
பூம்புகாரில் இந்திர விழாவின்போது "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 - 69களில் குறிப்பிடப்படுகிறது.

*பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா?
*

இவை இரண்டிற்குமே தெளிவான விடை "அல்ல'' என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் "இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்'' என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி - பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்''
என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 -
161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும்.
ரோமானிய
நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட "ஏரீஸ்" என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 - 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, "தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்'' என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் "பிரபவ'' தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை "வியாழ வட்டம்''
எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும்.
எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், "இனம் புரிந்த", இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற''
காலகட்டத்தில், "நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் "தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர"மாக ஆராய்ந்தால் கிடைக்கும்
விடை:
"சித்திரையில்தான் புத்தாண்டு''.
நன்றி: தினமணி

***

*தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா? - நக்கீரன், **11 January
2007*


சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!

சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை.
சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து
10-03-1940)

60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக்
(60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது.
ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)

மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது.
மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.

இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள்.

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்" என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா.
சுப்பிரமணியப்
பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி.
புத்தாண்டுத்
தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2007) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.

தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை இந்துக்களது புத்தாண்டாகக் கொண்டாடலாம்.

தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு.
அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.

எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். .

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு - (புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன்)

49 comments:

பாச மலர் / Paasa Malar said...

குமரன்,

நல்ல மேற்கோள் கொண்டு விளக்கியிருக்கிறீர்கள்.

எப்படி இருந்தாலும் இரண்டு புத்தாண்டு கொண்டாடுவது இனிமேல் வழக்கமாகிவிடும்..

குமரன் (Kumaran) said...

நான் எதையும் விளக்கவில்லை பாசமலர். மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன். அவ்வளவு தான்.

நீங்கள் சொல்வது போல் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சொல்லப்போனால் மூன்று புத்தாண்டுகள். ஜனவரியில் தொடங்கும் ஆங்கிலப் புத்தாண்டு; சித்திரையில் தொடங்கும் ஒரு புத்தாண்டு; தையில் தொடங்கும் ஒரு புத்தாண்டு. இப்படி மூன்று புத்தாண்டுகள் முன்பும் இருந்தன தான்; இன்று அரசு ஆணையினால் இன்னும் அதிகமான பேருக்குத் தெரிந்திருக்கும். தமிழார்வலர்கள் மட்டுமின்றி இனி மற்றவர்களும் தைத்திங்கள் பிறக்கும் போது புத்தாண்டு கொண்டாடுவார்கள்.

கோவி.கண்ணன் said...

// Comments - Hide Original Post Collapse commentsதை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்ற கருத்து தமிழறிஞர்களால் சொல்லப்பட்டு அது தமிழார்வம் கொண்டவர்களால் பல ஆண்டுகளாக ஏற்கப்பட்டு வந்திருக்கிறது. பொங்கல் தினத்தன்று கடந்த இரு வருடங்களாக என்னுடன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட வலைப்பதிவர்கள் உண்டு. //

குமரன்,

கேஆர்எஸ் தை 1ஐ புத்தாண்டாக கொண்டாடுவதற்கு மகிழ்ச்சியை தெரிவித்து அவரது கருத்தை தெளிவாக என் இடுகை ஒன்றிஒல் சொல்லிவிட்டார். நீங்கள் அதுபோல் எதையும் உங்கள் கருத்தாக எதையும் சொல்லவில்லையே ?

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல்ன்னா என்ன பொருள்ன்னு நினைக்கிறீங்க கோவி.கண்ணன்?

கோவி.கண்ணன் said...

//குமரன் (Kumaran) said...
வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல்ன்னா என்ன பொருள்ன்னு நினைக்கிறீங்க கோவி.கண்ணன்?
//

நான் கிறித்துவ நண்பர்களுடன் கிறித்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வேன். கொண்டாடுவது இல்லை.
:)

வவ்வால் said...

குமரன்,
நன்றி!
நடு நிலையுடன் இரண்டுப்பக்கம் இருந்தும் தலா ஒரு கட்டுரை எடுத்துப்போடு இருக்கிங்க,

பலப்பதிவுகளிலும் இதை ஒத்த கருத்துக்களை தை புத்தாண்டுக்கு ஆதரவாக நான் ஏற்கனவே சொல்லிட்டேன்(இந்த கட்டுரைகள் எதையும் படிக்கமாலே)

அவர்களுக்கு தை புத்தாண்டு என்பதை ஏற்பதில் ஏனோ விருப்பம் இல்லை(தமிழ் வெறுப்பு தெளிவாக தெரிந்தாலும் , அப்படிலாம் இல்லை என்ற சப்பைக்கட்டு வேறு)

நீங்கள் தைப்புத்தாண்டு என்பது ஒரே இரவில் திமுக அரசால் திணிக்கப்பட்ட மாற்றம் சர்வாதிகாரத்தின் போக்கு, முட்டாள் தனம் என்று சொல்லாததே உங்களுக்கும் ஏற்புடையதே என்று சொல்கிறது. கோவி சொன்னது போல தனியாக சொல்லவில்லை எனினும், நீங்கள் சொன்னதாகவே நினைக்கிறேன்.

//2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் (Spring) எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு
மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.//

இதில் கொஞ்சம் தெளிவற்று இருக்கிறது நான் இதனை ஒரு காலத்தில் ஏப்ரல் 1 இல் புத்தாண்டுக்கொண்டாடினார்கள் என்று வேறு ஒரு பதிவில் சொல்லி இருந்தேன்,பலரும் அப்படிலாம் இல்லை என்று திட்டவட்டமாக சொன்னார்கள். நீங்கள் மார்ச்சில் அப்படிக்கொண்டாடினார்கள் என்று சொல்கிறீர்கள், பின்னர் அது ஏப்ரலுக்கு மாறியது என்று சொல்வது அதே தானா ?

அப்படிப்பட்ட வழக்கம் இருந்தது என்று சொல்ல வருவதாக எடுத்துக்கொள்ளலாமா?

பினாத்தல் சுரேஷ் said...

இதைத்தான் பேலன்ஸிங் என்று சொல்வார்களோ :-)))))))

தமிழறிஞர்கள் ஆய்ந்து எதைச் சொன்னாலும் ஏற்கத் தயார்தான்.. ஆனால் அதற்குமுன் மக்களை ஏற்கவைக்க எந்த முயற்சியும் செய்யப்படவில்லையே என்பதைச் சொன்னதுக்கு எனக்கு என்ன அடி பார்த்தீர்களா :-))

பினாத்தல் சுரேஷ் said...

அட.. இப்பதான் பாத்தேன்.. தமிழ் வெறுப்பாமா? நடாத்துங்க :-)

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். நீங்கள் கிறிஸ்தவர்களுடன் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்தவர் இல்லை. சரியா? நீங்கள் இந்துக்களுடன் இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் இந்து இல்லை. சரியா? நீங்கள் இஸ்லாமியர்களுடன் ஈத் பண்டிகைக்கு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் இஸ்லாமியர் இல்லை. சரியா? நீங்கள் ஆங்கிலப் புத்தாண்டிற்குப் பலருடன் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் ஆங்கிலேயர் இல்லை. சரியா? நீங்கள் இந்திய விடுதலை நாளுக்கும் குடியரசு நாளுக்கும் இந்தியர்களுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் இந்தியர் இல்லை. சரியா? தமிழர் திருநாளுக்கு வாழ்த்துகளைத் தமிழர்களுடன் பரிமாறிக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் தமிழர் இல்லை. சரியா? இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். :-))

இவற்றில் ஏதோ ஒன்று சரி என்பதால் மற்றவையும் சரியாகிவிடுமா? அல்லது சரியில்லை என்று ஆகிவிடுமா? நான் பரிமாறிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு நான் என்ன பொருள் என்று சொல்கிறேனோ அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு வேறு பொருள் புரிந்தால் அதனை வைத்துக்கொள்ளுங்கள். தவறில்லை. :-))

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர் என்ன கருத்தைச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. நான் இன்னும் படிக்கவில்லை. விரைவில் உங்களின் அந்த இடுகையைப் படிப்பேன். அப்போது தெரிந்து கொள்கிறேன் கோவி.கண்ணன். அவர் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டதால் நானும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் சொன்னதையே நான் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அவர் சொன்னதை நான் மறுக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. சரியா? இவற்றை எல்லாம் அவர் என்ன சொன்னார் என்று தெரியாமலேயே சொல்கிறேன். அவர் என்ன சொன்னார் என்று படித்துப் பார்த்தால் அப்படியே சொல்லுக்குச் சொல் ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இப்படி பதில் சொல்வதற்குக் காரணம் 'அவர்' அப்படி சொன்னார்; 'அவரைப் போன்ற' நீங்கள் என்று ஒரு ப்ரசெர் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால தான் இந்த எதிர்வினை. :-) ஏனோ இன்னைக்கு மூட் இப்படி இருக்கு. மன்னிச்சுக்கோங்க. :-)

குமரன் (Kumaran) said...

வவ்வால்.

நடுநிலைமையா? அப்படின்னா? ரெண்டு பக்கத்தில இருக்கிற கட்டுரையையும் போட்டதால அப்படி தோணுது. அம்புட்டுத் தான்.

நடுநிலைமைன்னு எதுவும் இல்லீங்க. எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கு. ஒன்றைப் பற்றி விவரம் தெரியாத வரைக்கும் ஒரு கருத்து. விவரம் தெரிந்த பின்னால் ஒரு கருத்து. சில நேரங்களில் முதலிலேயே கருத்தினை வைத்துக் கொண்டு பின்னர் அதற்குத் தரவுகளைத் தேடுவதும் நடக்கும். சில நேரங்களில்ன்னு சொல்லிட்டேனே. அது பெரும்பாலும்ன்னு இருக்கணும். சரியா? நானும் அப்படித் தானுங்க. அதனால என்னை நடுநிலைமைன்னு சொல்லாதீங்க.

தையில் புத்தாண்டு தொடங்குவதை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தமிழில் வெறுப்பு என்பதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னுடைய நிலையிலிருந்து பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பல காலங்களாக இருக்கும் ஒரு வழக்கம் மாறும் போது கேள்விகள் வரத்தான் செய்யும். அப்படி கேட்டவர்களை எல்லாம் முத்திரை குத்துவதும் அவமதிப்பதும் அவரவர் விருப்பம். உங்களைக் கூட நீங்கள் கேட்கும் கேள்விகளை எதிர் நோக்க முடியாமல் திட்டுபவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். என்னால் உங்களைத் திட்டுவதையும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நீங்கள் என்னையும் திட்டியிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு தான் இதனைச் சொல்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//அவர் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டதால் நானும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் சொன்னதையே நான் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அவர் சொன்னதை நான் மறுக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. //

குமரன்,

கேஆர்எஸ் தை 1ஐ புத்தாண்டாக கொண்டாடுவதற்கு மகிழ்ச்சியை தெரிவித்து அவரது கருத்தை தெளிவாக என் இடுகை ஒன்றிஒல் சொல்லிவிட்டார். நீங்கள் அதுபோல் எதையும் உங்கள் கருத்தாக எதையும் சொல்லவில்லையே ?

என்று தான் சொல்லி இருக்கேன். அவர் என்ன சொன்னார் என்று சொல்லவில்லை. கருத்து சொல்லவேண்டும் என்பதைத் தவிர்த்து நீங்கள் என்ன கருத்து சொல்ல வேண்டும் என்று(ம்) எதிர்பார்க்கவில்லை.

நான் சொன்னது புரியவில்லையோ ? எனது சின்ன பின்னூட்டத்திற்கு பெரிய பதில் ?

சீனப்புத்தாண்டுக்கு கூட வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறேன். பரிமாறிக் கொள்ளுதல் என்றால் ஒருவருக்கொருவர் (பரஸ்பரம்) சொல்லிக் கொள்ளுதல் என்று தான் பொருள் கொண்டேன்.

வவ்வால் இங்கே உங்களைக் குறித்த கருத்துக்களையே, படித்த பிறகு நானும் புரிந்து கொள்கிறேன்.

நானும் வவ்வாலும் ஒரே ஆள் இல்லை.
:)))

குமரன் (Kumaran) said...

தைப்புத்தாண்டு என்ற கருத்தாக்கம் கட்டாயம் ஒரே நாளில் ஏற்படுத்தப்பட்ட கருத்தாக்கம் இல்லவே இல்லை. அது அரசியல் அரங்கிலும் தமிழாய்வு அரங்கிலும் பல காலமாக இருக்கும் கருத்தாக்கமே. எனக்கு அதனால் தையில் புத்தாண்டு தொடங்குகிறது என்பதில் எந்த வித மறுப்பும் இல்லை. ஏற்புடையதே.

நீங்கள் ஏப்ரலில் கொண்டாடினார்கள் என்று சொன்னதைப் படித்தேன் வவ்வால். முட்டாள்கள் தினத்தைப் பற்றிச் சொன்னதையும் படித்தேன். மார்ச்சு 1 என்று நான் சொல்லவில்லை. அந்தக் கட்டுரையாளர் சொல்லியிருக்கிறார். எனக்கு மார்ச்சா ஏப்ரலா என்று தெரியாது.

வவ்வால் said...

குமரன்,
நன்றி!

//நானும் அப்படித் தானுங்க. அதனால என்னை நடுநிலைமைன்னு சொல்லாதீங்க.//

அப்படி இல்லை , எடுத்ததும் சர்வாதிகாரம், முட்டாள் தனம் இதுனு சாடாமல் , உங்கள் பார்வை இரண்டு பக்கமும் இருக்குனு காட்டி இருக்கிங்களே அதுவே நடு நிலை தானே.

உங்கள் மனதில் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் , அந்த பதிவோட "tone" எப்படி இருக்கு என்பதை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். அதை வைத்து சொன்னேன். உங்கள் பதிவின் குரல் அப்படி இல்லை!

//தையில் புத்தாண்டு தொடங்குவதை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தமிழில் வெறுப்பு என்பதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//

முன்னரே சொன்ன எப்படி சொல்கிறார்கள் என்று பார்க்கும் "tone"
இங்கேயும் , அவர்கள் கருத்தை சொல்வது வேறு ஒரு முன் முடிவுடன் இதை எதிர்த்தே தீருவது என்று செயல்படுவது வேறு, இது பலகாலமாக பேசப்பட்டு வந்தது என்பதை நீங்களும் சொல்கிறீர்கள், அவர்களிடம் சொன்னால் ஆமாம் எனக்கு தெரியும் ஆனால் இதை திடீர் என யாருக்கும் தெரியாமல் சொல்லிவிட்டார்கள் என்று இடக்காக பேசுகிறார்கள், இதற்கு என்ன செய்வது. பல கால கோரிக்கை என்று தெரிந்த பிறகும் யாருக்கும் தெரியாத , புரியாத விஷயம் எத்தனைப்பேருக்கு தெரியும் என்று கேள்விக்கேட்டால், எனக்கு தெரிகிறது அவருக்கும் தெரிகிறது, இது போல பலருக்கும் தெரிகிறது? அப்புறம் என்ன?

எத்தனைப்பேருக்கு தெரியும் என்று , தெரியாது என்று எப்படி இவராக சொல்ல முடியும். தமிழ் நாட்டில் வசிக்கும், தமிழ் ஆர்வம் உள்ள, தமிழ் படிக்க தெரிந்த , விஷயம் தெரிந்த அனைவருக்குமே இப்படி ஒரு சிக்கல் உள்ளது தெரியுமே, அவர்கள் என்ன ஒவ்வொரு வீடுக்கும் கடுதாசி போட்டு அபிப்ராயம் கேட்டு செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்களா?

உங்களுக்கு தெரிந்திருக்கிறது இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது என்பது, நீங்கள் அதை ஒரு நிதானத்தோடு அணுகுகிறீர்கள், அதாவது இருப்பது தெரிந்து, அதில் தவறில்லை என, ஆனால் இருப்பதே தெரியாது என்பது போல பதிவு போட்டால், ஏன் தெரியாதா என்று கேட்டால் எனக்கு தெரியும்,மற்றவர்களுக்கு தெரியுமா என்று கேட்டேன் என்பார்கள்!

அவர்களை நோக்கின் நீங்கள் 100 சதம் நடுநிலையிடன் தான் இதனை அணுகி இருக்கிறீர்கள்!

//மார்ச்சு 1 என்று நான் சொல்லவில்லை. அந்தக் கட்டுரையாளர் சொல்லியிருக்கிறார். எனக்கு மார்ச்சா ஏப்ரலா என்று தெரியாது.//

ஆமாம் மார்ச் மாதத்தில் வரும் அந்த வசந்தம் வைத்து ஒரு காலத்தில் ஏப்ரல் 1 புத்தாண்டாக இருந்தது, சுட்டி இப்போது தான் கண்டுப்பிடித்தேன்.

ஆனால் இங்கே பலருக்கும் அது குறித்து தெரியவில்லை ஏப்ரல் 1 என்று கூகிளில் போட்டாலே காட்டுகிறது.

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!
--------------------------------------
கோவி,
//வவ்வால் இங்கே உங்களைக் குறித்த கருத்துக்களையே, படித்த பிறகு நானும் புரிந்து கொள்கிறேன்.

நானும் வவ்வாலும் ஒரே ஆள் இல்லை.
:)))//

இதென்ன புது கலாட்டா? :-))

யாராவது உங்களை நான் என்று சொல்வார்களா, நீங்கள் மென்மையாக சொல்பவர் ,நான் தலையில் அடித்து இதாண்டா உண்மைனு சொன்னா கேளு என்று சொல்வேன்! :-))

Unknown said...

குமரன்,

வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் எங்காவது புத்தாண்டு கொண்டாடிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று எதோ பதிவில் படித்த ஞாபகம்.

என்னைக் கேட்டால் தைப்பொங்கல் முடிஞ்சு ரெண்டுநாள் கழிச்சு தான் புதுபுத்தாண்டுன்னு சொல்லியிருக்கணும். அதுக்கு எக்ஸ்ட்ராவா ஒரு நாள் லீவு கிடைச்சிருக்கும்ல?..இப்ப பாருங்க கூட்டத்தோடு கோவிந்தா போட்ட கதையா பொங்கல் அன்னைகே புத்தாண்டும் ஆரம்பிக்கும்னு சொல்லிட்டதால மக்கள் பொங்கலை கொண்டாடறாங்களா, புத்தாண்டை கொண்டாடறாங்களான்னு தெரியாம போயிடும்.

நல்ல வேளை சன்டிவிகூட டூ விட்டதுக்கப்புறம் புத்தாண்டு அறிவிப்பு வந்துச்சு.ஏன்னா சன்டிவி துவக்கப்பட்டது சித்திரை 1 அன்றுதான்.அதனால சித்திரை 1 அன்று அவங்க வழக்கமாக பண்ணும் அலபறையை விட அதிகமா பண்ணுவாங்க.இந்த வருஷம் என்ன பண்ணபோறாங்கன்னு தெரியலை:)

முக்கியமா கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை 1 அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் வருமா, விளம்பரம் வருமா என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்:)

அப்புறம் ஏன் எல்லோரும் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டுன்னு சொல்லி அழும்பு பண்றீங்க?அதை என்ன பிரிட்டிஷ்காரனா கண்டுபிடிச்சான் அல்லது இங்கிலீஷ் பேசறவன் கண்டுபிடிச்சானா?அது உலகம் பூராவுக்கும் பொதுவான புத்தாண்டா மாறி பலவருஷம் ஆச்சு. தமிழன் ஜனவரி 1ஐ அஃபீஷியலா தமிழ்படுத்தி பல வருஷம் ஆச்சு.அன்னைக்கு புதுடிரஸ்,கோயில்ன்னு ஜனவரி 1ஐ புத்தாண்டா மனசார ஏத்துகிட்டான்.

சராசரி தமிழன் இயல்பிலேயே மதசார்பற்றவன். செக்யூலரிசம் என்பது அவனது ரத்தத்திலேயே ஊறிய விஷயம். பழங்காலத்தில் சிவனா, விஷ்ணுவா என அடித்துக்கொண்டிருக்கும் கும்பல்களுக்கிடையே 'அரியும்,அரனும் ஒண்ணு. அறியாதவர் வாயிலே மண்ணு' என்று சொல்லிவிட்டு சிம்பிளாக போய்க்கொண்டே இருப்பான். தமிழனின் கலாசாரம் என்பது அனைத்து உலக கலாசாரங்களையும் எப்போதும் அரவணைத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வதுதான்.

ரோமானியர் துவங்கி கன்னடர், மலையாளி, தெலுங்கர், ஆங்கிலோ இந்தியர்,மார்வாடி,சேட்டு என்று யாரையும் அவன் ஏற்க தயங்கியதே இல்லை. அவர்களை அன்னியராக அவன் கருதியதே இல்லை. அவர்களும் இவனை அடக்குமுறையாளனாக கருதியதே இல்லை. இவனது இந்த பரந்த மனப்பான்மையால் கவரப்பட்டு அவர்களும் தம்மை தமிழனாக அறியதுவங்கியதுதான் நடந்தது.

வானத்தை போல் பரந்த மனம் கொண்டவன் தமிழன் என்பதற்கு இதெல்லாம் தான் உதாரணம். கலாசார கூறுகளை ஏற்பதும், கொள்வதுமே தமிழ்கலாசாரமே தவிர நிராகரிப்பதும் மறுப்பதும் அல்ல.

குமரன் (Kumaran) said...

பேலன்ஸிங் எல்லாம் செய்ய விரும்பலை சுரேஷ். ரெண்டு கட்டுரையையும் அடுத்து அடுத்து படிச்சேன். ரெண்டுலயும் விவரம் இருந்தது. அதான் எடுத்துப் போட்டேன்.

மக்களை ஏற்க வைக்க எத்தனையோ வகை இருக்கு சுரேஷ். அதில் ஒன்னு தான் அரசாணையா போடறது. இது வரைக்கும் தமிழாய்வு அரங்கிலும் கொஞ்சம் கொஞ்சம் அரசியல் அரங்கிலும் தையில் தான் புத்தாண்டு தொடங்குகிறது என்ற கருத்து பல ஆண்டுகளாக இருந்தது. முத்துகுமரன் சென்ற இரு ஆண்டுகளில் எப்போதோ பொங்கலை ஒட்டித் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் தான் என்ற கருத்துடைய இடுகையை எழுதியிருந்ததாக நினைவு. தேடிப் பார்த்தால் கிடைக்கும். இப்ப அரசாணையா வந்ததால இதுவரைக்கும் இந்தக் கருத்தைத் தெரிஞ்சுக்காத தெரிஞ்சுக்கத் தேவையில்லாத தெரிஞ்சுக்க விருப்பமில்லாத பலருக்கும் இந்தக் கருத்தைப் பற்றி தெரிஞ்சுக்க வழி கிடைச்சிருக்கே. தெரிஞ்சுக்காதவங்க எல்லாருமே எதிர்ப்பாங்கன்னு இல்லை. ம்ம்...அப்படியா...சரியாத் தானே இருக்குன்னு ஏத்துக்கிறவங்களும் இருக்கலாம். இல்லை ஏத்துக்க முடியாதுன்னு சொல்றவங்களும் இருக்கலாம். இப்படி ஒரு உரையாடல் நடப்பதற்கும் மாற்றம் விரைவாக வருவதற்கும் இப்படி திடுதிப்பென்று ஒரு அரசாணையை இடுவதும் ஒரு வகையில் நல்லது தான். இது தான் மக்களை ஏத்துக்க வைக்கிற முயற்சின்னும் சொல்லலாம். எத்தனை முறை சொன்னாலும் கேட்க வாய்ப்பில்லாதவர்களும் கேட்க விரும்பாதவர்களும் இப்ப கேட்கிறார்களே.

உங்களுக்குக் கொடுக்கும் அடியைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சாதியைக் கண்டுபிடிப்பதிலேயே குறியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். சாதியைக் கண்டுபிடித்து அதை வைத்துத் திட்டுவதில் என்ன இன்பமோ? உங்களை பார்ப்பனப் பண்ணாடை என்று திட்டும் இவர்கள் என்னை பார்ப்பன அடிவருடி என்று திட்டுவார்கள். துடைத்து விட்டுப் போங்க சுரேஷ். யாரோ எங்கேயோ சொன்னார்கள் வானத்தை பார்த்து எச்சில் உமிழாதே என்று. அது தான் நினைவிற்கு வருகிறது. உங்களுடன் எப்போதும் போல் பழகும் நண்பர்கள் இனி மேலும் அப்படித் தான் பழகுவார்கள் என்பது நிச்சயம். முத்துகுமரனும் உங்களுடன் கருத்தளவில் விவாதம் செய்வதைப் பார்த்தால் உங்களை நேரில் பார்த்தவர்கள் உங்களை இப்படித் தூற்ற மாட்டார்கள் என்று தோன்றுகிறது. நேரில் பார்க்காதவர்கள் தூற்றுகிறார்கள். அவர்கள் உங்களை அறியாதவர்கள் என்று விட்டுவிடலாம்.

குமரன் (Kumaran) said...

தமிழ் வெறுப்புன்னு வவ்வால் சொன்னாலே நீங்க தமிழை வெறுப்பவர் ஆகிவிடுவீர்களா? விடுங்க சுரேஷ். உங்களை முட்டாள்ன்னு சொல்லாமச் சொன்னார் வவ்வால். அப்ப அவர் மட்டும் தான் அறிவாளியா? இப்படி மற்றவர்களைத் தாழ்த்திப் பேசாதீர்கள் என்று அப்போது ஒன்றும் சொல்லவில்லை என் நண்பர் கோவி.கண்ணன். பின்னர் வி.எஸ்.கே. வந்து அறிவைப் பற்றி பேசிய போது பொத்துக் கொண்டு வந்தது. கோவி.கண்ணன் சொன்ன கருத்து முழுக்க முழுக்க எனக்கு ஏற்புடைய கருத்து. ஆனால் அது ஏன் வி.எஸ்.கே. சொல்லும் போது மட்டும் வருகிறது? வவ்வால் சொல்லும் போது வரவில்லை? வவ்வால் முட்டாள் என்று உங்களைச் சொல்லும் போது வராத ஞானம் அவருக்கு எந்த 'போதி மரத்தைப்' பார்த்த பிறகு வந்ததோ!

நான் சொல்றது என்னன்னு உங்களுக்குப் புரியுதோ இல்லையோ யாருக்குப் புரியணுமோ அவங்களுக்கு நல்லா புரியும்ன்னு நினைக்கிறேன்.

நீ மட்டும் எல்லா இடத்திலயும் போயி எல்லாத்தையும் பேசறியான்னு என்னைக் கேக்கலாம். இல்லை தான். என்ன சொல்ல வருகிறேன் என்றால் நானும் அவரும் எல்லோரும் ஒரு சார்பாகத் தான் இருக்கிறோம் என்பது தான்.

கோவி.கண்ணன் said...

//பின்னர் வி.எஸ்.கே. வந்து அறிவைப் பற்றி பேசிய போது பொத்துக் கொண்டு வந்தது. கோவி.கண்ணன் சொன்ன கருத்து முழுக்க முழுக்க எனக்கு ஏற்புடைய கருத்து. ஆனால் அது ஏன் வி.எஸ்.கே. சொல்லும் போது மட்டும் வருகிறது? //

எனக்கு தெரிந்தவர்களின் கருத்திற்கு ஏன் என்று கேட்பதற்கு எனக்கு தைரியம் உண்டு. மற்றவர்களிடம் கேட்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. விஎஸ்கேவிடம் கேட்ட கேள்விக்கு அனானிகள் எனக்கு பதில் சொல்லிச் சென்றார்கள். அந்த அனானிகள் யார் என்பதும் என்னால் ஊகிக்க முடியும்.

ஆனித்தரமாக சொல்லப்படும் விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல், 'மடத்தனமான கருத்து' என்று உங்களுக்கு ஏற்புடைய கருத்தை எவராவது இடித்துரைத்தால் பொத்துக் கொண்டு வரலாம்.

//ஆனால் அது ஏன் வி.எஸ்.கே. சொல்லும் போது மட்டும் வருகிறது?//

நீங்கள் மறைமுகமாக சுட்டிக் காட்டினாலும், தெளிவாகவே சொல்லிவிடுகிறேன்.

அதற்கும் வீஎஸ்கே பூனூல் போட்டு இருப்பதற்கும் தொடர்பு இல்லை. எனது இடுகையில் அவர் அதுபோன்று சொல்லும் போதெல்லாம் அதே பதிலைத்தான் சொல்லி இருக்கிறேன்.

கருத்துக்கு எதிர்கருத்து என்பது தான் விவாதம். அதைவிடுத்து, அறிவுகெட்டத்தனமானது, மடத்தனமானது என்றால் தான் மட்டும் அறிவாளி என்று சொல்வது எந்தவகையில் ஞாயம் ? என்று கேட்டதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. நான் அதுபற்றி கருத்து சொல்ல தேவை இல்லை என்று நினைக்கவில்லை. காரணம் தை 1க்கு ஆதரவாக நான் இரு இடுகைகளை எழுதி இருந்தேன்.

ஒரு சிறிய கேள்விக்கு ஏன் நீட்டி முழக்குகிறீர்கள் இதுதான் காரணமா ? என்று என்னால் கற்பனையாக எதையும் எழுத முடியாது.

இத்துடன் இந்த இடுகையில் எனக்கு மேலும் கருத்துக்கள் இல்லை. என் கருத்துக்களை தெரிந்த நீங்கள் மேலும் கேள்வி எழுப்பினால் நான் என்ன சொல்வேன் என்பதை நீங்களும் ஓரளவுக்கு அறிவீர்கள் என்பதால் முற்றுபுள்ளி. விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

கோவி.கண்ணன் said...

//வவ்வால் சொல்லும் போது வரவில்லை? வவ்வால் முட்டாள் என்று உங்களைச் சொல்லும் போது வராத ஞானம் அவருக்கு எந்த 'போதி மரத்தைப்' பார்த்த பிறகு வந்ததோ!

நான் சொல்றது என்னன்னு உங்களுக்குப் புரியுதோ இல்லையோ யாருக்குப் புரியணுமோ அவங்களுக்கு நல்லா புரியும்ன்னு நினைக்கிறேன்.
//

என்னிடம் கேட்டு இருந்தால் சொல்லி இருப்பேன். என்னைப்பற்றி எழுதி அதையேன் சுரேஷிடம் கேட்கிறீர்கள் ? என் கருத்து அவர் எப்படி பொறுப்பாவர் ?

உங்கள் எனக்கான முதல்மறுமொழியைப்
அது என் இஷ்டம் என்று சொன்னால் எனக்கு ஒன்றும் பதில் இல்லை. நடத்துங்க. எப்படியோ கும்முவதற்கு ஒரு சான்ஸ், நானாக வந்து தலையைக் கொடுத்ததால் அது அதிகமாகவே நடக்குது. உங்கள் பதிவு உங்கள் கருத்து மகிழ்ச்சியுடனே செய்யுங்கள். எனக்கு ஒன்றும் இல்லை.

குமரன் (Kumaran) said...

//எனக்கு தெரிந்தவர்களின் கருத்திற்கு ஏன் என்று கேட்பதற்கு எனக்கு தைரியம் உண்டு. மற்றவர்களிடம் கேட்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. //

அப்படியே என் கருத்து கோவி.கண்ணன். உங்களை ஏன் கேள்வி கேட்கிறேன் என்பதற்கு இது தான் காரணம். நேரடியாக உங்கள் பெயரைச் சொல்லிக் கேட்கும் தைரியம் எனக்கு இருப்பதற்குக் காரணம் நீங்கள் தெரிந்தவர் என்பது தான்.

//ஆனித்தரமாக சொல்லப்படும் விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல், 'மடத்தனமான கருத்து' என்று உங்களுக்கு ஏற்புடைய கருத்தை எவராவது இடித்துரைத்தால் பொத்துக் கொண்டு வரலாம்.
//

அதே போல் வாதம் விவாதம் செய்து கொண்டிருக்கும் போது நேரடியாகத் தொடர்ந்து செய்து வராமல் இடுப்புக்குக் கீழ் தாக்குவதைக் கண்டாலும் பொத்துக் கொண்டு வர வேண்டும். எனக்கு அதனால் தான் பொத்துக் கொண்டு வருகிறது போலும். நீங்கள் அப்படி தாக்கவில்லை. அப்படித் தாக்குபவர்களுக்கு ஊக்கம் தருகிறீர்கள்.

நீட்டி முழக்குகிறேன் என்பது உண்மை தான் கோவி.கண்ணன். உங்களைத் தாக்குவதைப் போல் அமைவதற்கு ஏற்கனவே மன்னிப்பு கேட்டேன். இன்னும் ஒரு முறை கேட்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். என் கருத்துகளைக் கூறுவதற்கு உங்கள் பேச்சுகள் ஒரு வாய்ப்பாக அமைகின்றன. அவ்வளவு தான்.

//என் கருத்துக்களை தெரிந்த நீங்கள் மேலும் கேள்வி எழுப்பினால் நான் என்ன சொல்வேன் என்பதை நீங்களும் ஓரளவுக்கு அறிவீர்கள்//

இது முழுக்க முழுக்க உண்மை தான். உங்கள் கருத்துகளை நான் அறிவேன். நான் மேன்மேலும் கேள்விகள் எழுப்பினால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதையும் அறிவேன். அதே போல் என் கருத்துகளும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். :-)

கைப்புள்ளையைப் போல் நீங்க ரொம்ப நல்லவராக என்னிடம் மாட்டிக் கொண்டதா உணர்கிறீர்களா? மீண்டும் மன்னிக்கவும். :-)

குமரன் (Kumaran) said...

வவ்வால். Toneஐப் பற்றி நீங்கள் சொல்கிறீர்களே. இனிய உளவாக இன்னாத கூறும் கலையில் மிக நன்கு தேர்ந்தவர் நீங்கள். பல இடங்களில் பார்க்கிறேன். உங்கள் ஆணித்தரமான தரவுகளுடன் கூடிய கருத்தை இன்னும் கொஞ்சம் இனிமையாகக் கூறினால் நன்கு எடுபடுமே என்று நினைத்துக் கொள்வேன். அது உங்கள் பாணி என்று சொல்வீர்கள். அதே போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கலாமே. இது உரையாடலுக்காகத் தான் சொல்கிறேன். மற்றபடி என் பதிவிலோ மற்றவர் பதிவிலோ டோன் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் எப்படி உணரவேண்டும் என்று சொல்ல எனக்கு எந்தவித உரிமையும் இல்லை.

முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். தொடக்கத்தில் உங்களையும் கோவியையும் பல முறை குழப்பிக் கொண்டிருக்கிறேன். அதை வைத்து சில முறை கோவியிடம் நீங்களும் வவ்வாலும் ஒரே ஆள் தானே என்று கிண்டல் செய்வது உண்டு. அதனைத் தான் அவர் குறிப்பிடுகிறார்.

அவர் பெரும்பாலும் மென்மையாகத் தான் கருத்தைக் கூறுவார். ஆனால் சில நேரம் (என்னைப் போல்?!) சீறியதும் உண்டு.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரன். புரிதலுக்கும் ஆறுதலுக்கும் -- தேவைப்படுகிறது.

புத்திசாலிகள் முட்டாள்களின் வரையறைகள் திருத்தப்படும் காலம் இது.

ஒரு விஷயம் தெரியாமல் எழுதும்போது தெரியவில்லை என்று எழுதுபவன் முட்டாள். நினைவிலிருந்து எழுதினேன், முன்பின்னாக இருக்கலாம் என்று எழுதுபவன் புத்திசாலி. தவறான கருத்து என உணர்ந்தால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்பவன் முட்டாள், அதைப்பற்றிக் கவலையே படாமல் நாம் மாட்டிக்கொண்டது தெரியாத வேறிடத்தில் கும்மி அடிப்பவன் புத்திசாலியோ புத்திசாலி!

அரை லாஜிக் கூட இல்லை.. இது 0.00001% லாஜிக் ஆக இருக்கிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை?//

மாதங்களின் பெயர்கள்=ஆண்டுகளின் பெயர்கள்-னு இருக்கணுமோ?

மாதங்கள் பெயர் எல்லாம் ஏற்கனவே தமிழில் தானே இருக்கு! லக்கிலுக் பதிவிலும் இதையே தான் சொல்லி இருந்தேன்!
மாதங்களையும் சுறவம், துலைன்னு மாத்திடலாமேன்னு அவர் சொன்ன போது அவை எல்லாம் வானியல் ராசிப்படி அமைந்த தமிழ்ப் பெயர்கள் என்றாலும், தற்போதைய மாதங்களின் பெயர்களே தமிழ்ப் பெயர்கள் தான்!

புத்தாண்டை மகிழ்ச்சியாக் கொண்டாடனும்னு சொல்லுவாங்க! ஆனா எங்கே பார்த்தாலும் வாய்ச்சொல்லால் அடிச்சிக்கிட்டே கொண்டாடுறாங்களே! :-(

என்னமோ போங்க! தையொரு திங்களும்-னு நாச்சியார் திருமொழி ஆண்டாள் ஸ்டைல்-ல நானும் சொல்லிக்கிறேன்!
நண்பர்கள் அனைவர்க்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு - தைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

குமரன்,
நன்றி!

குமரன் இப்பின்னூட்டத்தை அனுமதிக்கவும்!

//வவ்வால். Toneஐப் பற்றி நீங்கள் சொல்கிறீர்களே. இனிய உளவாக இன்னாத கூறும் கலையில் மிக நன்கு தேர்ந்தவர் நீங்கள். //

நன்றாக சொன்னீர்கள் நான் எப்போதும் அப்படிப்பேசுபவன் என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள், ஆனால் பலர் பொதுவாக கனியை கொய்பவர்கள், தமிழ் என வரும் போது காயைக்கொய்பவர்களாக பேசுவதால் அந்த வித்தியாசம் தெளிவாக தெரிகிறது என்று சொல்கிறேன்.

என்னைப்போல எப்போதும் வேகமாக பேசிக்கொண்டிராமல் தமிழுக்கு எதிராக பேசும் போது மட்டும் அவர்களுக்குஏன் இந்த கூடுதல் உத்வேகம் .? எனவே தான் டோனைப்பற்றி நான் பேசுகிறேன். இல்லை எனில் அது பற்றிக்குறிப்பிட்டு இருக்க மாட்டேன்.

--------------------------

சுரேஷ்,

நீங்களே உங்கள் வாயால் மாட்டிக்கொண்டீர்கள் என்பது உங்கள் பதிவு ,பின்னூட்டம் இரண்டிலிருந்தும் தெரிய வரும் போது இங்கே , மறைமுகமாக என்னைப்பார்த்து சொல்வது சிரிப்பை தான் தருகிறது.

நான் செய்தது அவர் செய்வதற்கு முன்னர் என்று எழுதுவதற்கு பதில அவர் செய்த பொழுது என்று எழுதியதால் ஏற்பட்ட ஒரு பிழை, அப்போதும் கூட பெரிதாக குற்றம் காண முடியாது அதில் ஏன் எனில் ஒருவர் மாற்றம் செய்த பொழுது அப்படி ஆச்சு என்றால் அவர் மாற்றம் கொண்டு வராத போது வேறு ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று அர்த்தம் அதிலே இருக்கிறது, ஆனால் வார்த்தைக்கு வார்த்தை பிடித்துப்பொருள் தேடுபவர்களுக்கும் தெளிவாகட்டுமே என்று நான் எழுதியதில் பிழை என்பதையும் ஏற்றுக்கொண்டேன் அப்போது. மேலும் அந்த நாள் என்பது அடிக்கடி மாற்றப்பட்டது என்பதை சொல்வதே அதில் பெரிதாக எதுவும் அழுத்தம் இல்லை. என்னை திருத்தியவரும் மாறிவரும் என்பதை தான் சொல்லி இருந்தார்.

ஆனால் நீங்கள் செய்தது என்ன ? உங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் ஆண்டு இருப்பது தெரியாதா, அப்புறம் எப்படி திடீர் மாற்றம் என்று சொன்னீர்கள் என்று கேட்டால், தெரியும் என்றீர்கள், அப்புறமும் நீங்கள் இதை ஒரு திடீர் மாற்றம் என்றே தொடர்ந்து பேசி வருவது ஏன்? இதைத்தான் நான் கேட்டேன்.

அரசுக்காலண்டர் என்றில்லை,சாதாரணமாக சில சிவகாசி தினசரிக்காலண்டர்களில் கூட திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிட ஆரம்பித்து வெகு காலம் ஆச்சு , ஆனால் பூனை கண்ணை மூடியது போல பேசியது நீங்கள், குறிப்பிட்டுக்கேட்டால், புலம்பல் தான் வருகிறது! :-))

முதலில் எழுதியதை மாற்ற உங்கள் ஈகோ தடுக்கிறது போலும்!

மேலும் ஒருவர் ஆக்கப்பூர்வமாக பேசுகிறார் நீங்கள் அப்படிப்பேசவில்லை, அவருக்கு தோன்றியது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை என்றும் சொன்னீர்கள்,(நான் அப்படி என்ன பேசிவிட்டேன் ?)

அடிப்படை எதுவும் இல்லை என்றாலும் சரி கேள்விக்கேட்க உரிமை இருக்கு என்று நினைத்தேன், ஆனால் முதல் பின்னூட்டமாக உங்கள்ப்பதிவில் யாரும் உருப்படியாக பேசுவார்கள் என நினைக்கவில்லை என்று ஒருவர் பின்னூட்டம் போட்டதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் பதிலே வரவில்லை. என்னைப்பார்த்து கேட்டக்கேள்வியை அவரைப்பார்த்தும் கேட்டு இருந்தால் நீங்கள் வருத்தப்படுவதில் நியாயம் இருக்கு. ஏன் இந்த பாரபட்சம்?

ஓகை said...

///நன்றி குமரன். புரிதலுக்கும் ஆறுதலுக்கும் -- தேவைப்படுகிறது.///

பினாத்தலாரே, உங்கள் பதிவில் இருக்கும் பெரும்பாலானவற்றில் உடன்பட்ட போதிலும் அங்கு பின்னூட்டமிடாததை தவறாக உணர்கிறேன். எதிர்கருத்துகளுக்கு சிறப்பாக பதில் கூறி இருக்கிறீர்கள்.

ஓகை said...

குமரன், இந்த தைப் புத்தாண்டு தொடக்கத்தில் எனக்கு பல ஐயங்கள் இருக்கின்றன. இது திருவள்ளுவராண்டு என்று அவர் பிறந்த நாளை முதல் நாளாகக் கொண்டு ஓர் ஆண்டுக் கணக்கை உருவாக்கி அவரை சிறப்பித்ததற்கு துரோகமான செயலாகும். ஆண்டின் பெயரிலிருந்து அவர் பெயரை நீக்கியும் அவர் பிறந்த நாளாகக் கருதப்படும் தை இரண்டாம் நாளை மாற்றியும் உருவாக்கப்படும் ஆண்டுக் கணக்கு எனக்கு உடன்பாடானது அல்ல.

முன்பனிக் காலம் என்று தமிழ்நாட்டின் பூகோளத்துடனும் வாழ்வினுடனும் கலந்த ஒரு பருவத்தை இரண்டாகப் பிரிக்கும் இந்த ஆண்டுக் கணக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். திருவள்ளுவராண்டு என்று இருந்தபோது ஒரு தமிழ் மாமனிதரின் பிறந்த நாளையும் அவரின் சகப்தத்தையும் நினைபடுத்திக் கொண்டிருந்ததை இப்படி மாற்றுவது எனக்கு ஏற்புடையதல்ல.

ஓகை said...

///வவ்வால். Toneஐப் பற்றி நீங்கள் சொல்கிறீர்களே. இனிய உளவாக இன்னாத கூறும் கலையில் மிக நன்கு தேர்ந்தவர் நீங்கள். பல இடங்களில் பார்க்கிறேன்.///

இன்சொல் பேசி மற்றவர்களை மகிழ்விக்காவிட்டாலும் இழிசொல் பேசி மற்றவர்களை இம்சிக்காமல் இருக்கலாம். ஆனால் சில கருத்தாக்கங்களை இழிசொல் மூலமாகவே வலியுறுத்த முடியும் என்கிற முன் முடிவோடு சிலர் இருக்கிறார்கள். இழிசொல் இல்லாமல் பேச முடியாதவர்களிடம் எவ்வளவு அறிவு இருந்தாலும் என்ன பயன்? அவர் எத்தனை நூல்களை கற்றிருந்தாலும் என்ன பயன்?

விவாதத்தில் வெல்ல இழிசொல்லையும் துணைக்கு அழைப்பவருக்கு அவருடைய அறிவில் அவருக்கே முழு நம்பிக்கை இல்லை என்றுதானே நாம் கருத முடியும்.

ஒருவரை முட்டாள் என்று தீர்மானிக்கும் அறிவு உடையவரால் முட்டாள் என்று யாரையும் விளிக்க முடியுமா?

இழிசொல்லின் துணையோடு செய்யப்படும் வாதங்கள் எவையும் பொருட்படுத்தத் தக்கவை அல்ல.

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது?"
- திருக்குறள்.

வவ்வால் said...

ஓகை,
//திருவள்ளுவராண்டு என்று இருந்தபோது ஒரு தமிழ் மாமனிதரின் பிறந்த நாளையும் அவரின் சகப்தத்தையும் நினைபடுத்திக் கொண்டிருந்ததை இப்படி மாற்றுவது எனக்கு ஏற்புடையதல்ல.//

இப்பவும் திருவள்ளுவராண்டு என்று தான் வரும். ஒரு முழுமை படுத்துவதற்காக தை -1 என்று வைத்துள்ளார்கள் அவ்வளவே.

கால்கரி சிவா said...

எனக்கு ஒரு சந்தேகம் ஆண்டாண்டு காலமாக சித்திரை 1 தான் வருட பிறப்பு. இது சரித்திரம். சரி சரித்திரத்தில் தவறு நிகழ்ந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அதை சரி செய்ய முயல்கிறாரா கருணாநிதி. விளைவுகள் பயங்கரமாக இருக்கும். எல்லா சரித்திர தவறுகளையும் சரி செய்ய வேண்டி இருக்கும்.

கால்கரி சிவா said...

மேலும் ஒன்று இந்த அரசாணை அடுத்து வரூம் அரசால் விலக்கப்படும்.

அடுத்து கருநாநிதியும் அவரது குடும்பத்தாரும் தோற்பது உறுதி

வவ்வால் said...

ஓகை,

பாதி உண்மையை மட்டுமே சொல்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்பவரிடம் அவர் பாஷையில் புரியும் படி சொல்வது உங்களுக்கு எப்படி தெரிகிறது?

//ஒருவரை முட்டாள் என்று தீர்மானிக்கும் அறிவு உடையவரால் முட்டாள் என்று யாரையும் விளிக்க முடியுமா?//

எனக்கு முன்னரே ஒருவர் இங்கே ஆக்கப்பூர்வமாக எவரும் பேசமாட்டார்கள் என்று ஒருவர் சொன்னப்பிறகும், அதை இன்முகத்துடன் வரவேற்கும் ஒருவர் என்னை மட்டும் ஆக்கப்பூர்வமாக பேசுங்களேன் என்றால் எப்படி, நானும் அதை எல்லாம் பார்த்து விட்டு தானே பேச துவங்குகிறேன், எனவே நான் தவறு செய்தாலும் அதை தூண்டியது அவர்களே!(என் தவறு மட்டும் பார்த்த உங்களால் அதைப்பார்க்க முடியாதது எந்த வகையில் சேர்த்தி)

உங்களுக்கு ஏதேனும் நன்றிக்கடன் பட்டியல் இருக்கும் அதனை சரி செய்ய என்னை வைத்து விளையாட வேண்டாம் ஓகை!

எதிரிகளை விட கூட இருந்தே குழிப்பறிப்பவர்கள் தான் மிக அபாயகரமானவர்கள், தமிழுக்கு அப்படி உடன் இருந்து கெடுதல் செய்வோர் கூட்டம் அதிகம்!

ஓகை said...

//உங்களுக்கு ஏதேனும் நன்றிக்கடன் பட்டியல் இருக்கும் அதனை சரி செய்ய என்னை வைத்து விளையாட வேண்டாம் ஓகை!//

நன்றியில் நான் கடனெல்லாம் வைத்துக் கொள்வதில்லை வவ்வால் அவர்களே!

உங்களை வைத்து நான் விளையாட முடியுமா?

தருமியின் பதிவில் உங்களுடன் வாதாட முடியாமல் தோற்று ஒடிய மஹா மூடன் அல்லவா நான்!

அங்கே மூடன் என்று உங்களால் முத்திரை குத்தப்பட்டவன் அல்லவா நான்!

உங்கள் பதிவில் கூட இன்று விடாமல் கருப்படிக்கப் பட்டவன் அல்லவா நான்!
அங்கு உங்கள் கருத்தை நான் எதிர்க்கவில்லை என்றாலும்!

உங்களை வைத்து நான் விளையாடுவேனா?

வவ்வால் said...

ஓகை,
//நன்றியில் நான் கடனெல்லாம் வைத்துக் கொள்வதில்லை வவ்வால் அவர்களே!//

நீங்கள் கடன் இல்லாமல் இருப்பது எனக்கும் மகிழ்சியே, ஆனால் , ஏனோ அடுத்தவருக்காக ஆஜர் ஆகி வாதாடினீர்கள் , அதனால் தான் அப்படிக்கேட்கும் படி ஆச்சு :-))

என்னை ஆக்கப்பூர்வமாக பேச சொன்னார்கள் , ஆனால் ஆக்கப்பூர்வமாக இங்கே யாரும் பேச மாட்டார்கள் என்று சொன்னதை வரவேற்ற ஒருவரால் எப்படி அதை கேட்க முடியும், என்றால் உங்கள் ரத்தம் கொதிக்கிறது என்ன விந்தை!

நான் கனி இருக்க காய் கவர்ந்தேன் என்று சொல்கிறார்கள் சரி அதனையும் ஏற்றுக்கொள்வோம், நான் ஒரு முரடன், பல சமூக அவலங்களை சொல்லும் போதெல்லாம் காட்டமாகவே பேசிவிட்டேன், ஆனால் இது வரைக்கும் சாது வேஷம் போட்ட பலரும் , தமிழ் என்று வந்தால் மட்டும் அது வரைக் கனிக்கொய்தவர்கள் எல்லாம் காய் கவர போவதன் மர்மம் என்னவோ?

அவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்லவா , எதற்கும் இத்தனை ஆவேசம் காட்டாதவர்கள் இப்போது மட்டும் சீறுவதேன்!

//தருமியின் பதிவில் உங்களுடன் வாதாட முடியாமல் தோற்று ஒடிய மஹா மூடன் அல்லவா நான்! //

நேர்ப்படப்பேசினால் அது இடித்தால் நான் என்ன செய்வேன் :-))

//உங்கள் பதிவில் கூட இன்று விடாமல் கருப்படிக்கப் பட்டவன் அல்லவா நான்!//

மேலும் என்பதிவில் உங்களுக்கு நான் நன்றி என்று தானே சொன்னேன் வேறு எதுவும் சொல்லவில்லையே, அதில் என்ன கறுப்பு பூசப்பட்டது?

புரியவில்லை விளக்கவும்!

குமரன் (Kumaran) said...

ஓகை ஐயா. வவ்வால். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில் எனக்கு நிறையது புரியவில்லை. வருகின்ற பின்னூட்டங்களை வெளியிடுகிறேன். (இது வரை ஒரே ஒரு பின்னூட்டத்தைத் தான் இந்த இடுகையில் வெளியிடவில்லை. ஆனால் அது வேறு இடங்களில் வந்திருக்கிறது). உங்கள் உரையாடல் என்ன பேசுகிறது என்று முழுவதும் புரியாததால் வெளியிடலாமா கூடாதா என்றே தெரியாமல் வெளியிடுகிறேன். இது தனிப்பட்ட இருவரின் உரையாடல் என்றால் அதில் பேசப்படுபவை இந்த இடுகைக்குத் தொடர்பில்லாதவை என்றால் இங்கே தொடரவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இதுவரை வந்த பின்னூட்டங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லி முடியவில்லை. இன்று மாலைக்குள் அவற்றிற்கும் பதில் சொல்லிவிட முயல்கிறேன்.

வவ்வால் said...

குமரன்,
//நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில் எனக்கு நிறையது புரியவில்லை. //

எனக்கும் ஓகை பேசுவது புரியவில்லை, நீங்கள் கனி இருக்க காய் கவர்ந்தற்று என்று சொன்னதும் அதன் பின்னர் அவரும் போய்க்கொண்டு இருக்கிறார், ஆனால் அவர் சொல்வது இப்பதிவுக்கு சம்பந்தமாக எனக்கும் தோன்றவில்லை, என்னுடன் ஆன அவரது முந்தைய வழக்காடல்களையும் இங்கு கொண்டு வரப்பார்ப்பது போல தோன்றுகிறது, நான் என்ன செய்வது?

மேலும் நான் அவரைக்கேட்காத, வேறு ஒருவரைக்கேட்ட கேள்விக்கும் அவரே பதில் அளிக்க முன்வந்துள்ளார், அது அவரது பறந்த மனப்பான்மை எனலாம், என்னை ஏன் இப்படி என்று நீங்கள் கேட்டால் என்ன சொல்வேன்?


எனவே இத்துடன் எனது பின்னூட்டங்களை நிறுத்திக்கொள்கிறேன்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் செல்வன். ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு இல்லை தான். அது உலகம் பூரா பலரும் கொண்டாடும் புத்தாண்டா மாறிவிட்டது தான். இந்தியாவைப் பொறுத்த வரை ஆங்கிலேயர்கள் மூலமாக அது நமக்குத் தெரிந்தது என்பதால் வழக்கில் எல்லோருமே ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்கிறோம். அதில் தவறு ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை. அமெரிக்காவில் இது வரை இதனை ஆங்கிலப் புத்தாண்டு என்று சொன்னதில்லை. சொல்லிப் பார்த்தால் இங்குள்ளவர்கள் எப்படி எதிர்வினை செய்கிறார்கள் என்று பார்க்கலாம். :-)

//இவனது இந்த பரந்த மனப்பான்மையால் கவரப்பட்டு அவர்களும் தம்மை தமிழனாக அறியதுவங்கியதுதான் நடந்தது.
//

இது என் வரையில் உண்மை. என் முன்னோர்கள் பலரும், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சௌராஷ்ட்ர மொழி பேசும் பலரும் (வெறுமனே சௌராஷ்ட்ரர் என்று சொன்னால் நான் சாதியைப் பற்றிப் பேசுகிறேன் என்று திரிக்கிறார்கள் - அதனால் இந்த விளக்கம்) தமிழின் மேல் இவ்வளவு ஆர்வமும் ஈடுபாடும் இலக்கிய அறிவும் கொண்டிருந்ததற்கு / கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

குமரன் (Kumaran) said...

சுரேஷ். என் கருத்தைக் கூறினேன். அவ்வளவு தான். அது உங்களுக்கு ஆறுதலாக அமைந்ததில் மகிழ்ச்சி. ஆனால் உங்களுக்கு ஆறுதல் கூறும் தகுதி எனக்குண்டா தெரியவில்லை. என் மொழியை வைத்து ஒரு நல்லவர் இங்கே நான் கூறிய கருத்தினைப் புரிந்து கொள்ள சிறு முயற்சி கூட எடுக்காமல் திட்டிய போது அதனை என் பதிவில் அனுமதிக்கவில்லை. அவர் தான் நல்லவரும் புத்திசாலியும் ஆயிற்றே. இன்னும் பல இடங்களில் சென்று இட்டிருக்கிறார். அதற்கு நான் செய்த எதிர்வினை அளவிற்கு நீங்கள் செய்யவில்லை தான். :-) :-(

நீங்கள் முட்டாள் vs புத்திசாலி இவர்களுக்குச் சொல்லும் புதிய வரையறை எனக்குப் புரியவில்லை. புரியாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். அந்தக் கட்டுரையில் அப்படித் தான் இருக்கிறது. அப்படியே இட்டுவிட்டேன்.

மாதங்களில் பெயர்கள் தமிழில் தான் இருப்பதாக எனக்கும் தோன்றுகிறது. நீங்கள் சொல்வது போல் சுறவம், துலை போன்ற பெயர்கள் இராசிகளின் பெயர்களை ஒத்து தான் இருக்கின்றன. மலையாளிகளும் மாதங்களின் பெயர்களுக்கு இராசிகளின் பெயர்களைத் தான் பயன்படுத்துவார்கள். எ-டு: மீன மாசம் என்பது பங்குனி மாதம்.

தையொரு திங்களும் என்று நாச்சியார் திருமொழியில் வருகிறது தான். ஆனால் அதற்கும் தையில் தொடங்கும் புத்தாண்டிற்கும் என்ன தொடர்பு? புரியவில்லையே. மார்கழியில் நோன்பு நோற்றுவிட்டு தையில் காமனார் தாதையைப் பெறக் காமனாரை வேண்டினார் என்ற அளவில் தெரியும். மற்றபடி அந்தப் பாட்டில் தையில் தொடங்கிய புத்தாண்டைப் பற்றிய குறிப்பு இருக்கிறதா?

குமரன் (Kumaran) said...

வவ்வால். உங்களின் நீண்ட பின்னூட்டத்தை இப்போது தான் படிக்கிறேன். டோனைப் பற்றி நான் சொன்னதை நல்ல முறை எடுத்துக் கொண்டதற்கு நன்றி. என் மேல் சினந்து கொள்வீர்களோ என்று எண்ணினேன்.

சுரேஷின் பதிவைப் படித்தேன். அதில் முதல் சில பின்னூட்டங்கள் படித்தேன். முழுதும் இன்னும் படிக்கவில்லை. அதனால் நீங்கள் அவரை நோக்கி எழுதியிருப்பவற்றில் பலவும் புரியவில்லை. அங்கே சென்று எல்லா பின்னூட்டங்களும் படித்தால் புரியலாம்.

குமரன் (Kumaran) said...

ஓகை ஐயா. தை முதல் நாளே புத்தாண்டு தொடக்கம் என்று தானே அறிவித்திருக்கிறார்கள். அது திருவள்ளுவராண்டு இல்லை என்றோ அவர் பெயர் ஆண்டின் பெயரிலிருந்து நீக்கப்படும் என்றோ எங்காவது சொல்லியிருக்கிறார்களா? திருவள்ளுவராண்டு தை முதல் நாள் தொடக்கம்; அவர் பிறந்ததாகச் சொல்லப்படும் வருடத்திலிருந்து தொடர் எண்ணாக இந்த வருடக் கணக்கு இருக்கும் என்பது தான் என் புரிதல்.

முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என்று பெரும்பொழுதுகளுடன் திணை துறை எல்லாம் வைத்து வாழ்வு நடந்தது என்றோ பழங்காலத்தில் தானே ஐயா. இன்றுமா இவற்றின் தாக்கம் தமிழர் வாழ்வில் இருக்கிறது என்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை. அப்படி ஏதும் பாதிப்பு இருக்கும் என்றும் தோன்றவில்லை. முன்பனிக்காலத்தை இப்படி இரண்டாக பிரிப்பதால் என்ன விளைவுகள் என்று நினைக்கிறீர்கள் என்பதையும் சொன்னால் புரிந்து கொள்ள முயல்வேன்.

குமரன் (Kumaran) said...

சிவா அண்ணா. இது ஒத்துக்கொள்ளக் கூடிய வாதம் இல்லை. ஒரு சரித்திரத் தவறு சரி செய்யப்பட்டால் எல்லா சரித்திரத் தவறுகளும் சரி செய்யப்படவேண்டும் என்பது சரி இல்லை. மாற்றங்கள் என்பது நிகழும். என்றும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அடுத்த ஆட்சியில் என்ன செய்யப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அப்போது இது மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் இப்போது இதனை மறுக்க வேண்டுமா என்ன?

கால்கரி சிவா said...

குமரன், இந்த மாற்றத்தை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு வாதாட முடியும் பிற்காலத்தில் அல்லது இதை முன் உதாரணமாகக் கொண்டு மேலும் சில சரித்திர மாற்றங்களை செய்ய முற்படுவர் சிலர்

எல்லாம் சரி இந்த மாற்றத்தினால் தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழ் மொழிக்கோ ஏதேனும் ஆதாயம் உண்டா? அட்லீஸ்ட் சாப்ட்வேர் கோடிங் செய்பவர்க்கு டேட் பக் பிக்ஸிங் காண்ட்ராக்ட் கிடைக்குமா ? :))

ஓகை said...

குமரன், தொந்தரவுக்கு மன்னிக்கவும். உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் வவ்வாலுக்கு நன்றாகப் புரியும். நான் இனிமேல் இது பற்றி உங்கள் பதிவில் பேசப்போவதில்லை.

ஓகை said...

//தை முதல் நாளே புத்தாண்டு தொடக்கம் என்று தானே அறிவித்திருக்கிறார்கள். அது திருவள்ளுவராண்டு இல்லை என்றோ அவர் பெயர் ஆண்டின் பெயரிலிருந்து நீக்கப்படும் என்றோ எங்காவது சொல்லியிருக்கிறார்களா? திருவள்ளுவராண்டு தை முதல் நாள் தொடக்கம்; அவர் பிறந்ததாகச் சொல்லப்படும் வருடத்திலிருந்து தொடர் எண்ணாக இந்த வருடக் கணக்கு இருக்கும் என்பது தான் என் புரிதல்.//

தமிழ்ப் புத்தாண்டு என்து சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுவதை நிறுத்தவே இந்த ஏற்பாடு. இந்நாள் வரை தமிழ்ப் புத்தாண்டு வேறாகவும் திருவள்ளுவர் ஆண்டு வேறாகவும் இருந்தது. ஆனால் இரண்டையும் ஒன்றாக்கியதில் இது திருவள்ளுவராண்டு என்று அழைக்கப்படுவது இனி பரவலாக இருக்காது என்பதே என் ஐயம். அதிகாரபூர்வமாக அப்படி செய்யவில்லை என்பது உண்மைதான்.

ஓகை said...

//முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என்று பெரும்பொழுதுகளுடன் திணை துறை எல்லாம் வைத்து வாழ்வு நடந்தது என்றோ பழங்காலத்தில் தானே ஐயா. இன்றுமா இவற்றின் தாக்கம் தமிழர் வாழ்வில் இருக்கிறது என்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை//

இருகிறது குமரன். ''சென்ற கோடையில்...'" என்றெல்லாம் பேசுவது இன்னும் வழக்கிலிருக்கிறது. மார்கழி முதல் பங்குனி வரை பனிகாலம் என்பது என் உணர்வில் இன்றும் இருக்கிறது. பருவங்கள் மனித எண்ணங்களை மாற்றும் வல்லமை கொண்டவை. தை மாதமும் ஆவனி மாதமும் அதிகமாகத் திருமணங்கள் நடக்கும் மாதங்கள் என்றாலும் இரண்டு மாதத்திலும் நடக்கும் நிகழ்வுகளை சற்று கூர்ந்து பாருங்கள்.

தை மாதத்தை ஒரு புத்தாண்டைப் போல உணரும் வழக்கமும் தமிழகக் கிராமங்களில் உண்டு. புதிதாக வெள்ளைஅடிக்கப்பட்ட வீடுகள், புது ஆடைகள், புதுப்பாண்டங்கள், புதிய பண்டங்கள், புதுமணத் தம்பதிகள், புது உறவுகள், பழங்கடன்கள் ஒழிந்த நிலை, தாராளமான செல்வ நிலை, விவசாய வேலைகள் குறைந்து மற்ற வேலைகளின் மேல் கவனம் இவ்வாறு பலவும் மக்களை புதிதாக உணரச்செய்கின்ற நிலை கிராமங்களில் இன்றும் இருக்கிறது.

ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்தால் இவை ஒரு ஆண்டின் சாதனைகளாவும் ஆண்டு நிகழ்வுகளின் நிறைவாகவும் இருப்பது தெரியும். சனிக்கிழமை மாலைக்கும் திங்கட் கிழமைக் காலைக்கும் உள்ள ஒப்பீடு தை மாதத்திற்கும் சித்திரை மாததிற்கும் பொருந்தும். இவ்வாறு தமிழர்களின் உணர்வுடன் கலந்தவிட்டது சித்திரைப் புத்தாண்டு.

ஆகவேதான் வானியல் கோட்பாடுகாளின்படி உலகின் பல பகுதிகளில் கோடையின் தொடக்கத்தில் புத்தாண்டு வரும்.

இன்னொரு செய்தி. தைமாதப் பிறப்பும் சித்திரைமாதப் பிறப்பும் வானியல் நிகழ்வுகளின் அடிப்படையில் நமது இந்து முறை பஞ்சாங்களின்படியே கணிக்கப்படுகின்றன. தமிழக அரசு எவ்வாறு தைமாதப் பிறப்பை கணிக்கப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

நண்பர் முத்துக்குமரனுடன் நேற்று ஜிமெயில் அரட்டையில் பேசிக் கொண்டிருக்கும் போது இரு வருடங்களுக்கு முன்னர் அவர் இட்ட இடுகையின் சுட்டியைக் கேட்டேன். அந்த இடுகையின் சுட்டி இங்கே: http://muthukumaran1980.blogspot.com/2006/01/blog-post_13.html

அந்த இடுகையைத் திறந்து படித்த போது ஒன்றைக் கவனித்து எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். தை ஒன்றாம் தேதியன்று 'இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் (பொங்கல்) நல்வாழ்த்துக்கள்' என்று வாழ்த்தியிருந்தார். முதல் பின்னூட்டம் என்னுடையது. அவருடைய வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு அவருக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறேன். தை மாதம் புத்தாண்டு என்ற கருத்தில் எனக்கு சிறிதும் ஐயம் அப்போதும் இருந்திருக்கவில்லை. இருந்த ஐயம் எல்லாம் 1ம் தேதியே புத்தாண்டா திருவள்ளுவர் தினமான இரண்டாம் தேதி புத்தாண்டா என்பதே. அப்போதே மிகத் தெளிவாக அவரும் தை ஒன்றாம் தேதி தான் புத்தாண்டு என்று பதிலுரைத்திருக்கிறார். இன்று தைப் புத்தாண்டிற்கு ஆதரவாகவும் சித்திரையில் தொடங்குவதற்கு எதிராகவும் பேசுகின்றவர்கள் பலரும் அன்று பொங்கல் வாழ்த்துகள் மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். பொங்கல் நாள் புத்தாண்டா என்று ஐயமும் எழுப்பியிருக்கிறார்கள்.

இப்போது என்னை 'இப்படியும் அப்படியும் பேசுகிறேன்' என்பவர்களும் 'நீ யாரடா இதனைப் பற்றிக் கருத்து சொல்வது வேறு மொழி பேசும் நாயே. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று சொல்பவரும் அதனை ஆதரித்து அந்தக் கருத்தைத் தங்கள் பதிவில் அனுமதித்தவர்களும் இதனைப் பார்த்தாவது அவர்களின் குறுகிய மனத்தை உணர்ந்து கொள்ளட்டும்.

யார் யார் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். யார் யார் அப்போதே தமிழ்ப்புத்தாண்டு தையில் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

jagan said...
This comment has been removed by the author.
jagan said...

d

jagan said...

everything is waste. . .chithirai 1 is tamil new year....because of the arrival of Christian and Muslims only made that as hindu year and now trying to change that to THAI 1 for their convenience . . . .